Monday 29 May 2023
ஐபிஎல் 2023 - சிஎஸ்கே
Monday 22 May 2023
ஆதவனின் காதல்
ஆதவன், பொறியியல் படிப்பை முடித்த கையோடு சென்னைக்கு வந்து விட்டான். பொறியியல் படிப்பின் கடைசி நாளுக்கும் சென்னை வந்த நாளுக்குமான இடைவெளி இரண்டு வாரங்கள்.
இந்த இரண்டு வாரங்களில், பக்கத்து ஊர் அண்ணனின் கண்ணில் பட்டு, அவரின் சிபாரிசில் நேர்முக தேர்வு முடித்து வேலையும் கிடைத்து விட்டது. அவன் எதிர்பார்த்த வேலையில்லை என்றாலும் தினமும் சென்று வந்தான். எந்தவித ஈடுபாடும் இல்லாமல்.
பக்கத்து ஊர் பசங்களோடு அறையில் தங்கி இருந்தாலும் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வே அவனுக்கு இருந்தது.
ஆதவனின் நண்பன் நளனிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. மச்சி எனக்கும் ஏதாவது வேலை ஏற்பாடு செய்து கொடு என்று. நளனுக்காக அண்ணனிடம் பேசினான், நளனுக்கும் வேலை சிபாரிசில் கிடைத்தது, வேறு நிறுவனத்தில்
ஆதவனுக்கு பணி கட்டிட பணிகள் நடைபெறும் இடம், நளனுக்கு அலுவலகத்தில் பணி.
வேளச்சேரியில் ஆதவனும், நளனும் தனியாக அறை எடுத்தனர். ஆதவனுக்கு பணியிடம் தரமணி ரயில் நிலையம் அருகில். நளனுக்கு திருவான்மியூரில் அலுவலகம். இருவரும் காலையில் கிளம்பி சாப்பிட்டுவிட்டு ஒரே பேருந்தில் தான் செல்வார்கள்.
ஆதவனுக்கு இழந்ததை மீட்டது போல் இருந்தது. கல்லூரியில் ஆதவன் சில பெண்களிடம் பேசியது உண்டு. நளன் படிப்பு, விளையாட்டு இதை தவிர வேறேதும் தெரியாது என்கிற ரீதியில் திரிந்தவன்.
வேளச்சேரி செக்போஸ்ட் இவர்கள் தினமும் ஏறும் பேருந்து நிறுத்தம். அங்கு தான் அவளும் பேருந்து ஏறினாள். மாநிறம், கண்ணுக்கு மை தீட்டி காண்பவர்களை கவரும் முகம்.
ஆதவன், நளனிடம் சொன்னான் மச்சி, அந்த பொண்ணு உன்ன பார்க்கதுல என்று. நளனும் பார்த்துவிட்டு இல்ல மச்சி அது உன்ன தான் பார்க்குது என்றான்.
இருவரும் பார்த்தனர் தினமும். நளன் சொன்னான் மச்சி அந்தப் பொண்ணு டைடல் பார்க்கில் இறங்குகிறது என்று. அன்று முதல் அந்த பெண்ணிற்கு டைடல் என்று பேர் வைத்தனர். மனதில் அலையை ஏற்படுத்தியவள் என்று பொருள் கொள்ளலாம்.
பேருந்தில் முன்புற வாசல் வழியாகவே ஏற்றுவார்கள், டைடலை பின்பற்றி. ஒருநாள் டைடலிடம் கொடுத்து பாஸ் பண்ணி டிக்கெட் எடுத்தான் ஆதவன். நளனுக்கு சற்றே வயித்தெரிச்சல் வந்தது.
ஆறு மாதத்தில் இருவரும் பணியிடங்களை மாற்றினர். ஆதவன் வேளச்சேரி விட்டு சைதாப்பேட்டை சென்றான். ஆதவனின் பக்கத்து ஊர் நண்பர்களுடன் பேசும் போது சொன்னார்கள். நளன் பெரிய ஆளாகிவிட்டான் என்று. ஆதவன், "ஆமா நல்லா கம்பெனில நளனுக்கு வேலை, என்னை விட சம்பளமும் கூட" என்றான்.
