Saturday, 25 July 2026

தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல், மலிவு பதிப்பாக பாரதி புத்தகாலயம் 300 ரூபாய்க்கு வெளியிட்டது. சீர் வாசகர் வட்டம் அது கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். அப்படி கிடைத்தது தான் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள். 



900 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு நூலுக்கு எத்தனை புத்தகங்கள் வாசித்திருப்பார், எத்தனை ஆண்டுகள் குறிப்பு எடுத்திருப்பார் என்பது வியக்க வைக்கிறது. 

ஆய்வு நூல் என்றாலும் சுவராஸ்யம் குறையாமல் வாசிக்க முடிகிறது என்பது தான் இதன் சிறப்பு. வ வே சு ஐயர் தொடங்கி அணைத்து தமிழ் சிறுகதை எழுத்தாளர் கதைகளையும் பற்றி எழுதியுள்ளார். ஒவ்வொரு எழுத்தாளரின் பாணி, அவரது சிறப்பு, நடை ஆகியவற்றை எழுதியதோடு அந்தந்த எழுத்தாளர் தொடாத களங்கள், அவர் குறித்த விமர்சனங்களையும் வைத்துள்ளார். 

கிரா குறித்து அதிகப் பக்கங்கள் எழுதி இருந்தாலும் கிரா தலித் குறித்து எழுதவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். ஒவ்வொரு எழுத்தாளரும் எத்தனை சிறுகதைகள் எழுதியுள்ளனர் என்று ச. தமிழ்ச்செல்வன் சொல்வதில் புரிகிறது அவரது உழைப்பு. எத்தனை கதைகள் கிடைக்கவில்லை என்பதையும் சொல்கிறார். 

சிறுகதைகளின் தடங்கள் முதல் 50 ஆண்டுகள் என்பதால் சமகால எழுத்தாளர்கள் முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெருமாள் முருகன் போன்றோர் இளம் பெறவில்லை. 

இந்தக் கட்டுரை நூலில் இடம் பெற்றவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் இலங்கை, மலேஷியா மற்றும் பிற நாட்டு தமிழ் எழுத்தாளர் குறித்து எதுவும் இடம் பெறவில்லை. 

பெரிய புத்தகம் நிறைய இடங்களில் ஒரு எழுத்தாளர் குறித்து இன்னொருவர் சொன்னதை "மேற்கோள்" காட்டியுள்ளார். இந்த மேற்கோள் சரியாக அமையவில்லை சில இடங்களில் இவர் சொல்வதா வேறு ஒருவர் சொன்னதா என்பதை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. 

நிறைய இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளது. அவர் எழுதியதில் பிழை இல்லை, தட்டச்சு செய்ததில் ஏற்பட்ட பிழை என்பது தெளிவாக தெரிகிறது. தட்டச்சு விசயத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். 

தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளின் சாராம்சம் குறித்த நுண்ணிய தகவல்களை கூட தரும் தரமான புத்தகம் இது. 

Saturday, 18 July 2026

பேச்சு

பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் யாராவது வரவில்லை என்றால் ஏதாவது பேசிக்கொண்டு இருப்போம். சினிமா, விளையாட்டு எனப் பேச ஏதாவது இருக்கும். அந்த நேரங்களில் வகுப்பு லீடர் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் எழுதுவது உண்டு. சில நேரங்களில் உளவு பார்த்து பெயரைப் பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் தருபவர்களும் உண்டு. 

விடுதியில் சேர்ந்த பிறகு, வார்டன் சுற்றி வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பேசிக்கொண்டே இருப்போம். ரசிக சண்டை, பாம்புக் கதை, ஊர்க் கதை, கிரிக்கெட் என நீண்டு கொண்டே இருக்கும். 

கல்லூரி விடுதியில் ஏதாவது பேச ஆரம்பித்தால் அப்படியே நீண்டு போகும். வகுப்பில் நடக்கும் கலாட்டாக்கள், கிரிக்கெட், அரசியல், தேர்வு, ரிசல்ட் என நீளும். ஓர் இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேய் கதை சொல்ல, அந்த இரவில் பயத்துடனே தூங்கினோம். 

