Monday 11 February 2013

ஆனந்த மழை

பனி பெய்யும் காலை
மார்கழி மாதம்
நடைப் பயிற்சி செய்ய
போயிருந்தேன்!

அதிகாலையிலே குளித்த
அந்த அழகு தேவதை
கூந்தலை துணியால்
போர்த்தி இருந்தாள்!

கீழே குனிந்து கோலம்
போட்டு கொண்டிருந்தவள்
நிமிர்ந்து பார்த்தாள்
நான் விழுந்து விட்டேன்
காதலில்!

பட்டு பாவாடை, தாவணி
ஜலக் ஜலக் கொலுசு, பூஜை கூடை
சகிதமாய் கோவிலில் பார்த்தேன்
அவள் நினைப்பு சாமியை
மறக்கடித்தது!

நான் படிக்கும் கல்லூரியில்
முதலாமாண்டு சேர்ந்தாள்
நான் காதலில்
முதலாமாண்டு மாணவன் ஆனேன்

கல்லூரியில் வேறு யாராவது
காதலிப்பதாய் சொல்லுமுன்
நான் சொல்ல நினைத்தேன்!
ஒரு பார்வை, ஒரு புன்னகை
வேறெதுவும் பேசியதில்லை
அதற்குள் காதலை சொல்வதா?

பின் வாங்கினேன்
அவள் கண்ணை பார்த்தால்
என்னால் பேச முடியவில்லை
எங்கே என் காதல்
சொல்லாமலே செத்து விடுமோ
என பயந்து
காதலை எழுதினேன்!

என் காதலை அவளிடம்
சொல்ல வான், மேகம், நிலா
மான், புறா, வானவில், ரோஜாவை
துணைக்கு அழைத்தேன் !
ஒரு மாலை நேரம்
இலேசாய் தூறி கொண்டிருந்தது
குடை பிடித்து சென்று
கொண்டிருந்தாள்
என் மனதில் காதல் மழை
பெய்தவள்!

ஓடிச் சென்று நிறுத்தினேன்
மூச்சு வாங்கினேன்
என்... மனசுல... உள்ளத..
எழுதி... இருக்கேன்... என்று
சொல்லி முடிக்கும் முன்
கடிதத்தை வாங்கி
கொண்டாள் என் இனியவள்!

மழை வலுத்தது
உற்சாகமாய் நனைந்தேன்
ஆனந்த மழையில் !
 

Sunday 3 February 2013

சினிமாவை சினிமாவாய் பார்ப்பது

சினிமாவை சினிமாவாய் பார்க்க சிலரால் முடியவில்லை ஏன் ?
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு ஊடகம். அதே சினிமாவில் அவர்களையே கிண்டல் செய்து கொள்வார்கள்.

தொழில்நுட்பம் வளராத காலத்தில் திரையில் தோன்றும் நடிகரே பாடுவதாய் மக்கள் நினைத்தனர்.சினிமா வில்லன் நடிகர் நிஜத்திலும் கொடூரமானவர் என்று நம்பினார்கள்.
சினிமா சிரிப்பு நடிகர் உண்மையிலும் கோமாளியாகவே இருப்பார்கள் என்றனர்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின் எல்லாமே மாறிவிட்டது. சினிமா கலைஞன் பேச்சை கேட்டு ஒட்டு போடுவதை கூட நிறுத்திவிட்டனர். காரணம் பெரும்பான்மையினர் சினிமாவை சினிமாவாய் பார்த்ததுதான்.

வடிவேலு முதன் முறையாக கதாநாயகனாக நடித்த புலிகேசி படம் மாபெரும் வெற்றி படம்.
அந்த படத்தில் எண்ணற்ற கருத்துகளை விதைத்திருந்தார் இயக்குனர் சிம்புதேவன்

நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை பார்த்து விட்டு கோக் / பெப்சி குடிப்பதை நிறுத்தினோம். (மிக்சிங்கு வேணும் அது இல்லாம முடியாதே!)

இதே சினிமாவில் தான் திரை துறையின் உயரிய கலைஞன் சிவாஜி கணேசனை கிண்டல் செய்கிறார்கள். இளைய திலகமும் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை.

தமிழ் படம் என்ற பெயரில் வெளிவந்த படத்தில் எத்தனை சினிமாவை கிண்டல் செய்து இருந்தார்கள். எல்லாருமே பல்லை இளித்து கொண்டு தானே பார்த்தோம்.