ஆதவன் பணி நிமித்தமாக வேளச்சேரி செல்ல வேண்டி வந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு வேளச்சேரிக்கு சென்றான். வேலையை முடித்து சைதாப்பேட்டை செல்ல விஜயநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏறினான். ஜன்னல் சீட் கிடைத்தது. பேருந்து செக்போஸ்ட் பேருந்து நிறுத்தம் வரும் போது பார்த்தான்.
நளனும் டைடலும் கை கோர்த்து நடந்து வந்து கொண்டிருந்தனர்.
சென்னை (2007 - 2023)
16 ஆண்டுகள் சென்னை வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள்.
1. சேப்பாக்கம் கிரிக்கெட்
மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற நெடுநாள் ஆசை அருண் மூலம் நிறைவேறியது. அருண் தான் சேம்பியன்ஸ் லீக் போட்டிக்கு டிக்கெட் புக் பண்ணியது. நான், அருண், தினேஷ் (ஜாகீர்), இன்னொரு நபர் யாரென்று நினைவில்லை. முதல் போட்டி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடந்தது. இரண்டாவது போட்டி சென்னை மும்பை அணிகள் விளையாடியது. சென்னையின் வெற்றி வாய்ப்பை கலைத்தது மலிங்கா பேட்டிங். பொல்லார்ட், ரெய்னா, ரோட்ஸ், ஆன்டாங், வார்னர், பொலிஞ்சர், சகால் ஆகியோரை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வெயிலும், வெக்கையும் அதிகம் சேப்பாக்கம் மைதானத்தில்.
2. சைதை மேன்சன்
மேன்சன் என்றாலே புழுங்கிய துணிகளின் வாடையுடன், ஒற்றை மின்விசிறி கொண்ட ஒடுங்கிய அறை என்று தான் பலருக்கும் தெரியும். ஆனால் எங்கள் சைதை மேன்சன் மூன்று பேர் தங்க கூடிய அறை. சமயத்தில் 5 பேர் தூங்கினோம். பாதி மொட்டை மாடி எங்கள் வசம். தங்கியிருந்த எல்லாருக்குமே நினைவுகள் நிறைவாக உண்டு. அங்கு தான் நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைத்தது. உலகக் கோப்பை வெற்றி பெற்ற, உணர்ச்சிபூர்வமான நாள் மேன்சனில் தான் அதை கண்டு ரசித்தோம். மொட்டை மாடியில் அமர்ந்து உண்டு, உறங்கி, விளையாடிய நாட்கள் இனியவை.
3. காற்று வெளியிடை
மனைவியுடன் கடைசியாக திரையரங்கில் பார்த்த படம். படம் சூர மொக்கை என்றாலும் இரண்டாம் ஆட்டத்தில் இருந்த திரையரங்க குளிர், காட்சிகளை உயிர்ப்பாக்கியது. பூந்தமல்லி சுந்தர் திரையரங்கில் பார்த்த படம்.
4. வேளச்சேரி அறைகள்
வேளச்சேரியின் அறைகள், காற்றோட்டம் இல்லாத குறுகிய அறைகள். எப்போதும் ஓனர்களின் தொல்லை, கொசுக்கடி, பண கஷ்டம் என இருந்தவை. நிறைய நட்புகள், சுவையான அனுபவங்கள் தந்த அறைகள் அவை. மதியழகன் தெருவும், கண்ணகி தெருவும் அதிக நாட்கள் இருந்தவை. அந்த நாட்களை வைத்து நிறைய கதை எழுதலாம்.
5. கையேந்தி பவன் பிரியாணி
சைதை தபால் நிலையம் எதிரில் இருந்த பிரியாணி கடை, கையேந்தி பவன் பிரியாணி தினேஷால் அறிமுகமானது. மிக மெதுவாக பார்சல் கட்டி தருவார். பொறுமையாக இருந்தால் வித்தியாசமான சுவையுடைய பிரியாணி சாப்பிடலாம். அடிக்கடி இரவு உணவு கையேந்தி பவன் பிரியாணி தான்.
