Saturday, 3 May 2025

ஒரு தோனி ரசிகனின் குமுறல்

முன் குறிப்பு :

[ஐபிஎல் என்பது க்ளப் கிரிக்கெட், தமிழ்நாட்டுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உள்ள ஒரே தொடர்பு சேப்பாக்கம் மைதானம் மட்டுமே என்ற புரிதல் எனக்கு உள்ளது. ]

தோனியின் 5வது ஒருநாள் போட்டியான விசாகப்பட்டினம் போட்டியில் இருந்தே தோனியின் ரசிகன் தான். தோனியின் முடிவுகள், வியூகங்கள் என அனைத்தையும் ரசித்தவன். 

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் எல்லாவற்றையும் புரட்டி போட்டுவிட்டது. தோனி செய்து தவறுகள். 

தோனிக்காக, பிசிசிஐ அன்கேப்டு வீரர்கள் விதிமுறையை மாற்றியது. அதில் தோனி தவறேதும் இல்லை. ஆனால் சிக்கியது தோனி. 

சேவாக் முதலிலே சொன்னது, தோனிக்கு வயதாகி விட்டது, ஓய்வு பெற்று விடலாம் என்றார். அதை தோனி செய்து இருக்கலாம். ஒரு பெரிய வீரர் 9வது வீரராக பேட்டிங் இறங்குவது எவ்வளவு பெரிய அசிங்கம். 

தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ரசிகர்கள் அதிகம். தோனி தவிர வேறு ஒருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் தமிழராக இருந்தால் நலம் என்பது நிதர்சனம். 

அதற்காகவே இந்த முறை ஏலத்தில் அஸ்வின், விஜய் சங்கர், சித்தார்த், குர்ஜப்நீட் என தமிழ்நாடு வீரர்களை அதிக அளவில் எடுத்தது சிஎஸ்கே. ஆனால் ருதுராஜ்க்கு காயம் என்றதும் மீண்டும் தோனி கேப்டனானது அபத்தம். அஸ்வினையோ அல்லது ருதுராஜ்க்கு அடுத்த இடத்தில் வேறு ஒருவரையோ உருவாக்க வேண்டியது தானே ஒரு சீனியரின் கடமை. 

முதல் உலகக் கோப்பை வென்ற போது தோனி சொல்லியது, ஹர்பஜனிடம் கடைசி ஓவர் வீசுவதற்கான தன்னம்பிக்கை இல்லை. அதனால் ஜோகிந்தரை பந்து வீச வைத்தேன் என்று. அதே தோனி லெக் ஸ்பின்னருக்கு பயந்து பயந்து ஆடுகிறார் என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். தோனி லெக் ஸ்பின்னரை தைரியமாக எதிர் கொள்ளவே இல்லை. 

ஒரு காலத்தில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்றார் தோனி. அதே தோனி திரிபாதி, துபே, விஜய் சங்கர், தீபக் ஹூடா, பதிரான இவர்களிடம் என்ன ஸ்பார்க் கண்டார்? 

வியூகங்கள் சிறப்பாக அமைக்கும் தோனி, ஏன் தீபக் ஹூடா, விஜய் சங்கர், துபே போன்றோருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச முயற்சிக்கவில்லை. பவர் ப்ளேவில் கலீல், பத்தாவது ஓவர் பதிரான என ஏன் கடிவாளம் போட்ட குதிரையாக செயல்பட்டார்? 

பதிரான சில நிமிடங்களுக்கு பந்து வீச முடியாது என்றதும் சில நிமிடங்கள் அம்பயரிடம் பேசி நேரம் கழித்தார் தோனி (கேவலமான யுக்தி). அதே தோனி அணியில் ஒருவர் டிஆர்எஸ் நேரம் கூட தெரியாமல் இருப்பது அவ்வளவு பெரிய அபத்தம். 

தோனி தலைமையிலான அணி சிக்ஸ் அடிக்க வேண்டிய நேரத்தில் கூட சிங்கிள் ஆடுவது, கையில் இருந்த போட்டியை கோட்டை விடுவது என்பது மோசமான கேப்டன்சியின் வெளிப்பாடு. 