எல்லா சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் அம்மாவை (அவர்கள் பெத்த தாயை ) மதித்தால் தமிழ் நாட்டில் முதியோர் இல்லத்திற்கு அவசியம் இல்லையே
ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அறிவுரையை திரையரங்கோடு மறந்து விடுகிறார்கள். சினிமாவை சினிமாவாய் பார்கிறார்கள். சரி தானே

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலை எதிர்க்காத எல்லா தகப்பனும் தன் மகனை / மகளை ஓடி போக சம்மதிக்கிறான் என்று அர்த்தமா?

டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை சின்ன குழந்தைகள் பாடும் போது ரைம்ஸ் சொல்வதாக தானே நினைத்து கொள்கிறோம்!

சொந்த மகளை அரைகுறை ஆடையுடன் ஆடவிட்டு கால்சீட் பார்ப்பவன் தான் சினிமா நடிகையின் தகப்பன்.

ஆகவே சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் பொது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள் நண்பர்களே

உங்கள் சுற்றம் கண்டிப்பாய் உங்களை தவறாக நினைக்காது. உங்கள் சுற்றத்தில் யாராவது சினிமாவை பார்த்து தவறான அணுகுமுறையில் ஈடுபட்டால் பொடதியில் அடித்து புரியவைங்க.

பூக்கள் பூத்த தருணம்

திருநெல்வேலி ரயில் நிலையம், மாலை 6 மணி 

நெல்லை விரைவு வண்டியின் S7 கோச் அருகே வந்தான் கார்த்திக். சார்ட்டை உற்று பார்க்க ஆரம்பித்தான் எத்தனை பெண்கள் அவன் வசம் என்று.
karthick 25M  57LB சுகன்யா 21F 63LB. இதை பார்த்த உடன் சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டான்.

சென்னையில் இருக்கும் நண்பன் தினேசை அலைபேசியில் அழைத்தான். மாப்ள என் கோச்ல எனக்கு அப்போசிட்ல ஒரு பொண்ணுல என்றான்.
பிகர் எப்படில என்றது எதிர்முனை. இன்னும் பாக்கல சார்ட்ல பார்த்தேன் சுகன்யானு பேரு என்றான். சரி ஓகே அல்வா வாங்கிட்டு வா என்றான் தினேஷ்

அல்வா வாங்கி வர பஸ் ஸ்டாண்ட்  வரை வந்து விட்டு கையில் வார இதழுடன் ரயிலுக்கு வந்தான். பெர்த் 63க்கு சுகன்யா வந்திருந்தாள். மாநிறம், அழகான முகம். ஆங்கில நாவலை வாசித்து கொண்டிருந்தாள். கார்த்திக் சற்றே தடுமாறினான். அவள் நாவலில் ஆழ்ந்திருந்தாள். பேசுவாளா? மாட்டாளா ? என்று துடித்து கொண்டிருந்தான். மாலை சரிந்து இரவு படர்ந்து கொண்டிருந்தது. ரயில் நகர தொடங்கியது.

"அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கண் பார்த்து கந்தலாகி போன நேரம்" அலைபேசி அழைத்தது. என்னடா ட்ரைன் இன்னும் கிளம்பலையா என்றாள்  கார்த்திக்கின் அம்மா. ட்ரைன் கிளம்பிருச்சு போன் பண்ண மறந்துட்டேன்மா.

கோவில்பட்டி வந்தபோது புத்தகத்தை விட்டு வெளியே வந்து எந்த ஸ்டேஷன் என்றாள். சுவர் விளம்பரத்தில் EMAR தெரிந்தது. கோவில்பட்டி என்றான். புன்னகையை பரிமாறிவிட்டு கார்த்திக், சுகன்யா என்று பரஸ்பரம் அறிமுகம் ஆனார்கள். மெக்கானிகல் எஞ்சினியர், தனியார் நிறுவன வேலை, மூன்றாண்டு சென்னை வாழ்கை என கார்த்திக் தன்னை பற்றி சொன்னான்.

அவளும் சொன்னாள். சாப்ட்வேர் எஞ்சினியர். சென்னைக்கு புதிது. மூன்று மாதங்களுக்கு முன் கல்லூரி முடித்து சென்னையில் ஒரு மாதமாய் பணிபுரிவதாய் சொன்னாள். மதுரையை கடந்தபின் சுகன்யா தூங்க தொடங்கினாள். கார்த்திக் தூங்கவில்லை, தூக்கம் வரவில்லை. பெண் வாசமே  அறியாத சராசரி மெக்கானிக்கல் எஞ்சினியர். சொல்லாமலே போன சில காதல் தோல்விகள் அவனுக்கென உண்டு, பள்ளி கல்லூரி வாழ்வில். ஒரு பெண்ணுடன், அதுவும் அழகான பெண்ணுடன் பேசியதால் அவன் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

காலையில் அவள் எழும்பூரில் இறங்கியபோது மனம் லேசாய் வலித்தது கார்த்திக்கிற்கு. உங்க ரூம் எங்க என்று கேட்டான். நுங்கம்பாக்கம் என்றாள்.

