பள்ளிக்கூட ஆசிரியர், எனக்கு ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த மலையப்பன் சார்.
பெரிய பையோடு தான் வகுப்புக்கு வருவார். 6ம் வகுப்பின் முதல் நாளிலே பாடம் நடத்தியவர். 6ம் வகுப்பையே பத்தாம் வகுப்பு போல படிக்கச் சொல்பவர். பழைய கொஸ்டின் பேப்பர்களை ஜெராக்ஸ் எடுத்து அதிலிருக்கும் கேள்விகளை படிக்கச் சொல்வார்.
எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சற்றே பொக்கை வாயோடு, வயதான தோற்றம் தருபவர்.
அவரை யாருக்குமே பிடிக்காது, எட்டாம் வகுப்பில் அவர் வகுப்பற்கு சென்றுவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். அவர் வகுப்பிற்கு தான் சென்றேன். என்னை பெரும்பாலும் பழனி சங்கர் என்றே கூப்பிடுவார்.
பேனா, பென்சிலை வாயில் வைக்கக்கூடாது, வாயில் வைத்தால் திட்டுவார். மாணவர்கள் அவரை மாலையப்பன் சார் என்றே கூப்பிடுவார்கள். ஆனால் அவர் பெயர் மலையப்பன் தான்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தான் அவரது வீடு. பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வு சமயங்களில் மத்தியானம் தான் வகுப்புகள் தொடங்கும். காலையில் கிளம்பி அவர் வீட்டிற்குச் சென்று படிப்பது வழக்கம். காலையில் செல்வதால் நிதானமாக அரசு பேருந்தில் செல்வேன். பஸ் பாஸ் இருப்பதால் 1 ரூபாய் 75 பைசா மிச்சமாகும்.
வேலை கிடைத்த பிறகு சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மலையப்பன் சாரை பார்த்தேன். அதே பை வைத்திருந்தார். வயது மட்டும் இன்னும் அதிகமாகி இருந்தது. ஏதோ ஒரு அரசு அலுவலகத்திற்கு வந்ததாக சொன்னார். நான் அவரது நினைவு வட்டத்தில் இல்லை.
அவரிடம் விடை பெற்று ரயிலேறிய பிறகு தான் அவருக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. நண்பன் கண்ணனிடம் பேசிய போது சொன்னான், அவர் வீடு தான் தெரியுமே ஒருநாள் நேரில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று. இன்னும் போகவில்லை.


