அருமை நண்பர் வெளி நாடு வாழ் இந்தியர் திரு. கந்தநாதன் எழுதிய கவிதை.
நாதன் அவரின் முகம் பார்த்ததில்லை.
முகம் பார்த்து கதைப்பது காதலில் மட்டும் தான்.
நட்புக்கு நாற்றங்கால் தேவையில்லை. நட்பு தானே வளரும் காட்டு
மரம்
ஊருக்குக் கிளம்ப முடிவு செய்து
பரிசுச் சாமான்களை வாங்கச்
செல்லுகையில் சந்தோஷம்!
அம்மாவிற்கு எது பிடிக்கும்?
அப்பாவிற்கு எது பிடிக்கும்?
தம்பி தங்கைக்கு எது பிடிக்கும்?
பிடித்தவற்றை மனதில் அசை போட்டவாறே
பார்த்துப் பார்த்து எடுத்து
தள்ளு வண்டியில் தள்ளும் போது சந்தோஷம்!
ஒன்றாய்ப் பழகிய நண்பர்களைக்
காணப் போகின்ற நினைப்பு வந்து
அடிக்கடி தொல்லைப் படுத்தும் சந்தோஷம்!
நாட்களை எண்ண எண்ண
பயணத்தேதி நெருங்கும் போது ஏனோ
இனம் புரியாத சந்தோஷம்!
வெய்யிலும் பொய்யிலும் வாழ்க்கை
இங்கே நடத்தினாலும் உற்றார் முன்
படாடோபமாய்க் காட்சி தருவதில் சந்தோஷம்!
பறந்து சென்று பார்வைகள் கலந்து
அன்பில் இதயங்கள் இடம் மாறி
கையில் இருந்த காசு கரையும் வரை
சந்தோஷம்!
பறந்து போகும் நாட்களும்...மீண்டும்
பறக்கத் தயாராகும் நாட்களும் காட்டுமே உண்மையில்
பறந்து போகும் சந்தோஷம்!