எதிரணி, தோனி அணி வீரரை அவுட் ஆக்காமல் விட்டால் ஜெயிக்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளது. (விஜய் சங்கருக்கு கேட்ச்களை விட்ட டெல்லி அணி, ஜடேஜாவுக்கு கேட்ச்களை விட்ட பெங்களூரு அணி). இது போன்ற கையாலாத வீரர்களை கூட அணியில் வைத்திருக்கும் அளவுக்கு தோனியை இயக்குவது யார்? 

பின்குறிப்பு : ஒரு தோனி ரசிகனாக எனது தனிப்பட்ட கருத்து இது. 


Wednesday, 30 April 2025

அஜித் குமார் 1

1. என் வீடு என் கணவர்

அரை நிமிட காட்சி தான்

திரையில் அறிமுகத்தை தந்தது !

தோப்புக்கரணம் போட்டு 

மன்னிப்பு கேட்பார் அஜித் !

அன்று தெரியாது 

அவருக்கு பின்னால்

ஒரு பெருங்கூட்டம் கூடும் என்று !!!



2. அமராவதி 

செல்வா இயக்கத்தில் 

அர்ஜூன் என்ற பாத்திரத்தில் 

அறிமுகம் !

உதடசைவுக்கு ஒலி

கொடுத்தவர் விக்ரம் !

அமராவதி தான் அஜித்

எனும் நதியின்

தொடக்கப்புள்ளி !!!



3. ப்ரேம புஸ்தகம் 

துறைமுகத்தில் படப்பிடிப்பு 

அலைகளில் சிக்கிய

இயக்குநர் இறந்துவிட

மகனின் ஆசையை

நிறைவேற்ற தந்தை 

இயக்கிய படம் !

பெற்றோர்களால் கைவிடப்பட்ட

இளம் காதலர்கள் 

பற்றிய கதை !

அஜித் குமாரின்

நேரடி தெலுங்குப் படம் !!!



4. பவித்ரா

அன்னை பாசத்தை

அறியாத ஒருவன்

பிள்ளையில்லா தாயொருத்தி

இருவருக்குமான பிணைப்பு !

நோயின் பிடியில் இருப்பவன்

செய்யும் மோட்டார் சைக்கிள் 

சாகசம் !!!



5. பாசமலர்கள்

குமார் என்ற குட்டி பாத்திரம்

அஜித் குமாருக்கு !

அரவிந்த் சாமி படத்தில் 

சின்ன பாத்திரத்தில் 

நடித்த அஜித்

பின்னாளில் அரவிந்த் சாமியை

விட பேர் பெற்றார் !!!



6. ராஜாவின் பார்வையிலே 

காதல் தோல்வியால் தற்கொலை

செய்து கொள்ளும் சந்துரு !

சந்துருவின் நண்பன் ராஜா !

சிறிய கதாபாத்திரத்தில், 

ஒரே ஒரு காதல் தோல்வி

படம் இது தான் !!!



7. ஆசை

143 என்று காதலை சொல்வது 

காதலிக்கு நாய்க்குட்டி 

பரிசளிப்பது என

காதலும் காதல் சார்ந்து !

மச்சினிச்சி  மீது ஆசை

வைத்துள்ள வில்லன் !

அஜித் குமாரை ஆசை 

நாயகனாக மாற்றிய

முதல் பெரிய வெற்றி படம் !!!







Sunday, 27 April 2025

நாறும்பூநாதரும் ஒரு நாரும்

எழுத்தாளர் நாறும்பூநாதன் ஐயா அவர்கள் பற்றி நண்பர் சேதுபாலா எழுதிய புத்தகம்.



நண்பர் சேதுபாலா எழுதிய 96 வெண்பா புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை. காரணம் 96 படத்தை முழுமையாக ஒருமுறை பார்த்தால் வாசிக்க சுவராஸ்யம் இருக்கும் என்பதால்.

