Thursday 29 September 2022

கிரிக்கெட் நினைவுகள் 3

விவிஎஸ் லட்சுமண் 

விவிஎஸ் வெரி வெரி ஸ்பெஷல் என்று அழைக்கப்பட்டாலும் விவிஎஸ்ன் விரிவாக்கம் நிறைய ரசிகர்களுக்கு தெரியாது. வங்கிபுரப்பு வெங்கடசாய் லட்சுமண் என்பதே அவரது முழுப்பெயர்.



மும்பையும் கர்நாடகாவும் கொடி கட்டிப் பறந்த கிரிக்கெட்டில் ஒரு ஆந்திரர் இந்திய அணியில் நுழைவது கடினம் அந்த நாட்களில். சக ஆந்திரர் அசாருதீன் அணி தலைவராக இருந்ததால் சாத்தியம் ஆயிற்று.

1998ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானாலும் நிலையான இடத்தை அவர் பிடித்ததே இல்லை. ஆரம்ப காலத்தில் முக்கியமில்லாத போட்டிகளில் அசாருதீன் ஓய்வெடுக்க ஜடேஜா தலைமையில் ஆடும் போட்டிகளிலே ஆடினார்.

100க்கும் மேலான டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தாலும் ஒரு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் கூட இவர் ஆடியதில்லை. குறிப்பாக 2003 உலகக்கோப்பையில் சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி, யுவராஜ் நிலையான இடத்தை பிடிக்க கைப் மற்றும் தினேஷ் மோங்கியா இதர பேட்ஸ்மேன்களாக இடம்பெற்றனர்.

அசாருதீன், ஜடேஜா, டிராவிட், கங்குலி, கும்ளே, சச்சின், சேவாக் என ஏழு பேர் தலைமையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் கங்குலி தலைமையிலே அதிகம் போட்டிகள் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 1996ல் அறிமுகமாகி இருந்தாலும் முதல் சதம் அடித்தது 2000ல் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்தார்.

https://www.espncricinfo.com/series/india-tour-of-australia-1999-00-62297/australia-vs-india-3rd-test-63867/full-scorecard

1999ல் கும்ப்ளே பத்து விக்கெட் எடுத்த இன்னிங்ஸில் 10வது விக்கெட் வாசிம் அக்ரமை ஷார்ட் லெக்கில் நின்று கேட்ச் பிடித்தவர் லட்சுமண்.

https://www.espncricinfo.com/series/pakistan-tour-of-india-1998-99-61521/india-vs-pakistan-2nd-test-63829/full-scorecard

அடுத்தது வரலாற்று சிறப்புமிக்க கொல்கத்தா டெஸ்ட் (அதைப்பற்றி தனி பதிவே போடலாம்). பாலோ ஆன் ஆனபின் டிராவிட் உடன் இணைந்து மீட்டு வெற்றி பெற வைத்தார் லட்சுமண். லட்சுமணனை அவுட்  ஆக்க ஆஸ்திரேலியா 8 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.
https://www.espncricinfo.com/series/australia-tour-of-india-2000-01-61425/india-vs-australia-2nd-test-63920/full-scorecard

லட்சுமண் மிக அரிதாக பந்து வீச கூடியவர். ஆப் ஸ்பின்னர். ஒருநாள் போட்டிகளில் விக்கெட் எடுத்ததில்லை. டெஸ்ட் போட்டிகளில் 2 விக்கெட் எடுத்துள்ளார். 11 பேரும் பந்து வீசிய டெஸ்ட் போட்டியில் லட்சுமண் 17 ஓவர் பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட்டோ ஒருநாள் போட்டியோ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். டெஸ்டில் 6 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ளார், அதில் 4 ஆஸ்திரேலியாவில் வைத்து. ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ளார். அதில் 3 ஆஸ்திரேலியாவில் வைத்து.

டெஸ்டில் ஆறு முறை ஆட்டநாயகன் விருதும், ஒருமுறை தொடர் நாயகன் விருதும் வாங்கியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார்.

அசாருதீனுக்கு பிறகு சச்சின், கங்குலி, டிராவிட் என கேப்டன் மாறினார்கள். கிரிக்கெட் ஆட தெரிந்திருந்தாலும் கிரிக்கெட் அரசியல் தெரியாததால் ஒருமுறை கூட விவிஎஸ் கேப்டனாகவில்லை.