ஊரில் இருட்டிய பிறகு எங்கள் வீட்டு திரணையில் (திண்ணையில்) நிறைய பேர் உட்கார்ந்து பேசுவது வழக்கம். நாங்கள் கோமுத் தாத்தாவிடம் கதை கேட்போம். சில நேரங்களில் பேச்சு சுவாரஸ்யங்களில் தாத்தாக்கள் மூழ்கி இருக்க நாங்கள் நழுவி தூங்கச் செல்வோம். அவர்கள் விடியவிடியக் கூட பேசிக்கொண்டு இருப்பார்கள் என அம்மா சொல்வது வழக்கம். 

வேலையில் சேர்ந்த பிறகு நந்தனத்தில் 6 மணிக்கு வெளியே வந்து டீக்கடையில் டீ சொல்லிவிட்டு பேசிக் கொண்டே இருப்போம். டீ வர 6.30 ஆகும். டீ கொண்டு வரும் வின்சென்ட்க்கு தெரியும். எங்களுக்கு எப்போது டீ கொண்டு வருவது என்று. 

ஊருக்கு வந்தால் அக்காக்களோடு பேச நேரம் போதாது. அவ்வளவு பேசுவோம். பேச வேண்டியவை அவ்வளவு இருக்கும். 

இந்தப் பேச்சுகளில் சுவாரஸ்யம் இருந்தன. 100% உண்மை தான் இருக்கும் என்று சொல்ல முடியாது, என்றாலும் அந்த பொய்யும் புனைவும் கலந்த பேச்சுகள் அழகானவை. 

இந்த ஆண்ட்ராய்டு போன்களின் எழுச்சி, வீடியோக்களின் வளர்ச்சிக்குப் பிறகு மனிதருக்கு மனிதன் பேசிக் கொள்வது எவ்வளவு குறைந்துவிட்டன. 

ரயிலில் முன்பதிவில்லா பயணித்தில் சக பயணிகளிடம் தூக்கம் வரும் வரை பேசி செல்வோம். தூக்கம் எங்களை அறியாமல் வரும். ரிசர்வ் பெட்டிகளில் கூட சக பயணிகள் தாம்பரமா? எழும்பூரா? என்று விசாரிப்பது உண்டு. ஆனால் இன்றோ ஆளாளுக்கு ஒரு போனில் மூழ்கி திளைக்கிறோம். 

காத்திருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கையில் போனை எடுத்துக் கொள்கிறோம். அந்த இடத்தின் புற அழகியலை உற்று நோக்கும் வாய்ப்பை தவறவிட்டு வீடியோக்களில் மூழ்கி இருக்கிறோம். ரயிலோ, பஸ்ஸோ பயணத்தில் ஒரு படத்தை பார்த்துவிடுவோம் என்று திட்டமிட்டு வருபவர்கள் ஏராளம். 

ரயிலில் டீ விற்பவரின் ராகம், வெள்ளரிக்காய் விற்பவரின் ஹைபிட்ச் குரல் இவற்றை எல்லாம் கவனிக்கத் தவறி விட்டோம். 

90ஸ் கிட்ஸ்களின் மனதில் இன்றும் பேசும் அந்த வேட்கை மீதமிருக்கிறது. கிடைக்கும் போது மணிக்கணக்கில் யாரிடமாவது பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வயோதிகர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அவர்கள் இந்த தலைமுறையோடு பேசினால் கிரிஞ்ச் என்று விமர்சனம் வைக்கிறார்கள். சரி அவர்களது வயது ஒத்தவர்களோடு பேச கிராமத்தில் ஆள் கிடைப்பார்கள் நகரத்தில்? அவர்களும் போனில் தான் மூழ்கி கிடக்கிறார்கள். 

ஆண்ட்ராய்டு போன்கள் என்ன தான் டெக்னாலஜியை கையில் தந்தாலும் மனித மனங்களை வெகு தூரமாக்கிவிட்டது. இதன் தாக்கத்தால் பேசுவது மறந்து சண்டையிடுவது வாடிக்கையாக மாறி வருகிறது. 