நண்பன் தினேசிடம் வந்து எல்லாவற்றையும் சொன்னான். சுகன்யா கொள்ளை அழகுல என்றான். மீண்டும் அவளை என்று பார்க்கலாம் என்று ஏங்கினான். அந்த தினமும் வந்தது. நுங்கம்பாக்கம் சென்றிருந்தான். மழை பெய்து வெறித்திருந்தது. ரயில் நிலையம் அருகில் இருந்த தெருவில் சந்தனத்தை கரைத்து கொட்டியதை போல சகதி. கார்த்திக் தன் சந்தன நிற பேன்ட்டை சேற்றிலிருந்து காப்பாற்ற கீழே குனிந்து மடக்கிவிட்டான் பேன்ட்டை. நிமிர்த்து பார்த்தான் செந்தாமரை அவன் முன்னே.

வயலட் நிற சுடிதாரில் வானத்தில் இருந்து குதித்த தேவதை போல வந்து கொண்டிருந்தாள் சுகன்யா. ஹாய் சொல்லி கொண்டார்கள். காபி சாப்பிட தீர்மானமானது. அடுத்த தெருவில் உட்கார்ந்து டீ  சாப்பிடும் வகையில் இருந்த கடைக்கு அழைத்து சென்றாள் சுகன்யா.

வேலை எப்படி போகுது என்றாள் சுகன்யா. ம்ம் நல்ல போகுது என்றான். வாழ்கை எப்படி போகுது என்றான் கார்த்திக். தெரிச்சவங்க யாரும் இல்ல. என்னோட டீம்ல எல்லாருமே நார்த் இந்தியன்ஸ். ரொம்ப போரடிக்குது என்றாள்.

சரி ஓகே. போக போக பழகிடும். சென்னை லைப் செட் ஆயிடுச்சினா அப்புறம் எல்லாமே ஈஸியாயிடும்.
நடுவில் இருவரும் மௌனமாய் இருந்த தருணத்தில் காபி கோப்பைகள் காலியாகி இருந்தன. கார்த்திக்கிற்கு எழுந்திருக்க மனம் இல்லை. இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து பர்சை திறந்தான்.

சுகன்யா முன்னேறி இது அவள் முறை என்று கல்லாவில் காசை கொடுத்தாள். கார்த்திக்கை சுற்றி பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.

ரயில் நிலையம் நோக்கி நடக்க தொடங்கிய வேளையில் போன் நம்பர் கேட்கலாமா என்று யோசித்தான். அவள் கேட்டே விட்டாள். இவன் நம்பர் சொல்ல அவள் டயல் செய்து அவளது அலைபேசியில் இருந்து அழைத்தாள். "அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்தது இவன் அலைபேசி.

அதற்கு பின் நாட்களில் அவளை எப்போது அலைபேசியில் அழைக்கலாம் என்று துடித்தான் கார்த்திக்.
 
இரண்டு நாட்களுக்கு பின் எப்படி இருக்கிறாய்? என்று ஒரு குறுந்தகவல் அனுப்பினான். அடுத்த சில நிமிடங்களில் இவன் அலைபேசியில் முதன் முறையாக சுகன்யா கால்லிங் என்று வந்தது. உயர பறந்தான்.

உங்க மொபைல்ல மெசேஜ் ப்ரீ கிடையாதா ? என்றான். இல்ல என்றாள். மெசேஜ் ப்ரீயா இருந்தாதான் எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி எல்லா நண்பர்களோடும் டச் வச்சிக்க முடியும் என்றான் கார்த்திக்

"உலகத்திலேயே சிறந்த நண்பர்கள் நாம ரெண்டு பேர் தான்" என்கிற மெசேஜ் ஜ பத்து இருபது பேருக்கு பார்வேர்ட்  பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னோட மொபைல்ல கால் ரேட்ஸ் கம்மி. ப்ரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி அவங்க சிட்டுவேஷனுக்கு தகுந்த மாதிரி பேசி டச்ல இருக்கிறதுதான் பெஸ்ட்னு  எனக்கு தோணுது என்றாள் சுகன்யா.

கார்த்திக்கால் எதுவும் பேசமுடியவில்லை, அவளின் பதிலை கேட்டு, ஏதேதோ  பேசினார்கள். அன்றைய இரவு கார்த்திக்கிற்கு வித்தியாசமாய் இருந்தது.