6. மழை நாட்கள்
சென்னையில் எத்தனையோ வெயிலை கடந்திருந்தாலும் மழை நாட்கள் மறக்க முடியாதவை. செல்ப்ல் படுத்து தூங்கிய வேளச்சேரி மழை நாட்கள்.
பூந்தமல்லியில் தனிந்திருந்த போது வெளியே வர அச்சப்பட வைத்த நீலம் புயல் கரை கடந்த நாள்.
பணம் மட்டும் முக்கியமல்ல என்று புரிய வைக்க தகவல் தொடர்புகளை பிடுங்கி எறிந்த டிசம்பர் மழை நாட்கள்.
வர்தா விளையாடி ஓய்வெடுத்து திசை மாறி வீசிய நாள்.
மாண்டஸ் சிதைத்த நாளில் மறவாமல் பால் பாக்கெட் போட்ட தாத்தாவுக்கு நன்றியை தவிர வேறேதும் சொல்லவில்லை.
இன்னும் சென்னையோடு பல நினைவுகள்
-தொடரும்-
Saturday 13 May 2023
2011 - நண்பர்கள் சந்திப்பு
அடிக்கடி மெரினாவில் சந்திப்பது அதிகப்பட்ச சந்திப்பாக இருந்தது. கல்லூரி முடித்திருந்தாலும் கல்லூரியின் வாசம் நாசிக்குள் நிறைந்திருந்த நாட்கள் அவை.
ஜென்னரும் விஜய்யும் மாத்தி யோசித்ததில் உதயமான சிந்தனை ஏற்காடு சுற்றுலா. புத்தாண்டை எல்லாரும் 1 ம் தேதி நள்ளிரவு கொண்டாடுவார்கள், நாம் பகலில் கொண்டாடுவோம் என்று முடிவு.
விஜய், ஜென்னர், ஷிபு, பிராவின், ப்ரீஸ், ஜானகி, தர்மா நான் ஒரே காரில் புறப்பட்டோம் சென்னையில் இருந்து. போகிற வழியில் ஒகேனக்கல் சென்றோம்.
ஒகேனக்கல்லில் அருமையான அருவி குளியல் அமைந்தது. மச்சான் தண்ணிக்குள்ளும் புகைப்படம் எடுக்கும் கேமரா கொண்டு வந்திருந்தான்.
தண்ணீரில் ஒவ்வொருவரையும் தூக்கி கீழே போடும் நிகழ்வு மச்சானையும், ஜென்னரையும் தூக்கியாச்சு. ஆனால் பிராவினை தூக்க முயற்சிக்கவில்லை, அத்தனை பேரும் பொறியியல் படிப்பை முடித்திருந்ததால்.
அங்கிருந்து ஏற்காடு சென்றோம். இரவில் ஏற்காடு சில்லென்று இருந்தது. ஜென்னர் விலை குறைவான அறை விசாரித்து தங்க ஏற்பாடு செய்தான். ஜென்னர் முதல் முறையாக மெஸ் கமிட்டி தவிர்த்து இதர கமிட்டி வேலை பார்த்த நாள் 01. 01.2011.
கணபதி அவன் அறைத்தோழர்களோடு காரில் ஏற்காடு வந்து சேர்ந்தான். கூடவே கார்த்தியும். அங்கு ஒரு அருவிக்கு சென்றோம். சற்றே ரிஸ்கான இடம் ஆனால் வாலிப வயசு. பாறை மீதேறி பரவச குளியல் போட்டோம்.
அதற்கு பிறகு வியூ பாயிண்டில் புகைப்படங்கள். மச்சான் வழக்கம் போல் ஸ்கார்பியோ காரின் சக்கரங்களை வேறுவேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தான். எதற்கு என்று கேட்டதற்கு அவன் சொல்லிய பதில், வினோத் பாபு வகுப்பு போல் விளங்கவே இல்லை.
மீண்டும் சென்னைக்கு வந்தோம். அரட்டையும் கும்மாளமுமாக.
மீண்டும் கிடைக்காத நாட்கள் அவை.