Friday, 17 July 2026

கூட்டம்

கூட்டம்

குற்றால அருவியில்

குளிக்க நீண்ட வரிசை. 

திருச்செந்தூர் முருகனைக்

காண குறைந்தது

மூன்று மணி நேரம். 

அத்தோ, சர்மா, 

பலூடா கடைகளால்

நிரம்பிய வ உ சி மைதானச்

சாலையைக் கடந்து 

வருவது கடினம். 

டீ மார்ட்டில் நகர்ந்து

செல்ல முடியாத

அளவு ஜனங்கள். 

எங்கும் கூட்டம். 

ஆண்டனி என பெயர்

மாறிவிட்ட எங்கள்

ஊர் பேருந்து, வண்டி

ஓட்டத் தெரியாத வயோதிக

ஆண்களுக்காக மட்டும்

இயங்குகிறது. 

கூட்டமில்லாமல் காலியாக!!! 

****

விலைவாசி

வளைகுடாப் போர்

எரிபொருள் விலையை

ஏற்ற, எல்லாப் பொருட்களும்

விலையேறிவிட்டன. 

இதைச் சமாளிக்க வளைகுடா

போய் தான்

சம்பாதிக்க வேண்டும்!!! 

****

செயற்கை நுண்ணறிவு

எல்லாத் துறைகளிலும்

செயற்கை நுண்ணறிவு

கொடி கட்டிப் பறக்கிறது. 

கேட்டதை செய்து தருகிறது

செயற்கை நுண்ணறிவு. 

ஆனால் சாதி சண்டையை

தான் ஒழிக்க முடியவில்லை!!! 

****

அலைபேசி அடிமை

நாங்கள் அலைபேசி

இல்லாத காலத்தில்

வாழ்ந்தவர்கள் என

பெருமை பேசிக்

கொள்ளும் 90ன்

குழவிகளால் அலைபேசி

இன்றி இருக்க முடியவில்லை!!! 


Friday, 10 July 2026

எனது ஆசிரியர்கள் 4

சரவணன் சார். 

சரவணன் சார் எங்கள் கல்லூரியின் பேராசிரியர். நாங்கள் முதல் முறையாக மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கட்டிடத்தில் முதல் வகுப்பை தொடங்கிய 3வது செமஸ்டரில் ப்ளூயிட் மெக்கானிக்ஸ் பாடத்தை எடுத்தார். 

அன்று படித்த பாடம் இன்று வரை எனது வேலையின் நிமித்தம் கூட வருவது குறிப்பிடத்தக்கது. சரவணன் சார், எல்லாரும் ஆர்கே பன்சால் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். விலை அதிகம் என்பதால் நானும் தர்மாவும் ஒரு புத்தகம் வாங்கி பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். அதை தெரிந்து ஒருநாள் ஜாலியாக திட்டினார். 

சரவணன் சார் ஸ்பெஷல் என்பது எப்போதும் வெள்ளை சட்டை அணிந்திருப்பார். போர்ட்டில் எழுதும் எழுத்து அழகாக இருக்கும். அதுவே நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடும். 

ஆனால் மிகவும் கண்டிப்பானவர். எரிந்து எரிந்து விழும் லேப் அசிஸ்டெண்ட் அழகிய பத்மனாபன் கூட சரவணன் சார் லேப் என்றால் அடக்கி வாசிப்பார். 

எங்கள் ஊரில் காட்டு (காண்பி) என்பதை காமி என்று சொல்வோம். நாஞ்சில் வட்டார வழக்கில் அது கானி. சரவணன் சார் அடிக்கடி சொல்வதால் அந்த வார்த்தை பழகி விட்டது. முதலில் சிரிப்பை வரவழைத்தது. 

மீண்டும் 7வது செமஸ்டரில் பிராசஸ் பிளானிங் & காஸ்ட் எஸ்டிமேஸன் பாடம் நடத்த வந்தார் சரவணன் சார். 7வது செமஸ்டர் என்றாலும் அவர் வகுப்பில் சேட்டை செய்ய முடியாது. 

