Saturday 26 November 2022

13 நாட்கள்

காலை எட்டு மணிக்கு அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தேன். நண்பனிடம் இருந்து போன் வந்தது.

இவன் வாட்சப்லயே ஸ்மைலி மட்டும் தானே போடுவான், போன் பண்றானே என்று நினைத்து கொண்டே போனை எடுத்தேன்.

மாப்ள, வேலையை விட்டு தூக்கிட்டாங்க, ரொம்ப டிப்ரசனா இருக்கு. நீ என் ரூம்க்கு வா என்றான். 

நான் எனது மேனேஜருக்கு போன் செய்தேன். சார், எனக்கு லீவு வேணும் அர்ஜென்ட் பர்சனல் வொர்க் என்றேன்.

நம்ம ப்ராஜெக்ட் டாக்குமெண்ட் சப்மிட் பண்ணனும் இன்னிக்கு என்றார். அதை வேறு யாரையாவது வச்சு பண்ணுங்க சார் என்று சொல்லிவிட்டு, அவர் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தேன்.

நண்பனின் அறைக்கு சென்றேன். காலையிலே சரக்கடிக்க தயாராகி கொண்டிருந்தான். நேற்று வரை பார்த்த வேலை இன்று இல்லை என்றால் யாருக்கு தான் மன அழுத்தம் இருக்காது என்று நினைத்து கொண்டே விசாரித்தேன்.

கடந்த ஆறு மாதத்தில் 13 நாட்கள் லீவு எடுத்ததால் வேலையை விட்டு நீக்கிவிட்டதாக, எச்ஆர் சொன்னதாக சொன்னான். 

நான் வேனா பேசி பார்க்கவா என்றேன். எச்ஆர்ன் விசிட்டிங் கார்டை தந்து கையால் சைகை செய்தேன். தண்ணீர் கலந்த செந்நீர் திரவம் அவன் தொண்டையில் இறங்கி கொண்டிருந்தது.

விசிட்டிங் கார்டை பார்த்தேன். சுவப்னில் குல்கர்னி என்று இருந்தது. ஆணாதிக்க திமிர் பிடித்த வடக்கனாக இருக்கக்கூடும் என நினைத்து கொண்டேன். ஒரு பெண் எச்ஆராக இருந்தால் நிச்சயம் நல்ல அணுகுமுறை இருந்திருக்கும் என நினைத்தேன்.

நண்பனின் துறை மற்றும் அடையாள அட்டை எண்ணை சொல்லிவிட்டு பேச துவங்கினேன். நீங்க யார் என்றான் குல்கர்னி. நான் அவனது நண்பன், நலம் விரும்பி, வழக்கறிஞர் என்று கூட வைத்து கொள்ளலாம் என்றேன். 13 நாள் லீவு போட்டதுக்கு வேலையை விட்டு நீக்குவதா? அவனை வைத்து கோடி கோடியாக சம்பாதிக்கிறீர்களே என்று சொன்னேன்.

எனது அடுக்குமொழி, ஆங்கில தோரணையில் குல்கர்னி அரண்டிருக்க கூடும். அமைதியாக பதில் கூறினான்.

உங்க நண்பர் கடந்த ஆறு மாதமாக வீட்டில் இருந்தே பணிபுரிகிறார். மாதம் இருமுறை அலுவலகம் வந்து ரிப்போர்ட் சப்மிட் செய்ய வேண்டும் என்பது மட்டுமே கம்பெனியின் கட்டளை. மாதந்தோறும் ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டிய நாளில் மட்டும் விடுமுறை எடுத்துள்ளார்.

உடல்நல பிரச்சினை என்றால் மருத்துவ சான்றிதழ் அளிக்க சொல்லி கடந்த மாதம் அனுப்பிய மெயிலுக்கு, "I am fully fit, no issues " என்று பதிலளித்துள்ளார் என்றார் குல்கர்னி.

