Sunday, 18 September 2022

பத்தாம் வகுப்பு

அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பது ஒரு கவுரவம். அது குடும்பத்திற்கே, கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வு. 

எனக்கு பத்தாம் வகுப்பு முதல் நாள் வந்தது. அந்த வருடம் தான் விடுதியில் சேர்ந்து இருந்தேன். விடுதி மாணவர்கள் எனது வகுப்பில் நான், சங்கர் மற்றும் சுடலை முத்து மட்டுமே. எனது நீண்ட நாள் நண்பர்கள் பரமசிவன் மற்றும் கண்ணனும் எனது வகுப்பில். 

படிப்பில் போட்டி போட இன்னொரு பழனி, கண்ணபிரான், சங்கிலி பூதத்தான், ரெங்கநாதன் என நிறைய பேர் இருந்தனர். 

முதலில் வகுப்பாசிரியராக வந்தவர் மோகன்தாஸ். அவரின் செல்லப்பிள்ளை சங்கிலி. அவர் அடி வெளுக்க கூடியவர். பாதி நேரம் தூங்கி விடுவார். மூன்று நாட்களுக்கு பிறகு அவரை மாற்றிவிட்டனர்.

வேறு பள்ளியில் இருந்து மாற்றலாகி வேறு ஆசிரியர் வருவதாக சொன்னார்கள். வந்தவர் கிறிஸ்டோபர் ஜார்ஜ். நல்ல உயரமானவர் அதிகமாக ஜீன்ஸ் பேண்ட் அணிபவர். அவர் கற்றலின் இனிமை முறை ஆசிரியர்.

எங்கள் வகுப்பில் பிரம்பு வேண்டாம், இருக்கவே கூடாது என்றவர். ஆனால் எங்கள் பள்ளிக்கு அது சரிப்பட்டு வராது. 

சமூக அறிவியல் ஆசிரியர் ஜான் பொன்னய்யா, அவர் வகுப்பில் இருந்தே பிரம்பு கொண்டு வருவார். லாங் சைஸ் நோட்டில் கேள்வி பதில் எழுத சொன்னார். வாரம் இருமுறை தேர்வு வைப்பார். 

தமிழாசிரியர் துரைராஜ் இவரும் வகுப்பாசிரியர் போல இனிமையாக வகுப்பெடுப்பவர். 

அறிவியல் ஆசிரியர் பர்ணபாஸ் என்ற ஒரு மாதம் கழித்தே வந்தார். அவர் அடிக்க கூடியவர். அவருக்கு கடிவாளத்தை போட்டார் எங்கள் வகுப்பாசிரியர். 

அரையாண்டு தேர்வில் பரமசிவனுக்கு காட்டியதற்காக காதோடு சேர்த்து ஒரு அரை வைத்தார் கென்னடி. 

நான் ஒரு‌முறை கூட 400 எடுக்கவில்லை. அரையாண்டில் கடைசியாக அறிவியல் விடைத்தாள் கொடுத்தார் பர்ணபாஸ். மொத்தம் 399 வந்தது, பயந்து தயங்கியபடியே கேட்டேன் கூடுதல் ஒரு மார்க் போட்டு 400 கொண்டு வந்தார்.

கடைசியாக  திருப்புதல் தேர்வில் 425 எடுத்தேன். தமிழுக்கு மட்டும் நடந்த தமிழ் மன்ற தேர்வில் 93 மதிப்பெண்கள் எடுத்தேன். 

பொது தேர்வும் வந்தது. இரண்டு புதிய பேனாக்கள் மை கசியாதவை. தலைப்புகள் எழுத ஒரு கருப்பு ஜெல் பேனா(அன்றைய தேதியில் விலையுயர்ந்த பேனா) வைத்திருந்தேன். மூன்று தேர்வுகள் ஊரில் இருந்து வந்து எழுதினேன். தேர்வுகளின் இடையே உலகக்கோப்பை இல்லை என்றாலும் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நடந்தது. கொஞ்சம் கிரிக்கெட் கொஞ்சம் படிப்பு என்று கடந்தது.

கணக்கில் சின்ன சொதப்பல் 90 என்று வந்தது. மற்றவை வழக்கம் போல்.

மாலை 4 மணிக்கு ஆர்யாஸ் ஹோட்டல் எதிரில் ஒரு பிரவுசிங் சென்ட்ரில் பார்த்தேன். மதிப்பெண் 419.

அந்த சமயத்தில் ஊரில் நானே அதிகப்பட்ச மதிப்பெண். விடுதியில் 400க்கு மேல் எடுத்தவர்கள் பட்டியல் ஒட்டினர். ஏழெட்டு பேரில் 419 மூன்று பேர் எடுத்திருந்தோம்.


No comments:

Post a Comment