Monday 15 January 2024

கோரை நாவல் பற்றி

நடுநாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி நான் எப்போதும் எழுதுவேன் என்கிறார் கண்மணி குணசேகரன். இவரின் அஞ்சலை நாவல் வாசித்த பின், வேறு நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பே.

உத்தண்டி, பூரணி இந்த தம்பதியர் நிலம் வாங்கி படும்பாடு தான் நாவல். அந்த எளிய மக்களின் வாழ்க்கையை கோரை எனும் புல்வகை என்ன பாடுபடுத்துகிறது என்று எழுதியுள்ளார்.

அவர்களின் வாழ்வியலில் இணைந்துவிட்ட பேருந்து தடம் எண் 33, முந்திரி காடு வெட்டுதல், பன்றிக்கறி, நிலம் வாங்கிவிட்ட வயித்தெயிரிச்சலில் இருக்கும் ஊர்காரர்கள் என ஒரு கிராமத்து அனுபவம்.

விவசாய அனுபவம் இல்லாதவன் விவசாயம் செய்ய முனைந்தால் என்னவாகும், விவசாய நிலம் இருந்தாலும் சொந்தமாக பம்ப் செட், கிணறு இல்லை என்றால் என்னாகும் என்பதை அனுபவபூர்வமாக எழுதியுள்ளார் கண்மணி குணசேகரன்.

ஒரு திரைப்படம் பார்ப்பது போல காட்சிகளாக கண்முன் நிறுத்துகிறது இவரது எழுத்து. அதே சமயம் வட்டார சொல் வழக்கில் எழுதியுள்ளார். மல்லாட்டை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வாசிக்க சிரமமாக இருக்கும்.

முன்னுரை எதுவும் இல்லாமல் அட்டை - அட்டை நாவலே நிறைந்துள்ளது. எழுத்தாளரின் ஊரான மணக்கொல்லை தான் கதைக்களம். கண்ணில் பட்டதை மண்வாசத்தோடு படைத்துள்ளார் கண்மணி குணசேகரன்.

No comments:

Post a Comment