நாறும்பூநாதன் ஐயாவை நான் எழுத்தாளர் என்று மேலே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, பொதுவுடைமை சிந்தனையாளர், சமூக சேவகர் என்று பன்முகம் கொண்டவர் என்பதை காலச்சுவடு இதழில் வந்த அஞ்சலி கட்டுரையில் தெரிந்து கொண்டேன்.

சேது போல நானும் தேனி புத்தகத்தை வாசித்த பிறகு தான் ஐயாவின் திருநெல்வேலி புத்தகத்தை வாசித்தேன். முதலில் அந்த புத்தகம் வாங்க எனக்கு ஆர்வம் இல்லை. விற்பனைதளத்தில் கிறிஸ்து ராஜா பள்ளியில் யேசுநாதர் கைகளை விரித்து நிற்கும் சிலை பற்றி ஐயா எழுதியது இருந்தது. அந்த வரிகளே புத்தகத்தை வாங்க வைத்தது.

இந்தப் புத்தகத்துக்கு வருவோம். சேதுவுக்கும் நாறும்பூநாதன் ஐயாவுக்குமான சந்திப்புகள் உரையாடல்கள் தான் இந்தப் புத்தகம். சேது திருநெல்வேலி புத்தகம் குறித்து ஐயாவிடம் கேட்ட கேள்வி, அதற்கான பதில், ஐயாவின் குணத்தை காட்டுகிறது. சேதுவின் கேள்விக்கு என்னிடம் ஒரு பதில் உள்ளது. லூர்து நாதன் பற்றி ஆண்டுதோறும் செய்தித்தாள் நெல்லை பதிப்பில் தகவல் வரும். கிளாரிந்தா, ரெய்னிஸ் ஐயர் பற்றி யார் சொல்வார்கள்?. ஐயாவின் புத்தகம் தான் வழிகாட்டியாக உள்ளது.

திருநெல்வேலி வெள்ளத்திற்குப் பிறகு ஐயா ஆழிக்குடி கிராமத்திற்குச் சென்று ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இன்னும் நினைவில் உள்ளது. சேது மூலமாக ஐயாவை சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் காலத்தின் கணக்கு வேறாகிவிட்டது.

சேதுவின் எழுத்துக்களின் மூலம் நாறும்பூ ஐயா, இளைஞர்களை எப்படி ஊக்குவித்தார் என்று தெளிவாக தெரிகிறது. ஆறுபதிலும் இளைஞரின் துடிப்புடன் வலம் வந்த இலக்கிய ஆளுமையை அள்ளிக் கொள்ள காலனுக்கு எப்படி மனது வந்ததோ?அஞ்சலியை எழுத்தின் மூலமாக செய்திருக்கும் சேதுவுக்கு பாராட்டுக்கள்.

நாறும்பூ மணக்க....

Saturday, 8 March 2025

மொழிக் கொள்கை

இரு மொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பது தான் இன்றைய விவாதம் பொருள்.
 
ஒரு மொழியைப் பொறுத்தவரை சூழல் தான் கற்றுக்கொள்ள வைக்கிறது. சென்னை சூழலில் இருப்பவன் த்தா என்பதும், நெல்லை சூழலில் இருப்பவன் ஏல என்பதும் அந்தச் சூழலில் கற்றுக் கொள்வது தானே.

ஆந்திராவில் வேலை செய்ய போனால் தெலுங்கு கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டால் சூழலை சமாளிப்பது எளிது. அதற்க்காக பள்ளிக்கூடத்தில் தெலுங்கு கற்று தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே தான் ஹிந்திக்கும். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. ஹிந்தி பேசும் மாநிலங்கள் அதிகம் என்பது மட்டுமே உண்மை, அதனால் தேசிய மொழியாகி விடாது.

இருமொழி என்றால் தமிழ்+ ஆங்கிலம் அல்லது ஆங்கிலம்+ இன்னொரு மொழியும் இருக்கலாம். தமிழ் + ஆங்கிலம் இதை எடுத்துக் கொள்வோம். இதில் ஆங்கிலம் எப்படி பயிற்றுவிக்கப்படுகிறது என்பது தான் பிரச்சினை.