நான் நண்பனை திரும்பி பார்த்தேன், அந்த செந்நிற திரவ பாட்டில் காலியாகி, அவனது கண்கள் சிவந்திருந்தது, கொதிக்கும் என் ரத்தத்தை போல.


Thursday 24 November 2022

படங்கள்

இரத்தத்தில் ஊறியது சினிமா என்ற சொல்லாடல் உண்மையா?

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் ஐயர் வீட்டில் மட்டுமே டிவி உண்டு. ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க அனுமதியும் இருந்தது. ஞாயிறு படத்திற்கு பேரும் கூட்டமே வரும், என்ன படம் போட்டாலும் பார்ப்பார்கள். வாசிக்க தெரிந்தவர்கள் முதலில் பார்ப்பது சிரிப்பு நடிகர் யார் யார் என்று.

அது போக, கல்யாணம் மற்றும் சடங்கு வீடுகளில் இரவு டிவி டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவார்கள். ஓர் இரவில் நான்கு படங்கள். இங்கு கலர் டிவியில் கலர் படம் பார்க்கலாம் என்பதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

அதில் முதல் படம் நிச்சயமாக சாமி படம் சரஸ்வதி சபதம், திருவிளையாடல், துர்கா, ஆடி வெள்ளி போன்றவை. இரண்டாவது அப்போதைய ஹிட் படங்கள் கிழக்கு வாசல், சின்ன தம்பி, வீரா, சின்ன கவுண்டர், வைகாசி பொறந்தாச்சு போன்றவை. அடுத்த ரெண்டு படங்கள் விழித்திருப்பவர்கள் திறமைக்கு சவால் என்பதால். டெக் வாடகைகாரர் வைத்திருக்கும் படங்களில் ஏதாவது இருக்கும்.

பாடல்களை ஓடவிடும் முறையோ, நிறுத்தி விட்டு மறுநாள் பார்க்கும் முறையோ கிடையாது. படம் எப்படி இருந்தாலும் முழுதாக பார்ப்போம். நடிகர்களை வைத்தோ, குறியீடு வைத்தோ படம் பார்ப்பது இல்லை.

திருநெல்வேலியில் தியேட்டர்களிலும் படம் பார்ப்பவர்கள் உண்டு, நிறைய தியேட்டர்களும் உண்டு. ரத்னாவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எதிரில் இருக்கும் பார்வதி தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் உண்டு. என்ன படம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதில்லை. படம் பார்ப்பதை தவம் போல் செய்பவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள்.

தியேட்டரில் முன் வரிசை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே டிக்கெட் விலை ₹3. ஆண்களுக்கு ₹6 டிக்கெட் தொடங்கும். பெண்கள்களால் குறைந்த விலையில் படம் பார்க்க முடிந்தது, அது மட்டுமில்லாமல் பக்கத்தில் இருந்து படம் பார்ப்பவரும் பெண்தான் என்ற திருப்தியையும் தியேட்டர்கள் வழங்கியது.

தீபாவளி பொங்கலுக்கு ஏழு எட்டு படங்கள் வெளியானாலும் அத்தனை படங்களையும் வெளியிடும் அளவுக்கு தியேட்டர்கள் இருந்தன. பழைய படங்களை வெளியிடும் தியேட்டர்களும் உண்டு.

கேபிள் டிவி வந்த பிறகு சன்டிவி ராஜ்டிவியில் போடப்படும் படங்களையும் பார்த்து வந்தார்கள். குறிப்பாக ராஜ் ப்ளஸ் என்று அறிமுகமான சேனலில் அடிக்கடி படங்களே ஒளிபரப்பானது.

ஆனால் மெகா சீரியல்கள் அறிமுகமான பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்கும் ஆர்வம் பெண்கள் மத்தியில் குறைய தொடங்கியது. தியேட்டர்கள் திருமண மண்டபங்கள் ஆனது அல்லது மூடப்பட்டது.

