பட்டாம்பூச்சிகளுக்கு கிடைத்த
அளவுக்கு
தட்டான் பூச்சிகளுக்கு
இடமில்லை
கவிதைகளில் !
2
மாடு தின்னாததால்
ஊரெங்கும் பூத்துக்
கிடக்கும்.
இன்று புகைப்படம் எடுக்க
தேடினால் கூட
கிடைக்கவில்லை
ஆவாரம்பூ !!!
3
அம்மாவின் மருதாணி!
அக்காவின் கோலங்கள்!
மாட்டின் கொம்பில் மாமாவின்
வர்ணங்கள்!
தாத்தாவின் பூசை!
மாட்டு பொங்கல் விளையாட்டு
போட்டிகள்!
கிராமத்து அழகியல் !!!
4
தாத்தா பாட்டி
ஊருக்கு கிளம்பும்
நாளில் குழந்தை
படும் வேதனை எனக்கு
புரிகிறது !
பள்ளியில் விடுதியில்
தங்கி படித்தவன்
என்பதால்!!!
5
பழைய புகைப்படத்தில்
மாமா மகன்களின்
சாயலில் மாமாக்கள் !
அக்காவின் சாயலில்
அம்மா !
முறுக்கிவிட்ட மீசையோடு
தாத்தா !
பாவமாய் ஆச்சி !
அவள் எடுத்துக் கொண்ட
ஒரே புகைப்படம்
அதுவாக தான் இருக்கும் !!!
6
விடிகிற பொழுதில்
விழித்து கேட்டார்
ரயில் சிநேகிதர்
நல்லா தூங்கினேங்களா
சார் என்று !
ரயில் சத்தத்தை
மீறிய அவரது
குறட்டை என் காதுகளில்
ஒலித்துக் கொண்டே
இருந்ததால் பதிலேதும்
சொல்லவில்லை !!!
7
கை எட்டும் தூரம் வரை
சுவரில் வரைந்து விட்டாள் !
இப்போது கையில்
பென்சில் கிடைத்தால்
தரையில் வரைகிறாள் !
எங்கள் இல்லத்து
இளவரசி !
அசந்த நேரம் என்
முகத்தில் கூட !
கலைகள் உறங்கலாம்
கலைஞன் உறங்குவதில்லை !!!
நன்றி
ReplyDelete