எனக்கு பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் கற்றுத் தந்த சீர் பிரித்து எழுதுதல் இன்றும் என்னால் செய்ய முடியும். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள direct speech --> indirect speech இன்றளவிலும் சரியாக தெரியாது. (எதற்கு தெரிய வேண்டும் ஏஐ தொழில் நுட்பம் இருக்கே.)

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் எனது பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் பட்டப் மேற்படிப்பு தமிழ் மொழி பாடத்தில் கற்றவர். ஆங்கில ஆசிரியர் பட்ட மேற்படிப்பு கணித பாடத்திற்கு படித்தவர். இதுதான் வித்தியாசம்.

பரியேறும் பெருமாள் படத்தில் காட்டி இருப்பார். ஆங்கிலத்தில் இரண்டாவது முயற்சியில் காப்பி அடித்து ஏதேதோ செய்து கதாநாயகன் சட்டக்கல்லூரியில் நுழைவார் என்று. இது கிராமப்புற மாணவர்களின் நிலை என்று எண்ண வேண்டாம். நகர்ப்புற மாணவர்கள் நிலையும் இது தான்.

11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் develop the hints என்று ஒன்று. காகம் - பாட்டி - நாய் - வடை - நரி என்று குறிப்பு இருக்கும். பாட்டி வடை சுட்ட கதையை எழுத வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்வோம் என்றால் முதலில் ரஃப் காப்பி என்று எழுதி அதை அடித்து விட்டு பேர் காப்பி என்று ஒன்று எழுதுவோம்.

பேர் காப்பியின் வடிவம் காகம் of the பாட்டி for the நாய் was the வடை on their நரி என்று. ஆங்கில ஆசிரியர் இதை படித்து பார்ப்பது இல்லை. அடுத்த பக்கத்தில் ஆலிவர் டுவிஸ்ட் எஸ்ஸேவை அச்சு பிரளாமல் எழுதி இருப்போம் (மனப்பாடம் செய்து).

11வது மற்றும் 12வது மொழி பாடத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. மொழிப்பாடம்‌ ஏட்டுச் சுரைக்காய். கணிதமும், இயற்பியலும், வேதியியலும், உயிரியலும் தான் மருத்துவம், பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வுக்கு உதவும். மொழிப் பாடத்தை வைத்து என்ன செய்ய?
எங்கள் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது தமிழ் பாடத்தில் பாட்டையா என்ற சிறுகதை உண்டு. அதற்கு "பாட்டையா" U Dts " இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது என்று எழுதும் மாணவர்கள் உண்டு. தமிழாசிரியர் அதை கண்டு கொள்வதும் இல்லை.

இங்கு முன்வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் போய் சிரமப்படுகிறார்கள். சிரமம் என்பது உண்மை தான். அதே சமயம் ஆங்கில வழியில் பயின்றவர்கள் புலமையோடு வருகிறார்கள் என்பது உண்மை அல்ல.

O2 என்றால் ஆக்ஸிஜன் என்பது தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தெரியும். ஆனால் ஆக்ஸிஜனுக்கு ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் தெரியாது என்பது மட்டுமே பிரச்சினை. பிதாகரஸ் தியரம் (தமிழில் தேற்றம்) பெரும்பாலான கணித ஆசிரியர்கள் விளக்கி சொல்வது இல்லை. அவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய அழுத்தம். கல்லூரி செல்லும் போது தமிழ் வழி மாணவர்கள் அடுத்த பக்கம், எதிர் பக்கத்தை எளிதாக எதிர் கொண்டு விடுவார்கள். அந்த கர்ணம் தான் பிரச்சினை.

மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை முக்கிய பிரச்சினைகள் பாடத்திட்டம், அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பயிற்றுவிக்கும் ஆசிரியர் தகுதி என்பவை. இது தான் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான விசயம்.

