மார்கழியில் எந்த விசேச காரியங்களும் நடக்காது என்பார்கள். எங்கள் ஊரில் மார்கழி சிறப்பு என்ன?
மார்கழியில் எல்லா வீட்டிலும் வெள்ளை அடிப்பார்கள். சுண்ணாம்பு வியாபாரம் சூடு பிடிக்கும். சுட்ட சுண்ணாம்பை நீர்த்த சுண்ணாம்பாக்கும் வேதி வினையை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்போம்.
வெள்ளையடிப்பவர்களுக்கு மாதம் முழுக்க வேலையும் வருமானமும் இருக்கும். வீடு பிடிக்க போட்டி இருக்கும்.
போகி என்று தனி பண்டிகை கிடையாது. வெள்ளை அடிக்கும் நாளில் தேவையில்லாத பொருட்களை கழித்துவிடுவார்கள். அதுவே போகி.
பொங்கலுக்காக பனை மரத்தில் இருந்து புது ஓலை வெட்டுவார்கள். பனிக்கு நடுவே ஓலையை காய வைக்கவும் செய்வார்கள்.
அடுத்து பொங்கலுக்கு அடுப்பு கூட்ட பொங்கல் கட்டி செய்வார்கள். குளத்தில் தண்ணீர் இருந்தால் கரம்பையோ, செம்மண்ணோ கிடைப்பது அரிதாகிவிடும். செம்மண்/கரம்பையை குழைத்து பொங்கல் கட்டி செய்து காய வைத்து விடுவார்கள். பொங்கலுக்கு முந்திய நாள் சாணி வைத்து மொழுகி, வெள்ளை அடித்து செம்மண் கலரில் பட்டையும் அடிப்பார்கள்.
வீட்டு திண்ணைக்கும், படிகளுக்கும் மீண்டும் வெள்ளை அடித்து பட்டை அடிப்பார்கள்.
சிலர் சபரிமலைக்கு மாலை போடுவார்கள். அவர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் சைவ சாப்பாடு என தொடரும். சிலர் திருச்செந்தூருக்கு மாலை போடுவார்கள் அங்கும் சைவமே. கன்னி பூசை நடக்கும் வீடுகளில் பஜனை நடக்கும். சாதி,வயது பாகுபாடுன்றி மாலை போட்ட அனைவர் காலிலும் விழுந்து கும்பிடுவார்கள் மாலை போட்டவர்கள்.
விரதம் இருந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை செல்வார்கள் பலர். காவடியோடு ஒரு பெருங்கூட்டமே திருச்செந்தூர் செல்லும் பொங்கலுக்கு முந்திய நாட்களில்.
மார்கழி துவக்கத்தில் மழை வேண்டும் என்றும் மார்கழி இறுதியில் மழை வேண்டாம் என்றும் வேண்டி கொள்வார்கள் விவசாயிகள். கெப்பேரி பார்த்து மழை பற்றிய விவாதங்களும் நடக்கும்.
பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு தோண்டும் மாதமும் மார்கழியே.
வீட்டுக்குள் தரையில் சுண்ணாம்பு கோலங்கள் வரைவதும் மார்கழியில் தான்.
மார்கழி கடைசி நாள் இரவில் முற்றம் முழுக்க கோலமிட்டு தையை வரவேற்பார்கள் தாய்க்குலங்கள்.