Saturday 6 April 2013

எந்தை


என் தந்தையின் நினைவு தினம் (7-3-1994)

என் ஜனனத்திற்கு 
காரணமானவர் 
மரணித்தும் உயிர் வாழ்கிறார் 
எங்கள் மனதில்!

ஆற்றியது ஆசிரியப்பணி 
என்றாலும் அவர் கைகள் 
மண்வெட்டியையும் நேசித்தது !

அவர் மாணாக்கர்கள் இன்றும் 
என் மீது காட்டும் பாசமே 
அவர் நல்லாசிரியர் என்று கூறும்!

என் மச்சான் மகன், என் மருமகன் மகன் 
என் மாப்ள மகன், என் அண்ணன் மகன் 
என ஊரார் என்னை விளிப்பதெல்லாம் 
அவருக்கும் ஊருக்குமான 
உறவை சொல்லும்!

மூன்றாம் வகுப்பில் என் 
கையெழுத்தை மாற்றியவர் 
என் தலையெழுத்தை பார்க்க 
அவர் இல்லை என்பது 
அவர் தலையெழுத்து !

தேனடையை கலைப்பதற்காக கூட 
அவர் புகை பிடித்ததில்லை 
நான் வைத்த கொள்ளியில் தான் 
அவர் முதன் முதலாய் 
புகைபிடித்தார் !

அன்று நான் அழவில்லை 
இன்று அவர் புகைப்படத்தை 
பார்த்தால் கண்ணீர் முட்டுகிறது !

மறைந்து விட்ட அவரை 
மறந்துவிடவில்லை என்பதற்கே 
இந்த நினைவு கூறல் !