Sunday 30 July 2023

இரட்டை பனைமரங்கள்

மூன்றாம் வகுப்பு வரை
பள்ளி செல்லும் பாதையில்
இருந்தது இரட்டை பனைமரங்கள் !

வண்டி தடமாக இருக்கும்
பாதை இரட்டை பனைமரங்களை
தாண்டியும்
அடர்ந்த காடுபோல் மாறி
பிறகு ஒத்தையடி 
பாதையாக மாறும் !

இரட்டை பனைமரங்களில்
முனி இருப்பதாக
சொல்வார்கள் !
தனியாக செல்லும் போது
பயத்துடனே கடப்பேன்
பனைமரங்களை !

இரட்டை பனைமரங்களில்
ஒன்றை வெட்டிய பின்
முனி இல்லை என்பது
உறுதியானது !

வரும் போது
பனை மரத்தை கடந்தால்
வீடு தெரியும்
மனதில் பயமும் விலகும் !

ஒற்றை பனையும்
வெட்டப்பட்ட நாளில்
பாதை வெறுமையாக
இருந்தது !

பனை மரங்கள் இருந்த
இடத்தில் தற்போது
போடப்பட்டுள்ள சாலையின்
நிறம் பனைமரங்களின்
நிறமாக நிற்கிறது !!!

Saturday 29 July 2023

மூன்று ஆலமரங்கள்

முதல் ஆலமரம் 

கீழக்குளத்தின் 

கிழக்குக் கரையில்,

எங்கள் பகுதியின் அடையாளம்,

ஆலமரத்தை வைத்து

புதியவர்களுக்கு முகவரி

சொன்னோம் !

முதல் முறையாக பேருந்து

வந்து திரும்பியதும்

ஆலமரத்தின் அருகில் தான் !

வெட்டி வீழ்த்தப்பட்ட

பெரிய சாம்ராஜ்யம் அது !

இரண்டாம் ஆலமரம்

மேலக்குளத்தின் கரையில்

மாலையில் அடையும்

பறவைகளின் சத்தம்

அடங்க நேரம் எடுக்கும்.

பறவைகளின் எச்சமும்

நசுங்கிய ஆலம்பழங்களாய்

இருக்கும் குளத்துப் பாதை !

வயதாகிய மரம்

பெருமழையின் காற்றில்

மரணித்து விட்டது !!

மூன்றாம் ஆலமரம்

கீழக்குளமும் ஓடையும்

சந்திக்கும் இடத்தில்

விழுது பரப்பி இருக்கிறது !

எங்கள் தோட்டத்திற்கு

செல்லும் வழியில் இன்றும்

இருக்கிறது உயிர்ப்புடன் !

யாரும் இளைப்பாறலாம்

கால்நடைகளே அதிகம்

இளைப்பாறுகிறது

இந்த ஆலமரத்தடியில் !!!



Wednesday 19 July 2023

மணிப்பூர்

மனதை உலுக்குகிறது

மணிப்பூர் நிகழ்வுகள்!

இயற்கை எழில் கொஞ்சும்

இந்திய பகுதி தானே இது

கிரிக்கெட்டுக்கு ஒருமைப்பாடு

காட்டும் நாம்

மணிப்பூருக்கு மௌனம்

காப்பது ஏன்?

வட கிழக்கு மாநிலம்

வருமான குறைவான மாநிலம்

என்று நிலவரம் இருக்கலாம்

தன்மானத்தை இழக்கும்

கலவரங்கள் எதற்கு !

மணிப்பூரும் இந்திய

தாயின் குழந்தை

மனிதனை வேட்டையாடும்

மனித மிருகங்களுக்கு 

தண்டனை தாருங்கள்

அரசே 

தண்டமாக இருந்தது போதும்!!!

Friday 14 July 2023

ஐயர் வீடு

1. ஐயர் வீடு

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
சக்கிலியன் சென்று
வந்தான் வெள்ளை அடிக்க !

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
பறையன் சென்று
வந்தான் அரிசி
மூட்டைகளை அடுக்க !

