எழுத்தாளர் நர்சிம் எனக்கு விகடன் மூலமாக அறிமுகம் ஆகி இருந்தவர். கீச்சகம் மூலம் அவரது சிறுகதையை வாசித்த போது அவர் எழுத்து பிடித்து போய்விட்டது.
கீச்சகத்தில் பிரபலமான சார்மினார் எக்ஸ்பிரஸ் நாவலை வாசிக்க நினைத்தேன். பிடிஎப் வடிவில் கிடைத்தாலும் புத்தக வடிவில் கிடைக்கவில்லை.
மதுரை கதைகளை வாசித்த போது தான் மதுரை, மாட்டுதாவணி தெரியப்படுத்திய ஏமாற்றுகாரர்களின் உலகம், அல்லது சினிமா தெரியப்படுத்திய ரவுடிகளின் கூடாரம் என்பதை தாண்டி மண் மணம் மாறாத மனிதர்களின் சொர்க்கம் என்று தெரிந்தது.
இந்த கதைகள் எல்லாமே மனித உறவுகள் பற்றி அதிகம் சொல்கிறது. நிறைய கதைகள் கதையின் நாயகன் சொல்லும் பாணியில் இருப்பதும் சிறப்பு.
எல்லா கதையிலும் ஒரு சிறிய முடிச்சு. அதை அவிழ்க்கும் இடம் மனதுக்குள் ஏதோ செய்யும்.
பெரிய வர்ணனைகள் எல்லாம் கிடையாது. சொல்ல வருவதை பட்டென சொல்லிவிடுகிறார். பிடிகயிறு கதையின் முடிவை போல.
அதே சமயம் லாடம் கட்டும் லாவகம், மாட்டை கட்டும் சூட்சமம், பிரசவிக்கும் மாட்டை ஏமாற்றும் தந்திரம் என பல விசயங்களை சொல்கிறார். ஒரு எழுத்தாளன் நிறைய வாசிப்பதோடு உற்று நோக்கி பார்க்க வேண்டும் என்கிறது அவரது எழுத்து.
மொத்த தொகுப்பிலும் பெண்களுக்கு மிக குறைந்த அளவை பாத்திரங்கள் உள்ளன. ஆனாலும் பாத்திமாவும் பிரபாவும் மனதை பாதிக்கும். பாத்திமா சமூக அக்கறை என்றால் கௌரவம் சமூக சாடல்.
வாடிவாசலில் சி.சு.செல்லப்பா ஜல்லிக்கட்டின் நிகழ்வுகளை சொல்லி இருக்கிறார். நர்சிம் பிடிகயிறில் ஜல்லிக்கட்டிற்கு பிறகான நிகழ்வை விளக்குகிறார்.
காவல் கோட்டத்தில் பரந்த மதுரை மாநகரை பார்க்கலாம். மதுரை கதைகளில் அழகான சின்ன தெருக்களை ரசிக்கலாம்.
மரணங்களை சொல்லி மனிதர்களை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக குன்னாங்குர் மற்றும் வாழையடி.
மகிழம்பூவில் விழித்தேன் சிரித்தாள் என்றெழுதி அடுத்த புத்தகத்தை வாங்க வைத்துவிடுவார்.
எல்லா கதைகளுமே எளிமையாய் யாரையாவது நினைக்க வைத்து விடுகிறது.
தீபாவளிக்கு முந்தைய இரவு மதுரையை பார்க்க வேண்டும் என்று நினைக்க வைப்பது இந்த கதைகளின் வெற்றி.
மொத்தத்தில் பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட கடலை உருண்டைகள்.