Sunday, 16 February 2025

6ம் வகுப்பு டி பிரிவு

ஆறாம் வகுப்பிற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால் ஐந்தாம் வகுப்பு வரை நான் எங்கள் கிராமத்து பள்ளிகளில் (மூன்றாம் வகுப்பு வரை - செழியநல்லூர், 4& 5 - கீழப்பிள்ளையார்குளம்) படித்தேன். ஆறாம் வகுப்பிற்கு பாளையங்கோட்டை நகருக்கு வந்தேன். பாளையங்கோட்டை என்பது பள்ளிகளின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிறைய பள்ளிகள் நிறைந்த இடம்.

என்னை சேவியர் பள்ளியில் சேர்ப்பதாக தான் பேச்சு. ஆனால் சேவியர் பள்ளியில் ஏப்ரல் மாதமே சேர்க்கை முடிந்ததால் அடுத்த தேர்வாக ஜான்ஸ் பள்ளி வந்தது. மே 15ம் தேதி டோக்கன் கொடுப்பதாக சொன்னார்கள்.

மே 18ம் தேதி டோக்கன் கொடுத்தார்கள், அதற்குப் பிறகு நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் கணக்கில். ஆங்கிலத் தேர்வில் முதல் கேள்வி வாட் இஸ் யுவர் நேம் - மை நேம் இஸ் பழனி செல்வகுமார் என்று எழுதினேன். அடுத்த கேள்வி வாட் இஸ் யுவர் நேட்டிவ் ப்ளேஸ். - கீழப்பிள்ளையார்குளம் என்று எழுதினேன். அடுத்தடுத்த எட்டு கேள்விகளுக்கும் இதை பதிலை எழுதினேன்.

நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பள்ளியில் நுழைந்தேன். பின்னணியில் மாமாவின் உழைப்பு. அட்மிஷன் முடிந்து விடுதியில் சேர்க்க விடுதியில் வாசல் வரை சென்ற பிறகு அங்கு வார்டன் இல்லை. பெரியம்மா, எங்க வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு போகட்டும் என்று கேட்டாங்க.

எனக்கு ஓர் இரவு முழுக்க யோசிக்க வீட்டில் டைம் கொடுத்தார்கள். நான் நன்றாக தூங்கி விட்டு பெரியம்மா (சற்றே தூரத்து சொந்தம்) வீட்டில் இருந்து போறேன் என்றேன். அதுவே முடிவானது. ஜூன் 3ம் தேதி ஸ்கூல் தொடங்கியது. முதல் நாள் சுரேஷ் அண்ணன் தான் ஸ்கூலில் கொண்டு போய் விட்டாங்க. 6ஆம் டி பிரிவு தான் எனது வகுப்பு. வெஸ்டர்ன் பிளாக்கில் மாடியில் கடைசியாக இருந்த வகுப்பு தான் டி செக்சன்.

நேரம் தவறாமை ரயில்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் என்று கரும்பலகையில் பெரிதாக எழுதி இருந்தார்கள். முதல் நாள் மதியம் வரை தான் பள்ளி இயங்கும் என்று சொல்லி இருந்தார்கள். மதியம் உணவு இடைவேளையின் போது நல்ல மழை, நான் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டேன். மழை தண்ணியில் டிபன் பாக்ஸ் கழுவிவிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன். என்னை கூப்பிட வீட்டை விட்டு கிளம்பிய சுரேஷ் அண்ணனுக்கு நான் வீட்டை கண்டுபிடித்து வந்தது ஆச்சர்யம்.

இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு முதல் வகுப்பு அறிவியல். மலையப்பன் சார் வந்தார். நேத்து மத்தியானமே ஓடியது யார் என்று விசாரித்தார், என் பக்கத்தில் இருந்த பேச்சி முத்து இவன் இவன் என்று என்னை கோர்த்து விட்டான். திட்டினார். பிறகு நான் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்ததற்கு திட்டினார். எனக்கு ஏன்னு தெரியல. பேச்சி முத்து தான் சொன்னான், வாத்தியார் பாடம் நடத்தும் போது தண்ணி குடிப்பது மரியாதை குறைவு என்று.