ஆண்டுக்கு ஒருமுறை
ஐயர் வீட்டுக்குள்
நாடான் சென்று வந்தான்
கருப்பட்டி சிப்பத்தை
வைக்க !

அடி வயிற்றில் வலியோடு
துடித்தாலும்
மாதம் ஒருமுறை
வீட்டிற்குள் செல்ல
முடியவில்லை
ஐயர் வீட்டு
பெண்களால் !!!

2. செல்லாத பணம்

கருப்பு பணத்தை
ஒழிக்க வந்தது
இளஞ்சிவப்பு நிற
இரண்டாயிரம் ரூபாய் !

சுயமி எடுத்த கொண்ட
பின் சில்லறை கிடைக்கமால்
தவிக்க விட்டது !

சாமானியன் மறந்து
விட்ட இல்லாத பணம்
செல்லாத பணம் ஆகிறது
செப்டம்பர் முதல் !!!

3. பெரியார் வழி

உத்தரப் பிரதேசத்தில்
சாதி வெறி என்று எழுதிக் 
கொண்டே
தமிழ் சினிமாவை விமர்சனம்
செய்கிறான் சுய சாதி
சார்ந்து !

மணிப்பூரில் மதக் கலவரம்
என்று எழுதி கொண்டே
வெளிநாட்டு கிரிக்கெட்
வீரரின் விளையாட்டு திறமையை
சிலாகிக்கிறான்
தன் மதம் சார்ந்து !

பெயருக்கு பின்னால் சாதி
போடுவதில்லை என்று
பெருமிதமாக கூறி
கொண்டே
சமத்துவ புரங்கள்
ஊருக்கு ஒதுக்கு புறமாக
கட்டப்பட்ட அரசியல்
தெரியாமல் இருக்கிறான் !

பெரியார் வழியில்
பயணிக்கும் ஒருவன் !!!

4. மதுக்கடை

காலை ஏழு மணிக்கே
மதுக்கடை திறப்பது
பற்றி யோசிப்பதாக
சொல்கிறார்
மதுவிலக்கு துறை
அமைச்சர் !

நீட் தேர்வு பற்றி
பேச நேரமில்லை
பள்ளி கல்வித்துறை
அமைச்சருக்கு !

கிரிக்கெட் மைதானத்திற்கு
சிறுவர்களை அழைத்து
செல்லும் பணியை 
சிறப்பாக செய்கிறார்
விளையாட்டு துறை
அமைச்சர் !

பால் பாக்கெட்
வண்ணத்தை மாற்றி
சத்தமில்லாமல் விலை
ஏற்றிவிட்டார்
பால்வளத்துறை !

வருமானம் பற்றி
தரவு இல்லை என்று
தெரிந்தாலும்
அதில் முறைகேடுகள்
நிச்சயம் நடக்கும்
என்றாலும்
வருமானத்தின் அடிப்படையில்
மகளிர் உதவித்தொகை
என்கிறார் முதல்வர் !!!


Wednesday 5 July 2023

கானமயில்

"கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" என்று ஒளவை மூதுரையில் பாடிய கானமயில் இன்று தமிழ்நாட்டில் கிடையாது.



மிக மோசமாக அருகி வரும் உயிரினம், தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இருந்த கானமயில்கள் இப்போது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் மட்டுமே உள்ளது. எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா 150. (2018 கணக்கெடுப்பின்படி).

1930ல் ஒகேனக்கல் மற்றும் கோவையில் அவை இருந்ததாக சொல்கிறார் சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன்.

கானமயில், பறக்கும் பறவைகளில் அதிக எடை கொண்ட பறவை. (நெருப்பு கோழிக்கு பறக்க தெரியாது). இதன் எடை 8 கிலோ முதல் 15 கிலோ. அதிகம் பறப்பது இல்லை பெரும்பாலும் நடந்தே இரை தேடி கொள்பவை.

புல், பூண்டுகள் மற்றும் பூச்சிகளை உண்ணும் அனைத்துண்ணி கானமயில்.

கானமயில் வாழிடங்கள் வறண்ட நில புல்வெளிகள், தற்போது இருக்கும் 90% கானமயில்கள் ராஜஸ்தானில் மட்டுமே உள்ளது. ராஜஸ்தான் மாநில பறவையும் கூட.

