Monday 18 March 2024

தேர்தல் கூத்து

தேர்தல் அவசரத்தில்

தோண்டப்பட்ட மழைநீர்

வடிகால் குழியில் விழுந்த

நாய் மூன்றாம் முயற்சியில்

வெளியே வந்துவிட்டது !

பிரபல தலைவரின்

பிரசாரத்திற்கு வரும்

ஹெலிகாப்டர் சத்தத்தை

கேட்டுவிட்டு அசை போட

தொடங்கிய பசு மாட்டுக்கு 

தெரியாது அரசியலில்

அதன் பங்கு குறித்து !

பங்குனி மாத வெக்கை 

தாங்காமல் வெளியே

வந்து வேப்பமரத்தடியில்

நின்றால் தார் போடாமல்

விடப்பட்ட சாலை புழுதியை

பரிசளிக்கிறது !

மழையால் சேதமாகி விட்ட வீட்டை

முடிந்த அளவு பேணி வைத்திருக்கிறாள்

மூதாட்டி ஒருத்தி 

தகவல் தொழில்நுட்ப அணி

தரும் அளவுக்கு அவள் வீட்டுக்கு

முட்டு கொடுக்க எதுவும்

யாரும் இல்லை !

வீட்டை கட்டி தர அரசிடம்

பணம் இல்லை.

13000 கோடியோ, 500 கோடியோ

அது கட்சிக்கு வந்த பணம்

அரசாங்கத்துக்கு பணம் இல்லை !

அவள் வாங்கும் அரிசி பருப்புக்கும்

ஜிஎஸ்டி உண்டு !

ஓட்டு கேட்டு வருபவர்கள்

நூறோ இருநூறோ தருவார்கள்

என காத்திருக்கும் தாத்தாவுக்கு

தெரியாது

அவர்கள் தருவது இங்கிருந்தே

ஆட்டைய போட்டது என்று !

சூரியன் ஒளிர்கிறது

தாமரை மலர்கிறது

இலை துளிர்க்கிறது

ஏழையின் வாழ்வில்

எந்த மாற்றமும் செய்யாமல்

ஒளிர்ந்து, துளிர்த்து, மலர்வது

என்ன மயித்துக்கு !!!

Saturday 9 March 2024

திருநெல்வேலி - 3

திருநெல்வேலி விவசாயம் சார்ந்த மாநிலம். அதே சமயம் பெண்களுக்கு கைத்தொழில் என்றால் பீடி சுற்றுதல். பீடி சுற்றுவதில் பெரிய வருமானம் இருக்காது என்றாலும், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பீடி சுற்றி சின்ன சின்ன குடும்பத் தேவைகள் முதல் குழந்தைகளின் படிப்பு செலவுகள் வரை பூர்த்தி செய்ய பயன்படும்.

பீடி கடை உரிமையாளர்கள் 100 கிராம் பீடித்தூள் + 1/4 கிலோ பீடி இலை என்ற விகிதத்தில் வழங்குவார்கள். பீடி சுற்றும் நபர் 25 பீடிகள் கொண்ட 23 கட்டுகளை கொடுக்க வேண்டும். அதில் 22 கட்டுகள் வரவு வைக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படும். குறைவான கட்டுகள் கொடுத்தால் மீதி கட்டுகள் பாக்கியாக எழுதப்படும். பாக்கி கட்டுகளுக்கு காசு கொடுத்து இலை மற்றும் தூள் வாங்கி கட்டி கொடுத்து கழிக்க வேண்டும்.

பீடித் தொழிலாளர் நல வாரியம் உள்ளது. அது 1000 பீடிக்கு நிர்ணயித்த கூலியை (40x25) பீடிக்கடை உரிமையாளர்கள் (46x25) 1150 பீடிகளுக்கு வழங்குகிறார்கள். பீடித் தொழிலாளர் குழந்தைகளுக்கு பள்ளியில் உதவித்தொகை உண்டு. இது அரசு உதவித்தொகையைவிட அதிகம். பீடி உதவித்தொகை வாங்கினால் அரசு உதவித்தொகை கிடைக்காது.

பீடி சுற்றும் முறைக்கு வருவோம். பீடி இலை பார்க்க தேக்கு இலை போல் இருக்கும். இலையை தண்ணீர் தெளித்து நனையவிட்டு விடுவார்கள். அதற்கு பிறகு ஈரத்தை உதறி அளவுக்கு வெட்டுவார்கள். பழுப்பு நிற இலைகளில் பீடி சுற்றக்கூடாது. ஒவ்வொரு கட்டிலும் மேலும் கீழும் இரண்டு அல்லது மூன்று பழுப்பு நிற இலைகள் இருக்கும். 