நாங்கள் கல்லூரி முடித்த பிறகு சரவணன் சார் அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று விட்டார். எல்லாரும் மரியாதை வைத்திருக்கும் ஆசிரியர்களில் ஒருவர் சரவணன் சார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வகுப்பில் நடக்கும் புராஜெக்ட் வைவாவிற்கு எங்கள் புராஜெக்ட் விளக்கத்தின் போது சரவணன் சாரே வந்தார். நாங்கள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்தோம். சரவணன் சார் ஒவ்வொரு பெஞ்சில் இருந்தும் ஒருவர் புராஜெக்ட் குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்பார். நாங்கள் கிட்டத்தட்ட எல்லா பெஞ்ச்க்கும் ஒவ்வொரு கேள்வி (எங்களுக்கு பதில் தெரிந்த) கொடுத்து விட்டோம். 

நானும் தர்மாவும் முன்னே விளக்க சென்றதால் எங்கள் பெஞ்சில் மிஞ்சி இருக்கும் டேனி மற்றும் சாகுலுக்கு கேள்வி சொல்லவில்லை. சரவணன் சார் டேனியிடம் கேள்வி கேட்கச் சொன்னார். டேனி பதில் தெரியாத கேள்வி கேட்பானே என்று பயந்த நேரத்தில் டேனி புராஜெக்ட்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்றான். 

கார்த்தி, எந்த யோசனையும் இல்லாமல் 75000 - 1 லட்சம் ஆகும் என்றான். அடுத்து சரவணன் சார் ஏன்டா, இவ்வளவு ஹீட் வேஸ்ட் பண்றாங்களா? என்று கேட்க தர்மா ஆமா சார் பெரிய பர்ன்ஸ் சார் என்று பதில் சொல்ல சரவணன் சார் சிரித்து விட்டார். அதற்குள் அந்த வகுப்பு முடிய நானும் தப்பித்துக் கொண்டேன். 

தற்போது சரவணன் சார் பேஸ்புக்கில் களமாடுவதால் அவர் குறித்த தகவல்கள் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுவிட்டார். 

Wednesday, 24 June 2026

எனது ஆசிரியர்கள் 3

பள்ளிக்கூட ஆசிரியர், எனக்கு ஆறாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் மற்றும் எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த மலையப்பன் சார். 

பெரிய பையோடு தான் வகுப்புக்கு வருவார். 6ம் வகுப்பின் முதல் நாளிலே பாடம் நடத்தியவர். 6ம் வகுப்பையே பத்தாம் வகுப்பு போல படிக்கச் சொல்பவர். பழைய கொஸ்டின் பேப்பர்களை ஜெராக்ஸ் எடுத்து அதிலிருக்கும் கேள்விகளை படிக்கச் சொல்வார். 

எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சற்றே பொக்கை வாயோடு, வயதான தோற்றம் தருபவர். 

அவரை யாருக்குமே பிடிக்காது, எட்டாம் வகுப்பில் அவர் வகுப்பற்கு சென்றுவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன். அவர் வகுப்பிற்கு தான் சென்றேன். என்னை பெரும்பாலும் பழனி சங்கர் என்றே கூப்பிடுவார். 

பேனா, பென்சிலை வாயில் வைக்கக்கூடாது, வாயில் வைத்தால் திட்டுவார். மாணவர்கள் அவரை மாலையப்பன் சார் என்றே கூப்பிடுவார்கள். ஆனால் அவர் பெயர் மலையப்பன் தான். 

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் தான் அவரது வீடு. பத்தாம் வகுப்பு, +2 பொதுத் தேர்வு சமயங்களில் மத்தியானம் தான் வகுப்புகள் தொடங்கும். காலையில் கிளம்பி அவர் வீட்டிற்குச் சென்று படிப்பது வழக்கம். காலையில் செல்வதால் நிதானமாக அரசு பேருந்தில் செல்வேன். பஸ் பாஸ் இருப்பதால் 1 ரூபாய் 75 பைசா மிச்சமாகும். 

வேலை கிடைத்த பிறகு சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மலையப்பன் சாரை பார்த்தேன். அதே பை வைத்திருந்தார். வயது மட்டும் இன்னும் அதிகமாகி இருந்தது. ஏதோ ஒரு அரசு அலுவலகத்திற்கு வந்ததாக சொன்னார். நான் அவரது நினைவு வட்டத்தில் இல்லை. 