புகைவண்டியில் உன்னை
பார்த்த போதே உன்
புகைப்படம் என் மனதில்
 பதிந்துவிட்டது!
என்னுடன் நீ
தேநீர் அருந்திய போது
நீ என்
தேவதையாகி விட்டாய் !

அன்றைய உன் பிரிவு
என்னை காயபடுத்தியது!
உன்னுடன் பேசி முடித்த
இந்த கணம்
என்னுள் தேன்னாய்
இனிக்கிறது!

 உன்னிடம் என் காதலை
சொல்ல போகும்
தருணத்திற்காக நான்
காத்திருக்கிறேன் !


அடிக்கடி சுகன்யாவுடன் பேசினான். அவன் நட்பு, அன்பான வார்த்தைகள், சூடான விவாதங்கள் அவளுக்கு பிடித்திருந்தது. சனி, ஞாயிறுகளில் சந்திப்பும் நடந்தது. நட்பை காதலாய் மாற்ற காத்திருந்தான் கார்த்திக்.

ஊருக்கு சென்றபோது பெருமாள்புரத்தில் இருக்கும் அவள் வீட்டுக்கு சென்றிருந்தான். சுகன்யாவின் அப்பா, அம்மா மற்றும் தங்கையிடம் பேசி மகிழ்ந்தான். அந்த குடும்பமே அவனுக்கு பிடித்திருந்தது. அவள் சம்மந்தபட்ட எல்லா விசயங்களும் அவனுக்கு பிடிக்கும் அந்த மனநிலைக்கு அவன் வந்துவிட்டான்.

கார்த்திக்கின் அலைபேசியில் சுகன்யாவுக்கென அழைப்பொலி "எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ" என்ற பாடல்.

கார்த்திக் ரூம் மேட் தினேஷ், இவனுள் கொஞ்ச நாளாக ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவன் உடல் மொழியிலே கண்டு கொண்டான். மாப்ளே ப்ரப்போஸ் பண்ணிருல, என்னைக்காவது ஒரு நாள் சந்தர்பத்தை தவற விட்டுட்டுடோமேன்னு நீ பீல் பண்ண கூடாது. எவ்வளவு சீக்கிரம் நீ ப்ரப்போஸ் பண்றயோ அவ்வளோ சீக்கிரம் நல்லது என்றான் தினேஷ்.

அவன் பேசிகொண்டிருக்கும் போதே கார்த்திக் சுகன்யாவிடம் காதலை சொல்லி சினிமாவுக்கு சென்று கொண்டிருந்தான் கனவுகளில்.

அலுவலக பணிகளில் சோர்வடைந்து திரும்பும் போது சுகன்யாவிடம் பேசினால் சுறுசுறுப்பாகி போனான் கார்த்திக். சுகன்யாவின் பிறந்த நாள் வந்தது. அவள் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். சாயங்காலம் சந்திப்பதாய் சொல்லி இருந்தாள் கார்த்திக்கிடம்.

கார்த்திக் காத்திருந்தான். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில். கையில் வாழ்த்து அட்டை, ரோஜா பூ, செவ்வக வடிவில் சற்றே பெரிய சாக்லேட். வாழ்த்து அட்டைக்குள் அவன் காதலை சொல்லும் கடிதம்.

இருபது நிமிட காத்திருப்புக்கு பின் சுகன்யா வந்தாள். அதுவரை எத்தனையோ முறை அவளிடம் பேசி இருந்தாலும் இப்போது கார்த்திக்கின் ரத்த நாளங்களில் ஒரு வித மாற்றம். தொண்டை அடைப்பது போல் இருந்தது. வியர்வை வேறு வழிந்து கொண்டிருந்தது.

அருகில் வந்து விட்டாள். கை குலுக்கி "மெனி மோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே என்றான். சாக்லேட், கிரீடிங் கார்டு ஓகே, அது என்ன ரோஸ்?  என்றாள்.

எப்படி சொல்றதுன்னு தெரியல "இட்ஸ் எ சர்ப்ரைஸ் பார் யு"இன்னைலிருந்து உன்ன சுகன் வா, போ ன்னு கூப்பிடலாம்னு இருக்கேன் என்றான்.

தாராளமா கூப்பிடுங்க என்றாள் சுகன்யா. என்னவோ தெரியல உன்னோட மட்டும் பேசணும், பழகனும், வாழணும்னு தோணுது என்றான் கார்த்திக்.

அவள் புன்னகைத்து கொண்டே ரோஜாவை வாங்கி கொண்டாள். இவர்கள் புன்னகையை பார்த்த வானமும் புன்னகை பூத்து இலேசாய் தூறல் போட்டது.

 என்றும் சிநேகமுடன்
சு. பழனி செல்வகுமார்