ஊருக்கு செல்ல ரயிலேறி இருந்தேன். தாம்பரத்தை தாண்டியதும் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக நண்பர்கள் யாராவது பகிர்ந்த புது படத்தை பார்த்து விட்டு தூங்குவது வழக்கம். கையில் விகடனை புரட்டி கொண்டிருந்தேன்.
கைதட்டல் சத்தம் கேட்டதும் திருநங்கைகள் வருகிறார்கள் என பத்து ரூபாய் எடுத்து வைத்து கொண்டேன். அந்த திருநங்கை என்னை பார்த்து என் பெயர் சொல்லி அழைத்ததும் எனக்கு ஆச்சரியம். எனது முழு பெயரை உச்சரிக்கவும் எனக்கு இன்னும் ஆச்சரியம்.
உற்று பார்த்தேன், முத்து குமார ராஜா தானே என்றேன். ஆமாம் என்பது போல் தலையசைத்தான். உட்காரு பேசலாம் என்றேன். ஏய் கலைக்ஷனுக்கு போகனும் என்றான். கலைக்ஷனை எல்லாரும் ஷேர் பண்ணிப்போம் போகனும் என்றான் பள்ளி தோழன்.
மொத்த கலைக்ஷனையும் நானே தாரேன். உட்காரு என்றேன்.அத்தனை கண்களும் வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தன. எழுந்து வாசல் பக்கம் கூட்டி சென்றேன்.
முத்து குமார ராஜா ஒன்பதாம் வகுப்பில் எனக்கு பின் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன். பிடி பிரியட் அல்லது ஏதாவது ஆசிரியர் வரவில்லை என்றால் கூட சட்டையை கழற்றி விட்டு விளையாட செல்வோம். அவன் மட்டும் சட்டை கழற்றாமல் தயங்கி நிற்பான்.
அவனுக்கு தேவயானி ரொம்ப பிடிக்கும். அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகை பூ பாட்டை அழகாக பாடுவான். அவனை தேவயானி என்று கூப்பிட சொல்வான். கூப்பிட்டால் சந்தோச படுவான். ஒரு கையால் ஒரு கண்ணை மறைத்து வெட்க படுவான்.
அவன் பக்கத்தில் இருந்த சுந்தரேசன் தான், இது ஒம்போது தொடையில கை வச்சா எப்படி துள்ளுது பாரு என்று நோண்டி கொண்டே இருப்பான்.
பத்தாம் வகுப்பில் நான் வேறு வகுப்பில் இருந்தேன். எப்போதாவது பார்த்தால் சிரித்து கொள்வோம். பத்தாம் வகுப்பிற்கு பிறகு இப்போது தான் பார்க்கிறேன்.
எப்பிடி இருக்கு. இங்க எப்படி வந்த என்றேன்.ரெண்டும் கெட்டானா பொறந்துட்டேனு அம்மா ரொம்ப அழுதாங்க. தம்பி அடிச்சான். இனிமே அங்க இருக்க முடியாதுன்னு தோனிச்சு வந்துட்டேன் என்றான்.
கல்யாணம் ஆயிட்டுச்சா என்றான். ம் என்றேன். மனைவியின் போட்டோவை பார்க்க வேண்டும் என்றான். போனில் இருந்து காட்டினேன். அழகா இருக்காங்க என்றான்.
எவ்வளவு கலைக்ஷன் ஆகும் என்றேன். குடைஞ்சு குடைஞ்சு கேட்டா 250 ரூபா வரும் என்றான். 500 ரூபாய் கொடுத்தேன் எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டேன்.சென்னையில் ரூமில் தங்கி இருப்பதாக சொன்னான். செல்போன் நம்பர் மாற்றிக் கொண்டோம்.
விழுப்புரத்தில் இறங்கி கொண்டான். நானும் அதற்கு பிறகு அவனை பற்றி யோசிக்கவில்லை. ஒருநாள் டிவியில் கும்மிபாட்டு படம் போட்டான். அவன் நியாபகம் வரவே அலைபேசியில் அழைத்தேன்.
ஏன் போன் பண்ணவே இல்லை என்றேன். பேசலாம்னு ஆசையா இருந்துச்சு போன் பேசற எடத்துல நான் இல்ல. நீ பேசினா பேசலாம்னு விட்டுட்டேன் என்றான். ரொம்ப நேரம் பேசிய பின் சொன்னான் பெரிய ஹோட்டல்ல போய் சாப்பிடனும் போல இருக்கு. என்ன கூட்டிட்டு போவயா என்றான் தயங்கி கொண்டே.
சரி என்றேன். நிச்சயம் சந்தோச பட்டிருப்பான். நீ யார கூட்டிட்டு வருவ என்றேன். நான் யார கூட்டி வர, என்ன மாதிரி ஒருத்தர தான் கூட்டி வருவேன் என்றான். நீ என்றான். நான் ப்ரெண்ட் ஒருத்தன கூட்டி வாரேன் என்றேன்.
நண்பன் ஜெயகுமாரிடம் சொன்னேன். போகலாம் மாப்ள என்றான். ஹோட்டல் முன்பதிவு செய்து போனோம். செக்யுரிட்டியிடம் எனது கெஸ்ட் என சொல்லி கூட்டி சென்று சாப்பிட்டோம்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போவயா என்றான்.
சரி என்றேன் மறுநாள் கோவிலுக்கு சென்றோம். சாமி கும்பிட்டு உட்கார்ந்தோம் அவர் என்ன டல்லா வரார் எங்க கூட வர்றது பிடிக்கலயா என்று கேட்டு சிரித்தான். அவன் கிறிஸ்டியன் அவனுக்கு கோவிலே புதிது என்றேன்.
அவனும் எதாவது பேச வேண்டும் என்று வேற எதாவது ஆசை இருக்கா என்றான் ஜெய்.
டூர் போணும் என்றான் முத்து. கார் எடுத்துட்டு ஜாலியா போய்ட்டு வருவோம் என்றான் ஜெய்.
ட்ரெயின்ல போணும். நாங்க பிச்சை எடுக்கிற அதே ட்ரெயின்ல உட்கார்ந்து படுத்துட்டு போணும் என்றான் முத்து.
எனக்கு கண்கள் கலங்கி விட்டது. ஜெய் தலையை குனிந்திருந்தான். நிச்சயம் அவனும்...