இப்போதும் நாங்கள் கேடிவியில் போடப்படும் படங்களை தொடர்ந்து இரு படங்கள் பார்ப்பது உண்டு. என்ன தான் திரைப்படங்களின் யுக்தி மாறினாலும் எங்களுக்குள் இருக்கும் அந்த சினிமா வெறியன் உறங்குவதில்லை.



Friday 18 November 2022

ஐயாச்சாமி

ஐயாச்சாமி என்பது என் அப்பாவின் பெயர். 40 - 50 குடும்பங்கள் வாழும் சிறிய கிராமத்தில், நாலு சலவை தொழிலாளர்கள் குடும்பத்தில் எங்கள் குடும்பமும் ஒன்று.

எங்கள் நாலு குடும்பத்திற்கும் சரிசமமாக வீடுகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த வீடுகளின் துணிகளை துவைத்து, வெள்ளாவியில் வைத்து வெளுத்து, தேவைப்பட்டால் இஸ்திரி போட்டு கொடுக்கும் பணி எங்கள் குடும்பத்திற்கு. 

துணிகளில் ஒவ்வொரு வீட்டுக்குமான முத்திரை இருக்கும். அறுவடையின் போது ஆண்டுக்கான நெல் கூலியாக கிடைக்கும்.

இறப்பு வீட்டு சடங்குகளுக்கு அன்றே கூலி உண்டு. தாத்தா ஆற்று பாறையிலோ, குளத்து கல்லிலோ துணி துவைக்கும் போது ஒவ்வொரு அடிக்கும் ஊஸ் ஊஸ் என்று சத்தமிடுவார். ஆச்சியின் வேலை துணிகளை காய வைப்பது. கழுதைகளை கையாள்வது.

என் சிறிய வயதில், எங்கள் வீட்டில் ஒரு குட்டி கழுதை பிறந்தது. அப்போது தான் அப்பாவுக்கும் டவுனில் இருந்த மில்லில் வேலை கிடைத்தது. ஆனால் ஊர் கட்டுபாடுகளுக்காக துணியும் துவைத்தாக வேண்டும்.

அப்பா ஷிப்ட் முடிந்து வந்து கொஞ்ச நேரம் தூங்கி, மீதி நேரம் துவைப்பு வேலைகள் செய்வார். மூணு ஷிப்ட்டில் இரண்டாவது ஷிப்ட் மட்டும் அப்பாவுக்கு சிரமமானது. இரவு 11 மணிக்கு ஷிப்ட் முடிந்தாலும் காலை 4.30 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் தான் தூங்க வேண்டும்.

தாத்தா இருந்தவரை சலவையை தாத்தா பார்த்து கொண்டார். தாத்தாவின் மறைவுக்குப் பின் அம்மாவுக்கு கூடுதல் சுமை. அண்ணன் படிப்பு ஏறவில்லை என்று சலவையை கையில் எடுத்தான்.

அப்பாவுக்கு மில் வேலை கிடைப்பதற்கு முன் வீடு வீடாக சென்று சோறு வாங்கி வந்தே சாப்பிட்டோம். அப்பா வேலைக்கு சென்றபின் மற்ற சலவை குடும்பங்கள் சோறு வாங்கி வந்ததாலும், எங்கள் வீட்டில் சொந்த உலை.

ஊரில் இருந்த பள்ளியில் ரெண்டு சுதாகர்கள் இருந்ததால், என்னை எல்லாரும் ஐ சுதாகர் என்று கூப்பிட்டனர். சிலர் ஐ சுதாகர் ஐஐ சுதாகர் என்று கிண்டல் செய்தனர். சிலர் வண்ணாப்பய சுதாகர் என்றனர். பெரிய பள்ளிக்கூடம் சென்றபின் நான் பெருமிதமாக சொல்லி கொண்டேன் எனக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்ஷியல் ஐ என்று.

