Thursday, 24 November 2022

படங்கள்

இரத்தத்தில் ஊறியது சினிமா என்ற சொல்லாடல் உண்மையா?

எனது சிறு வயதில், எங்கள் ஊரில் ஐயர் வீட்டில் மட்டுமே டிவி உண்டு. ஞாயிற்றுக்கிழமை படம் பார்க்க அனுமதியும் இருந்தது. ஞாயிறு படத்திற்கு பேரும் கூட்டமே வரும், என்ன படம் போட்டாலும் பார்ப்பார்கள். வாசிக்க தெரிந்தவர்கள் முதலில் பார்ப்பது சிரிப்பு நடிகர் யார் யார் என்று.

அது போக, கல்யாணம் மற்றும் சடங்கு வீடுகளில் இரவு டிவி டெக் வாடகைக்கு எடுத்து படம் போடுவார்கள். ஓர் இரவில் நான்கு படங்கள். இங்கு கலர் டிவியில் கலர் படம் பார்க்கலாம் என்பதால் அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

அதில் முதல் படம் நிச்சயமாக சாமி படம் சரஸ்வதி சபதம், திருவிளையாடல், துர்கா, ஆடி வெள்ளி போன்றவை. இரண்டாவது அப்போதைய ஹிட் படங்கள் கிழக்கு வாசல், சின்ன தம்பி, வீரா, சின்ன கவுண்டர், வைகாசி பொறந்தாச்சு போன்றவை. அடுத்த ரெண்டு படங்கள் விழித்திருப்பவர்கள் திறமைக்கு சவால் என்பதால். டெக் வாடகைகாரர் வைத்திருக்கும் படங்களில் ஏதாவது இருக்கும்.

பாடல்களை ஓடவிடும் முறையோ, நிறுத்தி விட்டு மறுநாள் பார்க்கும் முறையோ கிடையாது. படம் எப்படி இருந்தாலும் முழுதாக பார்ப்போம். நடிகர்களை வைத்தோ, குறியீடு வைத்தோ படம் பார்ப்பது இல்லை.

திருநெல்வேலியில் தியேட்டர்களிலும் படம் பார்ப்பவர்கள் உண்டு, நிறைய தியேட்டர்களும் உண்டு. ரத்னாவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எதிரில் இருக்கும் பார்வதி தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் உண்டு. என்ன படம் எப்படி இருக்கும் என்று பார்ப்பதில்லை. படம் பார்ப்பதை தவம் போல் செய்பவர்கள் எங்கள் ஊர்க்காரர்கள்.

தியேட்டரில் முன் வரிசை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே டிக்கெட் விலை ₹3. ஆண்களுக்கு ₹6 டிக்கெட் தொடங்கும். பெண்கள்களால் குறைந்த விலையில் படம் பார்க்க முடிந்தது, அது மட்டுமில்லாமல் பக்கத்தில் இருந்து படம் பார்ப்பவரும் பெண்தான் என்ற திருப்தியையும் தியேட்டர்கள் வழங்கியது.

தீபாவளி பொங்கலுக்கு ஏழு எட்டு படங்கள் வெளியானாலும் அத்தனை படங்களையும் வெளியிடும் அளவுக்கு தியேட்டர்கள் இருந்தன. பழைய படங்களை வெளியிடும் தியேட்டர்களும் உண்டு.

கேபிள் டிவி வந்த பிறகு சன்டிவி ராஜ்டிவியில் போடப்படும் படங்களையும் பார்த்து வந்தார்கள். குறிப்பாக ராஜ் ப்ளஸ் என்று அறிமுகமான சேனலில் அடிக்கடி படங்களே ஒளிபரப்பானது.

ஆனால் மெகா சீரியல்கள் அறிமுகமான பிறகு கொஞ்சம் கொஞ்சமாக படம் பார்க்கும் ஆர்வம் பெண்கள் மத்தியில் குறைய தொடங்கியது. தியேட்டர்கள் திருமண மண்டபங்கள் ஆனது அல்லது மூடப்பட்டது.

இப்போதும் நாங்கள் கேடிவியில் போடப்படும் படங்களை தொடர்ந்து இரு படங்கள் பார்ப்பது உண்டு. என்ன தான் திரைப்படங்களின் யுக்தி மாறினாலும் எங்களுக்குள் இருக்கும் அந்த சினிமா வெறியன் உறங்குவதில்லை.



No comments:

Post a Comment