அதற்குப் பிறகு எங்கள் வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேல் வந்த பிறகு உயர அடிப்படையில் உட்கார வைத்தார். எனக்கு கிரவுண்ட் பக்கம் கடைசிக்கு முந்தைய பெஞ்சில் இடம் கிடைத்தது. எனக்கு பக்கத்தில் பரமசிவனும் சீனிவாசனும். பிரின்ஸ்ம் எங்க பெஞ்ச் தான்.

எங்களுக்கு முந்தைய பெஞ்சில் முதல் ரேங்க் எடுக்கும் அய்யம் பெருமாள் இருந்தான். அபுபக்கர் சித்திக்கும் அதே பெஞ்ச் தான். எங்களுக்கு பின் பெஞ்சில் ஐயன்ராஜ், ராஜேஸ்வரன். எனக்கு பரமசிவனை பார்த்தால் சற்றே பயம், அவன் ஆறாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்ததால். பழக இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. இன்று அவன் உயிரோடு இல்லை என்பது நம்ப முடியவில்லை. நல்ல நண்பன், இளம்வயது மாரடைப்பு.

அதே போல் பாபுவை பார்த்தாலும் பயம். அவன் அதை பயன்படுத்தி என்னை மிரட்டுவான். விடுதி மாணவர்களில் கோமதி நாயகம் வீட்டுக்கு போகனும்னு அழுது கொண்டே இருப்பான். தமிழன் வகுப்பு நடக்கும் போது தூங்கி மாட்டிக் கொள்வான். நாக்கில் முட்டை விட்டு திரியும் செந்தில்நாதன் தூங்குவான், மாட்ட மாட்டான்.

ஜான் எட்வர்ஸ் கீ செயினை டவுசர் லூப்பில் மாட்டி சாவியை டவுசர் பாக்கெட்டில் போட்டிருப்பான். மகாலிங்கம், பால விநாயகம், ஆறுமுக குமார், குமார், மணிகண்டன், ராஜா, ரமேஷ், ஆலன் ஜெபக்குமார் ஆகியோர் நினைவில் நிற்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்.

நான் வராண்டாவில் உட்கார்ந்து தனியாக தான் சாப்பிடுவேன். ஹரி ஹர சுதன், அருண்குமார் ரெண்டு பேரும் என்னை சேர்ந்து உட்கார கூப்பிட்டு சேர்த்து கொண்டார்கள். எப்போதாவது உணவை பரிமாறி கொள்வோம். அவர்கள் இருவரும் டிபன் பாக்ஸ் கழுவ மாட்டார்கள். பரமசிவனிடம் கேட்டு டேப் எங்கே இருக்கிறது என தெரிந்து கழுவி கொண்டேன். அதுவரை வாட்டர் பாட்டில் தண்ணியில் கழுவினேன்.

ஆறாம் வகுப்பு வாத்தியார் என்றால் செல்வின் சார் தமிழாசிரியர் வந்தாலே சிகரெட் வாடை தூக்கும். வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேலும் புகைப்படிப்பார். அறிவியல் ஆசிரியர் மலையப்பன் சார் பெரிய பை கொண்டு வருவார். ஆறாம் வகுப்பிற்கே பத்தாம் வகுப்பு போல கடுமையாக படிக்க சொல்வார். பாலசிங் சார் சமூக அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே அவருக்கு குரல் மாறும்.

வி.ஈ வகுப்பிற்கு ஒரு பிடி சார் வந்து பைபிள் கதைகள் சொல்வார். எல்.ஓ.ஈ வகுப்பிற்கு வரும் செல்வராஜ் சார் ஓரமாக உட்கார்ந்து விடுவார். ஏல பேசாதே என்று எப்போதாவது சத்தம் போடுவார். எங்கள் பள்ளியில் வேட்டி கட்டி வரும் ஒரே ஆசிரியர் அவர் தான்.  கிராஃப்ட் சார் அதிசய ராஜ் அழகாக கதை சொல்வார். ஏதாவது கைவினை பொருள்கள் செய்ய சொல்லி தருவார்.