என் வயதுகாரர்கள் கூட அப்பாவை பேர் சொல்லியே கூப்பிட்டனர். இது பற்றி அம்மாவிடம் கேட்ட போது சிரித்து கொண்டாள். அக்காவிடம் கேட்டபோது நாம் கீழ் சாதி என்றாள். 

நாம் மேல் சாதி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றேன். அப்போது அப்பா சொன்னது, "படிச்சி நல்ல வேலைக்கு போ, இந்த கழுதை மேய்க்கிறது, அயர்ன் பண்றது, வெள்ளாவி வைக்கிறது" உன்ன விட்டு போகும் என்றார். எனக்கு சரியாக புரியவில்லை. 

கோவில் கொடை எங்கள் கிராமத்தில் சுவாரஸ்மானது. தாத்தா அருள் வந்து சாமியாடுவார். தாத்தா காலில் விழுந்து திருநீறு பூசிக் கொள்வார்கள். தாத்தா இறந்த பின் அப்பாவுக்கு அருள் வரவில்லை. நீண்ட நேரம் மேளம் அடித்தும் யாருக்கும் அருள் வரவில்லை.

அப்பாவோடு மில்லில் வேலைக்கு சேர்ந்தவர்கள் புற நகர் பகுதியில் இடம் வாங்கினர் தவணை திட்டத்தில். அப்பா அதில் சேரவில்லை. 

அப்பாவிடம் ஒருத்தர் சொன்னார் ஐயாச்சாமி, நீ எடத்த வாங்கி போட்டா, நாளைக்கு உம் மவன் ஐயாச்சாமி பவனம்னு வீடு கட்டுவான் என்றார். அப்பா எதுவும் சொல்லவில்லை. ஆனால் அக்காவுக்கு நகை சேர்ந்தார்.

நிறைய பேர் இரு சக்கர வாகனம் வாங்கினர், மில்லுக்கு சென்று வர. ஆனால் அப்பா பேருந்திலே சென்று வந்தார். 

அப்பா ஓய்வு பெறும் முன் வண்டி வாங்கினர். அவர் வண்டி வாங்கிய பின் தினமும் யாராவது அப்பாவுடன் வண்டியில் வருவார்கள்.

அக்கா திருமணமாகி போன பின், துணி வரத்து குறைந்து போனது. ஆனால் துவைக்க கடினமான போர்வைகள், நோயாளிகளின் உடைகள் வந்தது.  அண்ணன் அயர்ன் மணி ஆனான்.

அப்பாவின் உழைப்பு எங்கள் வீட்டில் உலைக்கு மட்டும் உதவவில்லை. எனது படிப்பிற்கும் உதவியது. அப்பாவை ஊரில் உள்ளவர்கள் கிண்டல் செய்தார்கள், ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் என்னை கம்பியூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படிக்க வைத்தார்.

தடுமாற்றங்களுடன் படித்தாலும் வேலை கிடைத்தது. அலுவலக மெயில் ஐடியில் சுதாகர் ஐயாச்சாமி என்று இருந்தாலும் எனக்கு ஏதோ திருப்தி ஏற்படவில்லை.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தது. விமான நிலையத்தில் சுதாகர் ஐயாச்சாமி என்று கூப்பிட்டதும் எனக்கு திருப்தி தரவில்லை. வெளிநாட்டில் சம்பாதித்து அப்பா தவணை முறையில் வாங்க முடியாமல் போன புறநகர் (இன்றைய நகர்) பகுதியில் இடம் வாங்கினேன்.

அப்பா வீடு கட்ட சொன்னார். எனக்கு வேறு யோசனைகள் இருக்கிறது என்றேன். அதற்கும் அப்பா இசைந்து ஆலோசனைகள் வழங்கினார். 

எனது யோசனை வடிவம் நாளை முதல் செயல் வடிவம் பெறுகிறது. இந்த தருணத்தில் அந்த கட்டிடம் முன் நிற்கிறேன். எனதருகில் அப்பா.