அவரிடம் விடை பெற்று ரயிலேறிய பிறகு தான் அவருக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்பது நினைவிற்கு வந்தது. நண்பன் கண்ணனிடம் பேசிய போது சொன்னான், அவர் வீடு தான் தெரியுமே ஒருநாள் நேரில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று. இன்னும் போகவில்லை. 



Friday, 12 June 2026

தனியார் நகரப் பேருந்துகளின் பயணச்சீட்டு

திருநெல்வேலியை பொறுத்தவரை 90களில் விதவிதமான பெயர்களில் தனியார் பேருந்துகள் உண்டு. வேறு வேறு பெயர்களில் இயக்கினால் வரி குறைவு (உண்மை நிலவரம் தெரியவில்லை) என்பதால் அப்படி இயக்குவார்களாம். ஒவ்வொரு பேருந்திலும் அந்தப் பேருந்து பெயரில் பயணச்சீட்டு தருவார்கள். 


எங்கள் ஊர் பஸ் எப்சி சென்றால் எஸ்எஸ்எம்எஸ் டூரிஸ்ட் பஸ் ஸ்பேர் பஸ்ஸில் வரும். அப்போது எஸ் எஸ் எம் எஸ் டிக்கெட் தருவார்கள். 

ஒவ்வொரு கம்பெனி பேருந்துகளின் பெயர்கள். 

சீதாபதி கம்பெனி - SBC, ABC, SSMS

இன்னொரு சீதாபதி கம்பெனி - Antony, SST, SSR, SRS, SK

ஞானமணி - MGG, GMT, ADJ

ஆண்ட்ரூஸ் - ST. ANDREWS (AMS) , SPM, SPR

தனபால் - DPT, DPR, DANIEL, DHANAPAUL, DHANAPERINBAM, DSR, IMPERIAL

இது போக இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் வைத்திருந்த கம்பெனிகள் SGKR, LION, MPR, ARG, TPC ராஜா, JRT, VISWAM என இருந்தன. 


இதில் டேனியல் பஸ் டிக்கெட் DT என்றும், இம்பீரியல் பஸ் டிக்கெட் IR என்றும், தனபால், தனபேரின்பம் பஸ் டிக்கெட் DT என்றும், விஸ்வம் பஸ் டிக்கெட் KVV என்றும், ஆண்டனி பஸ் டிக்கெட் AT என்றும் இருக்கும். 

தற்போது திருநெல்வேலியில் தனியார் பேருந்துகள் கணிசமாக குறைந்துவிட்டன. ஷேர் ஆட்டோ புதிதாக விட்ட காலத்தில் அதிலும் டிக்கெட் கொடுத்தார்கள். தற்போது கிட்டத்தட்ட எல்லா பேருந்துகளிலும் மிஷின் டிக்கெட். அதில் தேதி, ஸ்டேஜ் என எதுவும் இருக்காது. 10 ரூபாய் என்று மட்டுமே இருக்கும். 

தற்போது ADJ, கிருஷ்ணவேணி, ஸ்ரீராமஜெயம், வேணி (PKT), ரெகோபாத், ANTONY பேருந்துகள் மட்டுமே வண்ண பயணச்சீட்டுகள் இன்னும் தருகிறார்கள். இவர்களும் விரைவில் மிஷினுக்கு மாறலாம். 


வண்ண வண்ண பயணச்சீட்டுகளின் நினைவுகள் மட்டுமே மாறாதவை. 



Sunday, 31 May 2026

எனது ஆசிரியர்கள் 2

எனது எழுத்தார்வம் காரணமாக தொடர்ந்து ஏதாவது ஒரு தலைப்பில் எழுத ஆசை வந்தது. அதன் காரணமாக எனது ஆசிரியர்கள் குறித்து எழுதுகிறேன். 

ஏற்கனவே பள்ளி ஆசிரியர் குறித்து எழுதிவிட்ட நிலையில் 2வதாக கல்லூரி ஆசிரியர். கல்லூரி ஆசிரியர்களில் இவரை ஏன் முதலில் எழுத வேண்டும்? தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. சாதாரணமான தேர்வு தான். 

