Friday, 18 November 2022

ஐயாச்சாமி

ஐயாச்சாமி என்பது என் அப்பாவின் பெயர். 40 - 50 குடும்பங்கள் வாழும் சிறிய கிராமத்தில், நாலு சலவை தொழிலாளர்கள் குடும்பத்தில் எங்கள் குடும்பமும் ஒன்று.

எங்கள் நாலு குடும்பத்திற்கும் சரிசமமாக வீடுகள் பிரிக்கப்பட்டு, அந்தந்த வீடுகளின் துணிகளை துவைத்து, வெள்ளாவியில் வைத்து வெளுத்து, தேவைப்பட்டால் இஸ்திரி போட்டு கொடுக்கும் பணி எங்கள் குடும்பத்திற்கு. 

துணிகளில் ஒவ்வொரு வீட்டுக்குமான முத்திரை இருக்கும். அறுவடையின் போது ஆண்டுக்கான நெல் கூலியாக கிடைக்கும்.

இறப்பு வீட்டு சடங்குகளுக்கு அன்றே கூலி உண்டு. தாத்தா ஆற்று பாறையிலோ, குளத்து கல்லிலோ துணி துவைக்கும் போது ஒவ்வொரு அடிக்கும் ஊஸ் ஊஸ் என்று சத்தமிடுவார். ஆச்சியின் வேலை துணிகளை காய வைப்பது. கழுதைகளை கையாள்வது.

என் சிறிய வயதில், எங்கள் வீட்டில் ஒரு குட்டி கழுதை பிறந்தது. அப்போது தான் அப்பாவுக்கும் டவுனில் இருந்த மில்லில் வேலை கிடைத்தது. ஆனால் ஊர் கட்டுபாடுகளுக்காக துணியும் துவைத்தாக வேண்டும்.

அப்பா ஷிப்ட் முடிந்து வந்து கொஞ்ச நேரம் தூங்கி, மீதி நேரம் துவைப்பு வேலைகள் செய்வார். மூணு ஷிப்ட்டில் இரண்டாவது ஷிப்ட் மட்டும் அப்பாவுக்கு சிரமமானது. இரவு 11 மணிக்கு ஷிப்ட் முடிந்தாலும் காலை 4.30 மணி வரை பேருந்து நிறுத்தத்தில் தான் தூங்க வேண்டும்.

தாத்தா இருந்தவரை சலவையை தாத்தா பார்த்து கொண்டார். தாத்தாவின் மறைவுக்குப் பின் அம்மாவுக்கு கூடுதல் சுமை. அண்ணன் படிப்பு ஏறவில்லை என்று சலவையை கையில் எடுத்தான்.

அப்பாவுக்கு மில் வேலை கிடைப்பதற்கு முன் வீடு வீடாக சென்று சோறு வாங்கி வந்தே சாப்பிட்டோம். அப்பா வேலைக்கு சென்றபின் மற்ற சலவை குடும்பங்கள் சோறு வாங்கி வந்ததாலும், எங்கள் வீட்டில் சொந்த உலை.

ஊரில் இருந்த பள்ளியில் ரெண்டு சுதாகர்கள் இருந்ததால், என்னை எல்லாரும் ஐ சுதாகர் என்று கூப்பிட்டனர். சிலர் ஐ சுதாகர் ஐஐ சுதாகர் என்று கிண்டல் செய்தனர். சிலர் வண்ணாப்பய சுதாகர் என்றனர். பெரிய பள்ளிக்கூடம் சென்றபின் நான் பெருமிதமாக சொல்லி கொண்டேன் எனக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்ஷியல் ஐ என்று.

என் வயதுகாரர்கள் கூட அப்பாவை பேர் சொல்லியே கூப்பிட்டனர். இது பற்றி அம்மாவிடம் கேட்ட போது சிரித்து கொண்டாள். அக்காவிடம் கேட்டபோது நாம் கீழ் சாதி என்றாள். 

நாம் மேல் சாதி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றேன். அப்போது அப்பா சொன்னது, "படிச்சி நல்ல வேலைக்கு போ, இந்த கழுதை மேய்க்கிறது, அயர்ன் பண்றது, வெள்ளாவி வைக்கிறது" உன்ன விட்டு போகும் என்றார். எனக்கு சரியாக புரியவில்லை. 