ஐபிஎல் ஆரம்பித்த போது டெக்கான் அணிக்கு ஐகான் பிளேயர் ஆனார். ஆனால் கேப்டனாக எதுவும் சாதிக்கவில்லை. 
தற்போது வர்ணனையாளர், மென்டர் என்று கிரிக்கெட்டில் தான் இருக்கிறார் வங்கிபுரப்பு வேங்கடசாய் லட்சுமண்.





Monday 26 September 2022

கிரிக்கெட் நினைவுகள் 2

ஆடம் பரோர் 

90களில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்.
1990ல் டெஸ்ட்டில் அறிமுகமானவர். 78 டெஸ்ட்டில் விளையாடி 2865 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு சதம் 14 அரைசதம் உட்பட.
197 கேட்ச்கள் 7 ஸ்டம்பிங்கள்.

1992ல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 179 போட்டிகளில் விளையாடி உள்ளார். 3314 ரன்கள் அடித்துள்ளார், ஒரு சதம் 14 அரைசதம் உட்பட
116 கேட்ச்கள் 25 ஸ்டம்பிங்கள்.

இவரது காலத்தில் நியூசிலாந்து அதிகம் எழுச்சி பெறாத அணி. அதுமட்டுமில்லாமல் மிடில் ஆர்டரில் கிறிஸ் கெயர்ன்ஸ், கிறிஸ் ஹாரிஸ்க்கு பிறகே இவர் பேட்டிங் ஆட வருவார்.

 1996-2000 வரை தொடர்ச்சியாக 84 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்காக விளையாடினார்.

சத்தமில்லாமல் ஒரு உலகச் சாதனை செய்துள்ளார் பரோர். பவுண்டரி, சிக்ஸ் எதுவும் அடிக்காமல் ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர். இந்தியாவுடனான அந்தப் போட்டியில் 96 ரன்களை ஓடியே எடுத்துள்ளார்.
https://www.espncricinfo.com/series/wills-world-series-1994-95-60962/india-vs-new-zealand-3rd-match-65999/full-scorecard

10 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் ஆடிய இவர் 2002ல் ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு அடகு தொழில் செய்து வந்தார்.

2011ல் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ஒரே வீரர் ஆடம் பரோர் தான்.

Friday 23 September 2022

கிரிக்கெட் நினைவுகள் 1

ஆசிப் கரீம் 

கென்யா அணி 90களின் இறுதியில் பிரபலமான அணி. அந்த அணியில் சிறப்பான வீரர்களின் பெயர்களில் 'O' என்ற ஆங்கில எழுத்து இருக்கும். ஸ்டீவ் டிக்கோலா, கென்னடி ஒட்டியனோ, மவுரிஸ் ஒடும்பே, காலின்ஸ் ஒபுயா, தாமஸ் ஒடோயோ ஆகியோருக்கு.

சிலர் இந்திய வம்சாவளியினர் ரவி ஷா உள்ளிட்டோர். கென்ய அணியில் விளையாடியவர்களில் பிரபலமான ஒருவர் ஆசிப் கரீம்.



இடது கை சுழற்பந்து வீச்சாளர், வலது கை பேட்ஸ்மேன். பேட்டிங்கில் பெரிய அளவில் ஆடவில்லை என்றாலும் பந்துவீச்சில் முத்திரை பதிப்பவர்.

தற்போது இவரது மகன் இர்பான் கரீம் கென்ய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஆசிப் கரீம் கொஞ்ச காலம் கென்யா ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருந்துள்ளார். 6 போட்டிகளில் வென்றுள்ளார். அதில் ஒன்று இந்தியாவுக்கு எதிராக.

https://www.espncricinfo.com/series/coca-cola-triangular-series-1998-61027/india-vs-kenya-6th-match-66149/full-scorecard

கென்யாவுக்காக சர்வதேச கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாடிய ஒரே வீரர் கரீம். ஆம் 1988ல் கென்யாவுக்காக டென்னிஸ் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மொத்தமாக 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 1996ல் இந்தியாவுடனான போட்டியில் அறிமுகமானார். 1999 உலகக்கோப்பைக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் கென்யா கிரிக்கெட் நிர்வாகம் 2003 உலகக்கோப்பையில் அவரை ஆடவேண்டும் என்று கேட்டு கொண்டது. 

2003 உலகக்கோப்பையில் கென்யா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. டெஸ்ட் விளையாடாத ஒரு அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது முதல்முறையாக.

2003ல் ஆசிப் தனது முக்கியமான போட்டியில் விளையாடினார்.