ஒருவர் என்னிடம் வந்து பேசினார். ஐயாச்சாமி பிள்ளைகள நல்லா வளர்த்துட்டான், நான் சரியா வளர்க்கல. உன் இதுல எனக்கு வாட்ச்மென் வேலை கிடைக்குமாய்யா என்றார்.

அப்பாவுடன் மில்லில் வேலை பார்த்தவர். அப்போது எனது அலைபேசி அழைத்தது.

சார், எம்பிளாயி டீ சர்ட் ரெடி, ISM லெஃப்ட் சைட்ல வரனுமா? ரைட் சைட்ல வரனுமா? என்றார் அழைத்தவர்.

ISM வேண்டாம், ஐயாச்சாமி சூப்பர் மார்க்கெட் என்று தமிழில் எழுதுங்கள் என்றேன். ஏதோ 'சாதி'த்த பெருமிதம் முதல் முறையாக.




Thursday 10 November 2022

2022 இந்திய கிரிக்கெட் அணி

2022 உலகக்கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்திய அணி குறித்த பார்வை தான் இந்தப் பதிவு.

தயாரான விதம் :

ஆஸ்திரேலியாவில் போட்டி நடைபெறும் என்று  தெரிந்தும் இந்திய அணி மந்தமாகவே தயாரானது. இந்த ஆண்டில் நடைபெற்ற நிறைய தொடர்களில் அணித் தலைவர் ரோகித்தே ஓய்வில் இருந்தார்.

ஒவ்வொரு தொடரிலும் வெவ்வேறு துவக்க ஆட்டக்காரர்களை தயார் செய்தது. பண்ட், சூர்ய குமார், இஷான், ராகுல் என சோதித்து ராகுலோடு களமிறங்கி முடிவானது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்பதால் அதற்கு முன்னால் ஏதேனும் தொடர் வைத்திருந்தால் அந்த சூழல் பழக வாய்ப்புண்டு. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவோடும் பாகிஸ்தான் நியூசிலாந்திலும் உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டத்திலாவது கொஞ்ச காலமாக ஆடாத இங்கிலாந்தை கேட்டிருக்கலாம். சமீபத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவுடனே ஆடியது.

அணித் தேர்வு 

பும்ரா காயம் காரணமாக வெளியேற மாற்று ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்ட ஷமி ரொம்ப காலமாக டி20 போட்டிகளில் விளையாடாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஒருநாள் உலகக்கோப்பையில் வலது கை துவக்க ஆட்டக்காரர்களே ஆடினாலும், மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரர்கள் வலுவாக இருந்தனர். 100 கோடி பேரில் இடது கை ஆட்டகாரர்களை இந்தியா தேடியது. பண்ட் மட்டுமே அகப்பட்டார்.

பகுதி நேர பந்து வீச்சாளர் பாண்ட்யா மட்டுமே. அவரும் முழு நேர பந்து வீச்சாளராக பணியாற்றினார். எல்லா நாடுகளும் தரமான லெக் ஸ்பின்னர் வைத்திருந்த போது இந்தியா கொஞ்ச காலமாக சரியாக வீசாத சகாலை தேர்வு செய்தது ஏனோ.

ராகுல் மோசமாக ஆடினாலும் ராகுல் டிராவிட்டால் காப்பாற்றப்பட்ட அவலமும் தொடர்ந்தது. அதே போல் கூடாவுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் பீல்டர்கள் அதிக தூரம் கிரவுண்டை கவர் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ரோகித், ஷமி, அஸ்வின் அதை செய்யும் அளவுக்கு இல்லை. 

140+ வேகத்தோடு திறமையாக பந்து வீசும் யாரும் இந்தியாவில் இல்லை என்பது தேர்வு குழுவின் முடிவு. புவனேஸ் நல்ல ஸ்விங் செய்வார். அவரை அடித்தால் மொத்த அணியும் காலி என்பது அரை இறுதியில் தெரிந்த உண்மை.