கோவில் கொடை எங்கள் கிராமத்தில் சுவாரஸ்மானது. தாத்தா அருள் வந்து சாமியாடுவார். தாத்தா காலில் விழுந்து திருநீறு பூசிக் கொள்வார்கள். தாத்தா இறந்த பின் அப்பாவுக்கு அருள் வரவில்லை. நீண்ட நேரம் மேளம் அடித்தும் யாருக்கும் அருள் வரவில்லை.

அப்பாவோடு மில்லில் வேலைக்கு சேர்ந்தவர்கள் புற நகர் பகுதியில் இடம் வாங்கினர் தவணை திட்டத்தில். அப்பா அதில் சேரவில்லை. 

அப்பாவிடம் ஒருத்தர் சொன்னார் ஐயாச்சாமி, நீ எடத்த வாங்கி போட்டா, நாளைக்கு உம் மவன் ஐயாச்சாமி பவனம்னு வீடு கட்டுவான் என்றார். அப்பா எதுவும் சொல்லவில்லை. ஆனால் அக்காவுக்கு நகை சேர்ந்தார்.

நிறைய பேர் இரு சக்கர வாகனம் வாங்கினர், மில்லுக்கு சென்று வர. ஆனால் அப்பா பேருந்திலே சென்று வந்தார். 

அப்பா ஓய்வு பெறும் முன் வண்டி வாங்கினர். அவர் வண்டி வாங்கிய பின் தினமும் யாராவது அப்பாவுடன் வண்டியில் வருவார்கள்.

அக்கா திருமணமாகி போன பின், துணி வரத்து குறைந்து போனது. ஆனால் துவைக்க கடினமான போர்வைகள், நோயாளிகளின் உடைகள் வந்தது.  அண்ணன் அயர்ன் மணி ஆனான்.

அப்பாவின் உழைப்பு எங்கள் வீட்டில் உலைக்கு மட்டும் உதவவில்லை. எனது படிப்பிற்கும் உதவியது. அப்பாவை ஊரில் உள்ளவர்கள் கிண்டல் செய்தார்கள், ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் என்னை கம்பியூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படிக்க வைத்தார்.

தடுமாற்றங்களுடன் படித்தாலும் வேலை கிடைத்தது. அலுவலக மெயில் ஐடியில் சுதாகர் ஐயாச்சாமி என்று இருந்தாலும் எனக்கு ஏதோ திருப்தி ஏற்படவில்லை.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு வந்தது. விமான நிலையத்தில் சுதாகர் ஐயாச்சாமி என்று கூப்பிட்டதும் எனக்கு திருப்தி தரவில்லை. வெளிநாட்டில் சம்பாதித்து அப்பா தவணை முறையில் வாங்க முடியாமல் போன புறநகர் (இன்றைய நகர்) பகுதியில் இடம் வாங்கினேன்.

அப்பா வீடு கட்ட சொன்னார். எனக்கு வேறு யோசனைகள் இருக்கிறது என்றேன். அதற்கும் அப்பா இசைந்து ஆலோசனைகள் வழங்கினார். 

எனது யோசனை வடிவம் நாளை முதல் செயல் வடிவம் பெறுகிறது. இந்த தருணத்தில் அந்த கட்டிடம் முன் நிற்கிறேன். எனதருகில் அப்பா.

ஒருவர் என்னிடம் வந்து பேசினார். ஐயாச்சாமி பிள்ளைகள நல்லா வளர்த்துட்டான், நான் சரியா வளர்க்கல. உன் இதுல எனக்கு வாட்ச்மென் வேலை கிடைக்குமாய்யா என்றார்.

அப்பாவுடன் மில்லில் வேலை பார்த்தவர். அப்போது எனது அலைபேசி அழைத்தது.

சார், எம்பிளாயி டீ சர்ட் ரெடி, ISM லெஃப்ட் சைட்ல வரனுமா? ரைட் சைட்ல வரனுமா? என்றார் அழைத்தவர்.

ISM வேண்டாம், ஐயாச்சாமி சூப்பர் மார்க்கெட் என்று தமிழில் எழுதுங்கள் என்றேன். ஏதோ 'சாதி'த்த பெருமிதம் முதல் முறையாக.




No comments:

Post a Comment