ஆஸ்திரேலியா உடனான போட்டியில் அவரது பந்துவீச்சு 8.2-6-7-3.

https://www.espncricinfo.com/series/icc-world-cup-2002-03-61124/australia-vs-kenya-9th-super-65283/full-scorecard

அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகள் பாண்டிங், லீமன் மற்றும் ப்ராட் ஹாக். அந்த போட்டியில் கென்யா தோற்றாலும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2003 உலகக்கோப்பை அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய போட்டி தான் அவரது கடைசிப் போட்டி.

Monday 19 September 2022

கவிதைகளுக்கு மதிப்பில்லை

1

நயமான சொற்கள் 

இனிய மொழிநடை 

கள எதார்த்தம் என 

எத்தனை இருந்தாலும் 

கதைகளுக்கு கிடைக்கும்

மதிப்பு கவிதைகளுக்கில்லை‌.

வார்த்தைகள் நினைவில் 

இருந்தாலும் யாரோ 

எழுதியது என்றே 

சொல்லப்படுகிறது !

அம்மா என்னை 

கடினமான அறைக்குள் 

வைத்து பூட்டி சென்றாள். 

எனக்கு வண்ணமயமான

சிறகு முளைத்து வெளியே 

வந்தேன் !

பூங்காவில் மலர்விட்டு மலர் 

தாவி தேனெடுத்தேன். 

நன்றிக்கடனாக மகரந்தத்தை 

தூவினேன் !!

என்னை வெறுப்பவர்கள் எவரும் 

இல்லை என்பதே என் 

பிறவிப் பயன் !!!

3

நதி உருட்டிய கூழாங்கற்கள்

அப்படியே கிடக்கின்றன.

மணல் அள்ளிய பள்ளங்கள்

கிடக்கிறது.

பாசியை அகற்றிய 

பாறைகளும் இருக்கின்றன.

நதி நனைத்த கோரைகள் 

இருக்கின்றது.

தண்ணீர் இல்லை

என்றாலும் நதிகள்

நகர்வதில்லை !!!

4

நான் வாசித்த கவிதைகளில் 

புத்தன் அழகாக இருந்தான் !

தேடி அலைந்து சில 

புத்தன் சிலைகள் சேகரித்தேன் !!

புத்தனை சாதி வட்டத்தில்

சேர்ந்த பின் 

பரவலாக கிடைக்கும்

புத்தன் சிலைகளில் 

அழகியல் இல்லை !!!
















Sunday 18 September 2022

பத்தாம் வகுப்பு

அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது ஒரு கவுரவம். அது குடும்பத்திற்கே, கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு. 

எனக்கு பத்தாம் வகுப்பு முதல் நாள் வந்தது. அந்த வருடம் தான் விடுதியில் சேர்ந்து இருந்தேன். விடுதி மாணவர்கள் எனது வகுப்பில் நான், சங்கர் மற்றும் சுடலை முத்து மட்டுமே. எனது நீண்ட நாள் நண்பர்கள் பரமசிவன் மற்றும் கண்ணனும் எனது வகுப்பில். 

படிப்பில் போட்டி போட இன்னொரு பழனி, கண்ணபிரான், சங்கிலி பூதத்தான், ரெங்கநாதன் என நிறைய பேர் இருந்தனர். 

முதலில் வகுப்பாசிரியராக வந்தவர் மோகன்தாஸ். அவரின் செல்லப்பிள்ளை சங்கிலி. அவர் அடி வெளுக்க கூடியவர். பாதி நேரம் தூங்கி விடுவார். மூன்று நாட்களுக்கு பிறகு அவரை மாற்றிவிட்டனர்.

வேறு பள்ளியில் இருந்து மாற்றலாகி வேறு ஆசிரியர் வருவதாக சொன்னார்கள். வந்தவர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். நல்ல உயரமானவர் அதிகமாக ஜீன்ஸ் பேண்ட் அணிபவர். அவர் கற்றலின் இனிமை முறை ஆசிரியர்.

எங்கள் வகுப்பில் பிரம்பு வேண்டாம், இருக்கவே கூடாது என்றவர். ஆனால் எங்கள் பள்ளிக்கு அது சரிப்பட்டு வராது. 

சமூக அறிவியல் ஆசிரியர் ஜான் பொன்னய்யா, அவர் வகுப்பில் இருந்தே பிரம்பு கொண்டு வருவார். லாங் சைஸ் நோட்டில் கேள்வி பதில் எழுத சொன்னார். வாரம் இருமுறை தேர்வு வைப்பார். 