வெட்டிய இலைகளை கவரில் வைத்து பீடி சுற்ற துவங்குவார்கள். இதற்கு இடையில் பீடியை கட்டுவதற்கான நூலை பிரித்து எடுக்கும் வேலை உள்ளது. வெட்டிய இலைகளில் சிறிய கத்தி கொண்டு நரம்புகளை சீவி விட்டு, பீடித்தூளை வைத்து சுருட்டுவார்கள். 

பீடியின் தலைப்பகுதியில் வால்பகுதி வரை பீடித்தூளை சீராக குறைத்து வர வேண்டும். தலைப்பகுதியில் தூள் அதிகம் இருந்தால் பீடி ஏற்றுக்கொள்ளபடாது. வால் பகுதியில் தூள் இல்லை என்றாலும் கட்டமுடியாது.

அடுத்த வேலை தலைப்பகுதியை மடக்குவது. இதற்கென அளவுபார்க்க ஒரு கட்டை உண்டு, அளவு பார்த்து கூடுதல் நீளத்தை வெட்டி, ஸ்குரு டிரைவர்(மடக்குச்சி) போன்ற கருவி கொண்டு மடக்குவார்கள் மடக்குவதற்கு ஏதுவாக பீடியின் தலை பகுதியை ஈரத்துணியால் மூடி வைத்திருப்பார்கள். இதற்கு பெயர் பதியம். அதிக நேரம் மூடி வைத்திருந்தால் பீடி கருத்துவிடும்.

மடக்கிய பீடிகளை 25 எண்ணம் (கடைக்கு கடை எண்ணிக்கை மாறலாம்) கொண்ட கட்டுகளாக கட்டவேண்டும். கட்டிய பின் சைஸ் பார்த்து செக்பண்ணி கடையில் கொடுக்க வேண்டும்.

பீடிக்கடை வைத்திருக்கும் நபர் பீடியின் தரத்தை வைத்து பீடியை கழிப்பார்கள். தரம் இல்லை என முழுக்கட்டையும் திருகி எறியவும் வாய்ப்பு உள்ளது.

சமையல் முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ஓய்வு நேரத்தின் உழைப்பை பீடியாக மாற்றுவார்கள். பீடித்தூள் நெடியுடையுது, சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உடையது. ஆனாலும் எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டே போட்டி போட்டு பீடி சுற்றுவார்கள்.

திருநெல்வேலியும் பீடித்தொழிலும் பிரிக்க முடியாதவை.


Saturday 2 March 2024

திருக்கார்த்தியல் - சிறுகதை தொகுப்பு பற்றி

தேசிய அளவில் விருது பெற்றிருந்தாலும், நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியுள்ளார் என்பதற்காக வாங்கினேன். நாஞ்சில் நாடன் தனது கருத்தை பொட்டில் அடித்தது போல சொல்வதில் வல்லவர்.

பொதுவாக சிறுகதை தொகுப்பில் புத்தக தலைப்பில் உள்ள கதை முதல் கதையாக இருக்காது. ஆனால் ராம் தங்கம் திருக்கார்த்தியல் கதையை முதல் கதையாக வைத்திருக்கிறார். நானும் (கொஞ்சம் பெரிய பையன் ஆன பின்) விடுதியில் தங்கி படித்தவன் என்பதால் எளிதாக மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது திருக்கார்த்தியல்.

தக்கலையில் கல்லூரி படிப்பை முடித்தவன் என்பதால் நாகர்கோவில் வட்டார வழக்கும் எனக்கு எளிது.

கதையில் வரும் எள்ளல் தொனி நாஞ்சில் நாடனை நினைவுபடுத்துகிறது. ஊழிற் பெரு வலி கதை மட்டும் சாரு நிவேதிதாவிடம் கற்றிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது.

காணி வாத்தியார் கதையில் நம்மை பெருஞ்சாணி அணைக்கு அழைத்து செல்லும் ராம் தங்கம், பாணி கதையில் நாம் வடக்கன்/ஹிந்திகாரன் என்று ஒதுக்கும் ஒருவனின் மனிதத்தை பேசியுள்ளார்.

கடந்து போகும் கதையை வாசித்துவிட்டு எளிதில் கடக்க முடியாது. வலிகளை சொல்லும் கதைகள் மத்தியில் வெளிச்சம் கதை மயிலிறகு வருடல். டாக்டர் அக்காவும் மனதை பிசைகிறது.

ராம் தங்கம் தேசிய அளவில் விருது வாங்கிவிட்டார் என்றதும் X தளத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாகர்கோவில்காரர்களும் வாழ்த்தியுள்ளனர்.

ராம் தங்கம் தமிழ் நாடு முழுக்க கொண்டாடப்பட வேண்டியவர்.