2000 க்கு பிறகு தமிழ்நாட்டில் நிறைய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.
AICTE அப்பூருவல் பெற்றது, அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது என கல்லூரியின் பெயருக்கு பின்னால் போட்டு கொண்டனர். அரசியல்வாதிகள் தங்கள் பெயரில், தங்களது பினாமி பெயரில் கல்லூரி தொடங்கினர். அரசியலுக்கு வர ஆசைப்பட்டோரும் பொறியியல் கல்லூரி தொடங்கினர். கல்லி தந்தை ஆனார்கள்.
கல்லூரியில் அடிப்படை வசதிகள் இருந்ததா? உட்கட்டமைப்பு இருந்ததா? என்றால் இல்லை. 'உன்ன தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்னு' கிண்டல் பண்ணுவாங்க. அப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் பொறியியல் கல்லூரிகள் உருவானது.
தமிழ் நாட்டில் இரண்டே இரண்டு தனியார் கல்லூரிகள் அனைத்து சீட்களையும் அரசு கவுன்சிலிங் மூலம் நிரப்பியவை. மற்ற கல்லூரிகள் அனைத்தும் கட்டண கொள்ளை தான்.
பாடத்திட்டத்திற்கு வருவோம். ஏற்கனவே தமிழ்நாட்டின் கல்விமுறை பத்தாம் வகுப்பு வரை இரண்டு மொழி பாடங்கள்+ கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்பது தான். அறிவியலில் நான்கு பிரிவுகள், சமூக அறிவியலில் மூன்று பிரிவுகள். +1 செல்லும் போது மொழி பாடங்கள் 2 + கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்/ கணிப்பொறி அறிவியல். பத்தாம் வகுப்பு வரை அறிவியலின் ஒரு பகுதியாக படித்த இயற்பியல்/பிற இயல்களை 200 மார்க் தனிப்பாடமாக படிக்க சிரமப்பட்டு, செட் ஆவதற்கு முன்னால் +2 இறுதி தேர்வு வந்துவிடும் சராசரி மாணவனுக்கு.
ஆக இயல்களில் குறுக்குவழி கண்டறிந்து, டியூசன் போய் கற்றால் பொறியியல் கல்லூரி கிடைக்கும். பொறியியல் கல்லூரி போனதும் அந்த பாடங்கள் ஆங்கிலத்தில் (தமிழ் வழி மாணவனின் படும்பாடு).
நான் 2003ல் பொறியியல் சேர்ந்த போது முதல் செமஸ்டரில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ். அனைத்து துறைகளுக்கும் பொதுவான பாடத்திட்டம்.
இதில் இஞ்சினியரிங் மெக்கானிக்ஸ், சிறப்பான ஆசிரியர் அமையாவிட்டால், அரியர் என்றால் என்ன என்று விளக்கும் பாடம்.
இரண்டாம் செமஸ்டரில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியலோடு துறைசார் பாடங்கள் வரும். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு பேசிக் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்ம், எலக்ட்ரானிக்ஸ்க்கு பேசிக் மெக்கானிக்கலும் உண்டு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு தெர்மோ டைனமிக்ஸ் என்ற பாடம் உண்டு.
சிவப்பு நிற அரசு பேருந்து எப்படி கூடுதல் கட்டணம் உண்டு, ஆனால் சாதாரண பேருந்தின் வேகத்தில் தான் செல்லும். அதே போல் தான் தெர்மோ டைனமிக்ஸ்க்கும் சிறப்பான ஆசிரியர் அமைந்தால் கூட புரியாது.
மூன்றாம் செமஸ்டரில் விஜயராகவனும், ஜெயகுமாரும் அறிமுகம் ஆவார்கள். அவர்கள் பிடித்து சென்றால் இஞ்சினியரிங் கடலை கடந்துவிடலாம். அதை போல ஒவ்வொரு பாடமும் ஐந்து யூனிட்கள் இருக்கும். ஒவ்வொரு யூனிட்டில் இருந்தும் 20 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தான் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள். தேர்வுக்கு முந்தைய நாள் இரவில் நாலு யூனிட் படிக்க முடிந்தால் பாஸாகி விடலாம்.
பேராசிரியரை பார்க்கும் இடங்களில் வணக்கம் வைத்தால் இன்ட்டேர்நல் மார்க் கணிசமாக கிடைக்கும். இதுதான் 75% இஞ்சினியரிங் மாணவர்களின் வெற்றி சூட்சுமம்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்க்கு மூன்றாம் செமஸ்டரில் 5 பாடங்கள் மட்டுமே உண்டு. ஆனால் எட்டாவது செமஸ்டரில் 4 பாடங்கள் உண்டு. (மற்றவர்களுக்கு 2 மட்டுமே). அதில் ஒன்று ஆட்டோமொபைல் இஞ்சினியரிங்.
கேம்பஸ் இன்டர்வியூ, எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடக்கிறது என்று சொல்லி கல்லா கட்ட விரும்புவார்கள் கல்வி தந்தைகள். கேம்பஸ் இன்டர்வியூவின் கேள்விக்கென ஒரு புத்தகம் உண்டு. இண்டர்வியூவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், குழு விவாதத்தில் எப்படி பேச வேண்டும் என்ற சொல்லி கல்லா கட்டுபவர்கள் ஏராளம்.
கல்லூரி பேருந்து, கல்லூரி பேருந்துகள் எல்லா ஊர்களுக்கும் செல்லும். பெற்றோர்களை மகிழ்விக்க. சென்னைக்கு மிக அருகாமையில் செங்கல்பட்டு அல்லது மதுராந்தகம் தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரிகளின் பேருந்துகள் விடிகாலையில் நகருக்குள் வந்து விடும். காலை உணவு கல்லூரி நிர்வாகம் வழங்கும், குறைவான கட்டணத்தில்.
அடுத்த மாவட்டம் வரை கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாவட்டந்தோறும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதில் பயின்று பொறியாளர்களாக வெளிவரும் 10 சதவீதத்தினருக்கு கூட அந்தந்த மாவட்டங்களில் தொழில்வாய்ப்பு கிடையாது. படித்து முடித்ததும் சென்னையை நோக்கி செல்ல வேண்டும்.