தமிழாசிரியர் துரைராஜ் இவரும் வகுப்பாசிரியர் போல இனிமையாக வகுப்பெடுப்பவர். 

அறிவியல் ஆசிரியர் பர்ணபாஸ் என்ற ஒரு மாதம் கழித்தே வந்தார். அவர் அடிக்க கூடியவர். அவருக்கு கடிவாளத்தை போட்டார் எங்கள் வகுப்பாசிரியர். 

அரையாண்டு தேர்வில் பரமசிவனுக்கு காட்டியதற்காக காதோடு சேர்த்து ஒரு அரை வைத்தார் கென்னடி. 

நான் ஒரு‌முறை கூட 400 எடுக்கவில்லை. அரையாண்டில் கடைசியாக அறிவியல் விடைத்தாள் கொடுத்தார் பர்ணபாஸ். மொத்தம் 399 வந்தது, பயந்து தயங்கியபடியே கேட்டேன் கூடுதல் ஒரு மார்க் போட்டு 400 கொண்டு வந்தார்.

கடைசியாக  திருப்புதல் தேர்வில் 425 எடுத்தேன். தமிழுக்கு மட்டும் நடந்த தமிழ் மன்ற தேர்வில் 93 மதிப்பெண்கள் எடுத்தேன். 

பொது தேர்வும் வந்தது. இரண்டு புதிய பேனாக்கள் மை கசியாதவை. தலைப்புகள் எழுத ஒரு கருப்பு ஜெல் பேனா(அன்றைய தேதியில் விலையுயர்ந்த பேனா) வைத்திருந்தேன். மூன்று தேர்வுகள் ஊரில் இருந்து வந்து எழுதினேன். தேர்வுகளின் இடையே உலகக்கோப்பை இல்லை என்றாலும் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நடந்தது. கொஞ்சம் கிரிக்கெட் கொஞ்சம் படிப்பு என்று கடந்தது.

கணக்கில் சின்ன சொதப்பல் 90 என்று வந்தது. மற்றவை வழக்கம் போல்.

மாலை 4 மணிக்கு ஆர்யாஸ் ஹோட்டல் எதிரில் ஒரு பிரவுசிங் சென்ட்ரில் பார்த்தேன். மதிப்பெண் 419.

அந்த சமயத்தில் ஊரில் நானே அதிகப்பட்ச மதிப்பெண். விடுதியில் 400க்கு மேல் எடுத்தவர்கள் பட்டியல் ஒட்டினர். ஏழெட்டு பேரில் 419 மூன்று பேர் எடுத்திருந்தோம்.


Sunday 11 September 2022

ஆசியக் கோப்பை 2022

ஆசியக் கோப்பை 2022 அணிகளின் நிறை குறைகள் பற்றிய பார்வை.

ஹாங்காங்:

ஹாங்காங் அணி தகுதி சுற்றில் வென்று தனது திறமையை நிரூபித்தது. இறுதி ஓவர்களில் ஸ்பின்னர வைத்து பந்து வீச வைக்கும் தைரியம் உள்ள அணி என்பதே பலம். சிறப்பான ஆல்ரவுண்டர்கள் உள்ள அணி. குறிப்பாக மோர்டாசா.

இந்தியாவுடன் முழு பலத்தை வெளிப்படுத்திய அணி, பாகிஸ்தானுடன் 38 ரன்னுக்கு சுருண்டது சோகம்.

பங்களாதேஷ்:

பங்களாதேஷ் அணி ஒரு குழப்பத்துடனே களம் கண்டது. ஜிம்பாப்வே உடனான தொடரில் புதிய கேப்டனை நியமித்தது. ஆசியக் கோப்பைக்கு மீண்டும் ஷகிப்பை கேப்டனாக்கியது. ரஹீம் பீல்டராக இருந்து கொண்டு இருந்தார். மீண்டும் கீப்பர் ஆனார். முழுக்க ஸ்பின்னர் நம்பியே இருந்த அணி. முதல் சுற்றில் வெளியேறியது.

ஆப்கானிஸ்தான்: 

ஆப்கானுக்கு அருமையான தொடர். இந்தியாவுடனான போட்டி தவிர மற்ற போட்டிகளில் முழு திறமையையும் காட்டியது சிறப்பு. பேட்டிங்கில் ஷஷாய், குர்பாஸ், நஜிபுல்லா, இப்ராஹிம் என்றால் பந்துவீச்சில் பருக்கீ, பரீட், முஜீப், நபி, ரஸீத்.

