Saturday 2 March 2024

திருக்கார்த்தியல் - சிறுகதை தொகுப்பு பற்றி

தேசிய அளவில் விருது பெற்றிருந்தாலும், நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதியுள்ளார் என்பதற்காக வாங்கினேன். நாஞ்சில் நாடன் தனது கருத்தை பொட்டில் அடித்தது போல சொல்வதில் வல்லவர்.

பொதுவாக சிறுகதை தொகுப்பில் புத்தக தலைப்பில் உள்ள கதை முதல் கதையாக இருக்காது. ஆனால் ராம் தங்கம் திருக்கார்த்தியல் கதையை முதல் கதையாக வைத்திருக்கிறார். நானும் (கொஞ்சம் பெரிய பையன் ஆன பின்) விடுதியில் தங்கி படித்தவன் என்பதால் எளிதாக மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது திருக்கார்த்தியல்.

தக்கலையில் கல்லூரி படிப்பை முடித்தவன் என்பதால் நாகர்கோவில் வட்டார வழக்கும் எனக்கு எளிது.

கதையில் வரும் எள்ளல் தொனி நாஞ்சில் நாடனை நினைவுபடுத்துகிறது. ஊழிற் பெரு வலி கதை மட்டும் சாரு நிவேதிதாவிடம் கற்றிருப்பாரோ என்று நினைக்க வைக்கிறது.

காணி வாத்தியார் கதையில் நம்மை பெருஞ்சாணி அணைக்கு அழைத்து செல்லும் ராம் தங்கம், பாணி கதையில் நாம் வடக்கன்/ஹிந்திகாரன் என்று ஒதுக்கும் ஒருவனின் மனிதத்தை பேசியுள்ளார்.

கடந்து போகும் கதையை வாசித்துவிட்டு எளிதில் கடக்க முடியாது. வலிகளை சொல்லும் கதைகள் மத்தியில் வெளிச்சம் கதை மயிலிறகு வருடல். டாக்டர் அக்காவும் மனதை பிசைகிறது.

ராம் தங்கம் தேசிய அளவில் விருது வாங்கிவிட்டார் என்றதும் X தளத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து நாகர்கோவில்காரர்களும் வாழ்த்தியுள்ளனர்.

ராம் தங்கம் தமிழ் நாடு முழுக்க கொண்டாடப்பட வேண்டியவர்.


No comments:

Post a Comment