1960களில் சலீம் அலி என்ற சூழலியல் அறிஞர் கானமயிலை தேசிய பறவையாக அறிவிக்க குரல் கொடுத்தார். அதன் ஆங்கிலப் பெயர் Great Indian Bustard உச்சரிப்பு பிரச்சினை ஆகும் என்ற காரணத்தால் கைவிடப்பட்டது.

கானமயிலின் அழிவுக்கு முக்கிய காரணம் வேட்டை, ஆங்கிலேயர் காலத்தில் அதிகமாக வேட்டையாட பட்டுவிட்டது. அடுத்த காரணம், கானமயில்களுக்கு நேர் பார்வை கிடையாது, பக்க வாட்டு பார்வை அதனால் மின் கம்பிகளின் அடிப்பட்டு நிறைய இறந்துவிட்டன. 

கானமயில் தரையில் முட்டை இடும் இனம், இதனால் நாய், நரி, உடும்பு போன்றவை முட்டையை எளிதில் சூரையாடிவிடுவது மூன்றாம் காரணம்.

அச்சம் நிறைந்த பறவை என்பதால் இனப்பெருக்கத்திலும், குஞ்சுகளை காப்பாற்றுவதிலும் பின்தங்கியுள்ள பறவையினம்.

தற்போது ராஜஸ்தான் மாநில பாலைவன பூங்காவில் கானமயிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும் காற்றாலை, சூரிய மின் சக்தி என தனியார் நிறுவனங்கள் ராஜஸ்தான், குஜராத்தை படை எடுக்கின்றன. 

Monday 3 July 2023

பாலை நிலப் பயணம் - புத்தகம் பற்றி

வாசிப்பது எப்படிக்கு பின் எழுத்தாளர் செல்வேந்திரன் ஆக்கத்தில் நான் வாசித்த இரண்டாவது புத்தகம் பாலை நிலப் பயணம்.

எனக்கு பயணங்கள் மிகவும் பிடித்தவை. ஆனால் ஏனோ பயணங்கள் அமைவதில்லை. பயணங்கள் பற்றிய புத்தக ஆர்வமும் அதிகமாகிவிட்டது. 

பாலை நிலப் பயணம் என்றதும் வளைகுடா நாடுகளை வளைய வளைய சுற்றிய அனுபவம் என்றோ, ஆப்பிரிக்க நாடுகளை அணுகிய பயணம் என்றோ நினைக்க வேண்டாம்.

இது நம் நாட்டின் பாலைநில மாநிலங்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சுற்றிய அனுபவங்கள். பயணத்தில் வேறுபட்ட ரசனைகள் கொண்ட மனிதர்கள் அவர்களின் தேடல் என அழகாக விவரிக்கிறார்.

வாசிக்க வாசிக்க நாமே பாலை நிலத்தில் பயணிக்கும் பரவசம் தொற்றிக் கொள்கிறது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தொடங்கி அகமதாபாத் விமான நிலையத்தில் முடிகிறது இந்த புத்தகம்.

ஓசியான், கிச்சான், ஜெய்சல்மார், பர்மார், பூஜ் என்ற பகுதிகளில் சிலவற்றை, டிராவல் எக்ஸ்பி சேனலில் மட்டுமே பார்த்த எனக்கு எழுத்து மூலம் காட்சிப்படுத்தியது சுவாரஸ்ய அனுபவமாக இருந்தது.

என்பு என்ற சொல்லின் இன்னொரு பொருள்,  தங்க உப்பளம் என வழி நெடுக காட்டுமல்லி.

கானமயில் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும்.ஆங்கில பெயர் பஸ்டார்ட் உச்சரிப்பால் தகுதி இழந்தது என்பது புது தகவல் தருகிறார்.

" எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா" என்று பாட்டு மட்டுமே கேட்டவர்களுக்கு, ராணி கீ வாவ் வரலாறு வியக்க வைக்கும்.

ராஜஸ்தானையும் குஜராத்தையும் சுற்றி பார்க்க தூண்டுகிறது இந்த புத்தகம்.