சில குருப்பில் டூப்களை மட்டும் மாற்றினால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

கடைசி ஓவர் பந்து வீசும் தைரியமும் வேண்டும். பாகிஸ்தான் அணியுடனான சொதப்பல் தவறு.

இந்தியா : 

இந்தியா இந்த தொடரிலும் சோதனை முயற்சியில் இறங்கியதா என்ற கேள்வியே உள்ளது.

டைரக்ட் ஹிட் செய்ய தெரிந்த ஒரே வீரரான ஜடேஜாவின் இழப்பு பெரிய இழப்பு. மாற்று வீரரான அக்சர் கடைசி போட்டிக்கே வந்தார்.

தீபக் கூடா ரெண்டு முக்கிய போட்டியில் பந்து வீச அழைக்கப்படவில்லை. அவரது பேட்டிங் பொசிசனும் கேள்விக்குறி.

ரோகித், கோலி, சூர்யாவின் பார்ம் தான் பலம்.

தினேஷ் கார்த்திக் எதற்கு என்ற மர்மம் விலகவே இல்லை. அவரை பந்துவீச வைத்தது அவருக்கு கடைசி போட்டியாக இருக்கும் என்பதாலா?

கேப்டன் ஓய்வெடுப்பதும் சோதனை முயற்சியா?

பாகிஸ்தான்:

பாபரின் கேப்டன்சியும் பார்மும் மோசமாக உள்ளது. முதல் போட்டியில் நவாஸ் ஓவரை கடைசி வரை வைத்தது.

ரிஸ்வான் தான் பலமும் பலவீனமும். நவாஸ், சதாப் நாலாவது இறங்கி பலம் சேர்க்க, குஷ்தில், ஆசிப் அலி பத்து பந்துக்கு தாங்காத வீரர்களாக தொடர்கிறார்கள். 

பந்துவீச்சு வழக்கம் போல பலம் சேர்க்கிறது. குறிப்பாக நதீம் ஷா.

இலங்கை :

இப்படி ஒரு மீட்சி யாரும் எதிர்பாராதது. குறிப்பாக இறுதி போட்டியில்.

பாகிஸ்தானின் பலமான ரிஸ்வானை வைத்தே பலவீனமாக்கியது சிறப்பு. ரிஸ்வானை 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடவிட்டு அடித்து ஆட தொடங்கும் போது அவுட் ஆக்கியது.

புது வரவுகள் நிசாங்கா, மதுஷன், மதுஷங்கா, ராஜபக்ஷே சிறப்பு.

இறுதிக்கட்ட ஓவர்களில் கூட பந்து வீச முடிந்த ஹசரங்கா இன்னும் பலம்.

குணதிலகா பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. கேப்டன் ஷனகாவும். கேப்டன்சியில் கலக்கினாலும் வேறெதுவும் செய்யவில்லை. இன்னொரு ஆஞ்சலோ மேத்யூஸ் போல் ஆகிறார். பந்துவீச்சு, பேட்டிங் எதையும் முழுதாக செய்யாமல். அதுவே பெரிய பலவீனம்.

Saturday 10 September 2022

தீர்க்கப்படாத பிரச்சனை

இயற்கை பேரழிவுகள் எல்லா நாடுகளையும் புரட்டிப் போடும். ஆனால் மனிதன் நிகழ்த்தும் பேரழிவுகள்...

யூனியன் கார்பைடு நிறுவனம் நிகழ்த்திய சம்பவம். யூனியன் கார்பைடு நிறுவனம் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இயங்கி வந்தது. இது 50.1% யூனியன் கார்பைடு 49.1% மத்திய அரசு உதவியோடு இயங்கி வந்தது.

யூனியன் கார்பைடு பூச்சி கொல்லி தயாரித்த நிறுவனம். 1982 முதலே சின்ன சின்ன வாயு கசிவு விபத்துகள் நடந்துள்ளன.

அங்கு மித்தைல் ஐசோ சயனைட்க்கு மூன்று டேங்குகள் இருந்தன. அதில் ஒன்று காலியாக இருக்கவேண்டும் என்பதே பாதுகாப்பு நிபந்தனை. ஆனால் 1984 அக்டோபர் முதல் மூன்று டேங்கிலும் மிஐச இருந்துள்ளது.

மிஐச ஒரு மோசமான விச வாயு, அதை 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கவேண்டும். 

மிஐசவை திறன் குறைந்து வெளியேற்றும் வெண்ட் ஸ்ரப்பர்களும் பராமரிப்பு காரணமாக வேலை செய்யாமல் இருந்துள்ளன.