ஆடிய விதம் :

இந்தியா எல்லா போட்டிகளிலும் மந்தமாகவே தொடங்கியது. முதல் போட்டியில் 12வது ஓவரில் அடித்து ஆட துவங்கியது. 

அக்சர் பட்டேல் என்ன செய்தார் ? பேட்ஸ்மேனா பவுலரா என்ற குழப்பத்தில் ஏதோ செய்தார். 

ஹர்சல் பட்டேல் நிலையோ நிற்காமல் தண்ணீர் கொண்டு போனது தான்.

பீல்டிங் படு மோசம் என்று சொல்லி தெரிவதில்லை. யாருக்கும் டைரக்ட் ஹிட் அடிக்க தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கின் சறுக்கல்களை கோலி, சூர்யா, பாண்ட்யா சரிக்கட்டியதால் ஓட்டை வெளியே தெரியவில்லை.

மொத்தத்தில் தயாரான விதம், அணித் தேர்வு, ஆடிய விதம் எல்லாமே படு மோசம்.

ஆனால் ஒரே ஆறுதல் ரோகித் கேப்டன்சி.

புவனேஸ், அர்ஸதீப் கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஸ்விங் பவுலர்கள், அவர்களை சரியாக பயன்படுத்தினார். டெத் ஓவர்கள் பலவீனத்தை சரிகட்டிவிட்டார். அக்சர் பட்டேலே மேலே இறக்கி பார்த்தார். பண்ட், கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தார்.

ஹர்திக் பவுலிங்க சரியாக கையாண்டார். அக்சரை பவர்ப்ளேவில் பந்து வீச வைத்தார் (ஆனால் பலனில்லை). 

இந்திய கிரிக்கெட்டின் அரசியல் குறைந்தால் மீண்டும் ஒருநாள் வெல்வோம்.

Tuesday 8 November 2022

கிரிக்கெட் நினைவுகள் 9

முகமது அஸ்ரபுல் 

பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்.



அஸ்ரபுல்லின் கிரிக்கெட் கேரியர் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து.

டெஸ்டில் மூன்று முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். அவரது அணி தோற்றாலும் அவரது திறமைக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதுகள் அவை.

பங்களாதேஷ் அணிக்காக மூன்று வகை சர்வதேச போட்டிகளிலும் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் அஸ்ரபுல்.

டெஸ்டில் 26 பந்துகளில் இந்தியாவிற்கு எதிராக.

ஒருநாள் போட்டிகளில் 21 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிராக.

சர்வதேச டி20 போட்டிகளில் 20 பந்துகளில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக.

குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையும் அஸ்ரபுல் வசமே உள்ளது. 17 வயது 61* நாட்கள். (*இவரது பிறந்த நாள் 7- ஜூலை -84 தேதியா, 9 - ஜூலை - 84 தேதியா என்ற குழப்பமும் உள்ளது ஆனாலும் இவர் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் ).

https://www.espncricinfo.com/series/asian-test-championship-2001-02-60711/sri-lanka-vs-bangladesh-2nd-match-63947/full-scorecard

பங்களாதேஷ் அணியின் கேப்டனாக 13 டெஸ்ட், 38 ஒருநாள் போட்டி மற்றும் 11 டி20 போட்டிகளுக்கு இருந்துள்ளார். இவற்றில் 8 ஒருநாள் போட்டிகளிலும், 2 டி20 போட்டிகளிலும் வென்றுள்ளார்.

மோசமான ஃபார்ம் காரணமாக இவரால் அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போது மேட்ச் பிக்சிங்ல் ஈடுபட்டதால் கிரிக்கெட் வாரியம் இவருக்கு எட்டு ஆண்டு தடை விதித்தது. பிறகு 5 ஆண்டாக தண்டனை காலம் குறைக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகளில் 6 சதமும் ஒருநாள் போட்டிகளில் 3 சதமும் அடித்துள்ளார் அஸ்ரபுல்.