Tuesday, 4 May 2021

1/100 தாத்தா

 குருவி கூட்டை 

கலைக்காமல் வெள்ளையடிக்க 

சொல்வார்.

ஒரு எலியை கூட விடாமல் 

கொன்று கோழிக்கு 

இரையாக்குவார் !


கோழி குஞ்சை தூக்கி 

செல்லும் காக்கையை 

விரட்டி காப்பாற்றுவார்.

கொஞ்சம் வளர்ந்ததும் 

இந்த சேவல் கசமாடனுக்கு 

என்று நேர்ந்து கொள்வார் !


மேய்ச்சலுக்கு செல்லும் போது 

மாட்டை அடித்து விரட்டுவார்.

கண்ணு போடும் தருணத்தில்

கண் விழித்தே கிடப்பார் 

தொழுவத்தில் !


விடிந்த பின் ஈன்ற கன்றின் 

வாசத்தை நுகர்நத பின் தான் 

காப்பி குடிப்பார்.

மற்ற நாட்களில் அதே நேரத்தில்

மூன்று காப்பி குடித்திருப்பார் !


பண்ணையில் விட்ட 

ஆட்டின் குட்டி இறந்துவிட்டால் 

பண்ணையாளோடு சண்டை இடுவார்.

காளை கன்றை கோவிலுக்கு

கொடுத்து விடுவார் !


மடியில் சொக்கலால் பீடியோடு 

சுற்றி வருபவர் 

மரண தருவாயில் கூட 

மருமகளிடம் பீடி பற்றவைத்து

கேட்டவர் !


இறந்த போது குழிக்குள் 

வைக்க சொக்கலால் பீடி 

கிடைக்கவில்லை.

வேறு ஒரு பீடி கட்டு வைத்து 

புதைத்தோம்.

நிச்சயம் திட்டி இருப்பார் 

பேரன்களை !!!





















No comments:

Post a Comment