மிஐச டேங்கில் வால்வுகளும் சரியான முறையில் இல்லை.

இந்நிலையில் 1984 டிசம்பர் 2ம் தேதி இரண்டாவது ஷிப்ட் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.

42 டன் மிஐச உள்ள டேங்கை கழுவும் விதமாக தண்ணீர் செலுத்தப்பட்டுள்ளது.

தண்ணீரும், தண்ணீர் வரும் குழாய் துருப்பிடித்ததில் இருந்த இரும்பும் சேர்ந்து மித்தைல் ஐசோ சயனைட் வேதி வினை புரிய ஆரம்பித்தது. அதன் வெப்பநிலையும் அழுத்தமும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இரவு 10.30 மணிக்கு 2 பிஎஸ்ஐ அழுத்தம் இருந்தது. 11.00 மணிக்கு 10 பிஎஸ்ஐ ஆக உயர்ந்தது.

மேற்பார்வையாளர் அழுத்தமானியில் பிரச்சனை என்று நினைத்து கொண்டார். ஆனாலும் அதை கவனிக்க சொல்லி இருந்தார்.

இரவு 12.15 தேநீர் இடைவேளையின் போது விவாதித்து இருக்கிறார்கள். 12.40 க்கு மிகச் அதன் உச்சக்கட்ட வெப்பநிலையான 25 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. டேங்கில் மேல் இருந்த காங்கிரீட்டில் விரிசல் விழ தொடங்கியுள்ளது.

ஆனால் பணியாளர் யாருக்கும் விபரீதம் தெரியவில்லை. பாதுகாப்பு சைரன் சரியாக இயக்கப்படவில்லை. தீயணைப்பு துறைக்கு மட்டுமே தகவல் சொல்லப்பட்டது.

30 டன் மித்தைல் ஐசோ சயனைட் 40 - 50 நிமிடங்களில் காற்றில் கலந்தது. அதிகாரபூர்வமாக 2259 பேர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சு திணறல், உயிரிழப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு இதன் தாக்கம்.

ஆனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். போபாலின் ஹமீதா மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது கூட மருத்துவர்கள் அது மீத்தைல் ஐசோ சயனைட் பாதிப்பு என்று தெரிந்திருக்கவில்லை.

இந்த நிகழ்வால் யூனியன் கார்பைடு சிஇஓ வாரன் ஆண்டர்சனை வீட்டு காவலில் எடுத்து 24 மணி நேரத்துக்குள் தனி விமானத்தில் தப்பிக்க விட்டது மத்திய அரசு.

இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு தான் வழங்க வேண்டும், இந்திய அரசு தான் வழங்க வேண்டும் என்று பஞ்சாயத்து ஓடியது.

முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை. சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று சிறுநீரக சிகிச்சைக்கு வசதி செய்யப்படவில்லை. 

ஆண்டர்சன் மீதான குற்றத்திற்கு தகுந்த சாட்சிகள் இல்லை என அமெரிக்கா, ஆண்டர்சனை இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது.

போபால் நகர மக்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை.

யூனியன் கார்பைடு பேக்டரி வளாகம் இன்றும் வேதிப்பொருள் குப்பை கிடங்காக அகற்றப்படாமல் கிடக்கிறது.

அதிகாரமும் அரசியலும் அறிவியலை முன்னிறுத்தி நடத்த பேரழிவு. உலகில் மோசமான பேரழிவாக இன்று வரை உள்ளது.

Thursday 1 September 2022

பிரார்த்தனை

 ஞாயிறுதோறும் வண்ண வண்ண 

ஆடைகள் அணிந்து 

இசையமைத்து பாடல்கள் பாடி 

வேதபாடம் வாசித்து 

முன்வைக்கப்படும் பிரார்த்தனைகளை 

சிலுவையில் தொங்கியபடி

பார்ப்பார் !


மற்ற நாட்களில்

ஒற்றை மெழுகுவர்த்தியோட 

வைக்கப்படும் உருக்கமான 

பிரார்த்தனைகளை கேட்பார் !


தினமும் வந்து மொத்த 

ஆலயத்தையும் சுத்தப்படுத்தும் பெண்

கடைசி படியின் தூசியை 

துடைத்த பின் வைக்கும் 

பிரார்த்தனை 

நான் சுமக்கும்

சிலுவைகள் குறைய வேண்டும்

என்பதே 

என்றாவது கேட்பார் பார்ப்பார் 

என்ற நம்பிக்கையில்!!!