நான் முதன்முதலாக கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது ஆறாம் வகுப்பில்.
பெரியப்பா வீட்டில் கனிட்கர் வெற்றிக்கான ரன்னை அடித்த அந்த போட்டியை பரபரப்பாக பார்த்து கொண்டிருந்தனர். நானும் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தேன்.
அடுத்த போட்டியில் எனக்கு தெரிந்த ரெண்டு வீரர்கள் சச்சின், கங்குலி முதலில் களமிறங்கியது ஆச்சர்யமூட்டியது. அதற்கு பிறகே கிரிக்கெட் பிடிபட தொடங்கியது.
டெஸ்ட் கிரிக்கெட் பிடிபட சில ஆண்டுகள் ஆனது. 1999ம் ஆண்டு உலகக் கோப்பை ஆர்வமாய் பார்த்தேன்.
சச்சின் இல்லாமல் ஜிம்பாப்வே உடனான போட்டியில் தோற்ற போது மனது கனத்தது.
12ம் வகுப்பு தேர்வின் போது நடந்த 2003 உலக கோப்பை, விடுதியில் எப்போதாவது பார்க்க முடிந்தது. காலையில் எப்படியாவது தினத்தந்தி பேப்பர் வாங்கி கிரிக்கெட் ஸ்கோர் பார்த்து விடுவோம்.
நான் பார்க்காமல் இருந்தால் இந்தியா நல்லா விளையாடும் என்று தோன்றவே இறுதி போட்டியில் சச்சின் அவுட் ஆனதும் ரூமுக்குள் அடைந்து கொண்டேன்.
ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியது.
கல்லூரி காலத்தில் கிரிக்கெட் போட்டி என்றால் விடுதி அருகில் இருக்கும் தாத்தா கடையில் தஞ்சம் ஆவோம். ஒரு டீயை குடித்து விட்டு முழு போட்டியும் பார்ப்போம். தாத்தா முறைப்பது போல் இருந்தால் யாராவது ஒருத்தர் ஒரு முறுக்கு வாங்கி கொள்வது வழக்கம்.
இர்பான் பதான் ஹாட்ரிக் அங்கு தான் பாரத்தோம்.
2007 உலக கோப்பை போட்டிகள் இரவில் ஆரம்பித்து நள்ளிரவில் முடிந்ததால் சற்றே சிரமம். பங்களாதேஷ் உடனான போட்டி தூத்துக்குடியில் நண்பன் கார்த்தி வீட்டில் பார்த்தேன். அவன் தூங்கிவிட்டான். கம்பெனி குடுத்த அவங்க அப்பாவும் தூங்கி விட்டார்.
பெர்முடாவுடான போட்டி வீட்டில் இருந்தேன். இலங்கையுடனான போட்டிக்கு வகுப்பு தோழனான வெஸ்லி வீட்டில் போய் பார்த்தேன்.
சென்னைக்கு வந்த பின் எனக்கு கிரிக்கெட் ஸ்சோர்ஸ், கேம்பஸில் செலக்ட் ஆகி வீட்டில் இருந்த கணபதி.
T20 உலக கோப்பை முதல் போட்டி அன்று ஊரில் இருந்து சென்னைக்கு வந்திருந்தேன். செல்வகுமார் கண்ணில் சிக்கினான். அவன் அண்ணன் ரூமில் கிரிக்கெட் பார்க்க ஏற்படானது. அன்று தான் முதல் முறையாக கிரிக்கெட் பார்க்க வேலைக்கு லீவு போட்டது. பலரும் சேர்ந்து பார்த்தோம் அந்த பவுல் அவுட் போட்டியை.
இறுதி போட்டி அன்றும் கணபதி மேசேஜ் அனுப்பி கொண்டிருந்தான். கடைசி ஓவர் சமயத்தில் தரமணியில் இருந்து பேருந்தில் ஏறி இருந்தேன். சிக்ஸ் அடித்த மெசேஜ் வந்தது. பேருந்தில் அவுட் என்று ஒருவர் கத்தினார். மிஸ்பா அவுட் என மெசேஜ் வந்ததும் நானும் கத்தினேன் இந்தியா ஜெயிச்சிட்டு என்று.
சித்தாரில் வேலை செய்யும் போது ஆபிஸ் பாய் பலாய் தான் தகவல் தொடர்பு. அப்புறம் மாற்று திறனாளி ஆபிஸ் பாய் சைகையிலே ஸ்கோர் சொல்வார்.
உலகக்கோப்பை 2011 சைதை மேன்சனில் கோலாகல கொண்டாட்டமாய் பார்த்தோம். குறைந்தது பத்து பேர் பார்ப்போம். டிவி உபயம் அருண்.
வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியில் இந்தியா தோல்வியின் விளிம்புக்கு செல்லவே பார்க்க பிடிக்காமல் சைதை ராஜ்ல் நாடோடி மன்னன் பார்க்க போனோம். பாதிக்கு மேல் பார்க்க முடியாமல் திரும்பி வந்தால் இந்தியா வென்றுவிட்டது.
இரவு உணவை மறந்து இறுதி போட்டியை ரசித்தோம். கொண்டாட்டம் முடிய நல்லிரவானதால் உணவுக்காக நெடும் நேரம் காத்திருக்க வேண்டி ஆனது. சுவையாய் இருந்தது அந்த கல் தோசை.
2015 அரை இறுதி போட்டி அலுவலக டிவியில் ஓடியது. பார்க்க சுதந்திரமும் வழங்கப்பட்டது, பரிதாபமாக முடிந்தது சோகம்.
2019 அரை இறுதி, தலைவனின் ரன்அவுட் மாபெரும் சோகத்தை தந்தது. தலைவனின் கடைசி போட்டி என்பது இன்னும் சோகம்.
இன்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் பார்க்க ஆவலுக்கு காரணம் சச்சின், கங்குலி மற்றும் தோனி விதைத்த விதை.