விரிவுரையாளராக இருந்து தற்போது கடல்சார் பொறியியல் துறை தலைவராக இருக்கும் ஜான் லியோன் சார் தான் அவர். எனது முதல் செமஸ்டரின் போது எனது அறைத்தோழன் சரவணன் மற்றும் பக்கத்து அறைத்தோழன் சுந்தர் ஜெகன் இருவரும் பி பிரிவு. பி பிரிவுக்கு இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ் வகுப்பெடுத்தவர் ஜான் லியோன். முதல் செமஸ்டரில் ஜான் லியோன் குறித்து விடுதி அறையில் பேச்சுகள் நடக்கும். 

சுந்தர் ஜெகன் பொதுவாக மற்றவர்களின் உடை நேர்த்தி மற்றும் சட்டைகளின் நிறத்தை ரசித்து அதே நிறத்தில் வாங்க வேண்டும் என்று நினைப்பவன். ஜான் லியோன் சார் உடை நேர்த்தியாக அணிபவர். 

ஏதோ ஒரு தேர்வின் போது தேர்வு அறையில் அவரது அடையாள அட்டை மூலமாக அவர் தான் ஜான் லியோன் எனத் தெரிந்து கொண்டேன். எங்களுக்கு அவர் வகுப்பு எடுத்தது 4வது செமஸ்டரில் மட்டுமே. 

வகுப்பு அறையில் நுழையும் போதே பாடத்தை ஆரம்பித்துவிடுவார். பாடத்தைத் தாண்டி எதுவும் பேசமாட்டார். ஆனால் யாருக்கும் கவனம் சிதறாமல் கவனிக்க வைத்துவிடுவார். 50 நிமிடங்கள் போவதே தெரியாது என்பது அவரது வகுப்பின் சிறப்பு. 

ஹோம் வொர்க் கொடுப்பார், சில நேரங்களில் ஹோம் வொர்க் பண்ணியிருக்க மாட்டீங்க என்று அடுத்த நாளில் அந்த ஹோம் ஒர்க்கை விளக்குவார். ஆங்கிலத்தில் தான் வகுப்பெடுப்பார். தமிழில் எப்போதாவது பேசுவார், அது மார்த்தாண்டம் தமிழ். 

எங்களுக்கு ஸ்டாப் அட்வைசராக இருந்தார். விடுப்பு எடுத்தால் அவரிடம் தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். ஒரு முறை என்னை கூப்பிட்டுவிட்டார். ஸ்டாப் ரூம்க்கு சென்று பார்த்தேன். குறிப்பிட்ட தேதியை சொல்லி அன்று ஹால்ப் டே கட் அடிச்சியா என்றார். இல்ல சார் ஹால்ப் டே லீவு போட்டேன் என்றேன். எல்லாம் ஒண்ணு தான் லீவு பார்ம் கொண்டு வா என்றார். அதற்குப் பிறகு நானும் சாகுலும் சீரான இடைவெளியில் லீவ் பார்ம் கொடுத்து விடுவோம். 

ஒருமுறை என்எஸ்எஸ்க்கு சென்றதால் என்எஸ்எஸ் ஆசிரியர் அழகேசனிடம் லீவு பார்ம்ல் கையெழுத்து வாங்கி கொடுத்தோம். அழகேசன் சார் பக்கத்து கேபினில் இருப்பவர். யோவ், "நீரா வே சைன் போட்டு கொடுத்தீரு" என்று விளக்கம் கேட்டு கொண்டார். 

4வது செமஸ்டருக்குப் பிறகு அவர் எங்களுக்கு வகுப்பு எடுத்தது இல்லை. எங்களோடு டூர் வந்ததும் இல்லை. ஆனாலும் அவர் மேல் எப்போதும் மரியாதை உண்டு. 

மெக்கானிக் இஞ்சினியரிங்கில் புரியும் படியாக, அதே சமயம் சலிப்பு தட்டாமல் வகுப்பு எடுப்பவர்களில் ஜான் லியோனும் ஒருவர். ஆடை நேர்த்தி அவரை ஒரு ஹீரோ போல காட்டும்.