டிராயிங் சார் பிரின்ஸ், அவரை பார்த்தாலே எனக்கு பயம். வியாழக்கிழமை ஐந்தாவது பிரியட் டிராயிங். படம் வரைய சொல்லி திருத்தி டார்ச்சர் செய்வார். ஆண்டு முழுக்க ஒரு மாம்பழம் மட்டுமே வரைய சொல்லி தந்தார். அட்டென்ஸ் எடுக்கும் போது பெயரை பெண் பெயராக வாசித்து கிரிஞ்ச் பண்ணி சிரிப்பார். நாங்களும் அதை முரட்டு காமெடியாக நினைத்து சிரிப்போம். 

ஆறாம் வகுப்பில் முதல் மிட் டெர்ம் தேர்வில் நான் நான்காவது ரேங்க். தேர்வு முடிந்த பிறகு தான் தெரியும். ஆங்கில தேர்வில் டிரான்லேசனுக்கு தமிழில் எழுத வேண்டும் என்பது. ஆனாலும் நாலாவது ரேங்க்கை இறுக பிடித்துக் கொண்டேன். ஒருமுறை ஆறாவது ரேங்க்கை தொட்டு பார்த்தேன்.

காக்கி டவுசர் போட்டு அந்த வெஸ்டர்ன் ப்ளாக்கில் பயத்துடனே நுழைந்து வந்த நாட்கள் பசுமையாக மனதில் உள்ளது.


Saturday, 25 January 2025

பத்மபூசனுக்கு

அமராவதியில் ஆரம்பம்

குட் பேட் அக்லி வரை

கலைத்துறையில் நீ படைத்த

வரலாறுக்கு உன்னைத்தேடி

வந்துள்ளது பத்மபூசன்.

விருது பெற இருக்கும்

ஆசை நாயகன் அஜித்ஜிக்கு 

விஸ்வாசம் மிக்க ரசிகனின் கடிதம்!

ராஜாவின் பார்வையிலே பட்டுவிட

கல்லூரி வாசலில் 

வான்மதி, பவித்ரா என 

ரெட்டை ஜடை வயசு பெண்களை

காத்திருக்க வைத்த

மைனர் மாப்பிள்ளை நீ !

காதல் கோட்டையில் 

காதல் மன்னாக பிரேம புஸ்தகம் 

படித்தவன் நீ !

அவள் வருவாளா 

என்னை தாலாட்ட வருவாளா,

என்று காத்திருந்த உன்னிடம் 

ஷாலினி சொன்னது,

உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்று 

உனது பதில்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று

அன்று முதல் ஷாலினி வீட்டு 

தோட்டத்தில் பூவெல்லாம் உன் வாசம்,

என் வீடு என் கணவர் என்று

பெருமிதம் கொண்ட ஷாலினி

வாழ்வெல்லாம் ஆனந்த பூங்காற்றே !

உனது பகைவன்கள், வில்லன்கள்

உன்னை பழித்த ஊடகங்களுக்கு

ஆஞ்சநேயாவாக வலிமையை

காட்டியது உன் துணிவு !

தெரிந்த கதையை வைத்தே

மாஸ் காட்டியது பில்லா

ராஜா, ஜனா, தீனா, அசோகா, வாலி

பரமசிவன், ஆழ்வார், திருப்பதி

என்ற அடைமொழியுடன் 

திரியும் ரசிகர்களின்

மனதில் நீங்கா இடம் பெற்றது 

பில்லா II !

தொழிலாளர் நலனில்

நீ காட்டுவது நேர்கொண்ட பார்வை

தீங்கான விளம்பரங்களுக்கு

நீ காட்டியது ரெட் கார்டு !

அட்டகாசமாக அமர்க்களமாக 

சென்ற நேசம் மிகுந்த

உன் வாழ்வில் உயிரோடு உயிராக 

பிறந்த அசல் வாரிசுகள் 

அனோஷ்கா & ஆத்விக் !

மற்றவர்கள் உல்லாசமாக 

மங்காத்தா விளையாட

நீ தேர்வு செய்து சாதித்தது

துப்பாக்கி சுடும் போட்டியில் !

நீ வருவாய் என 

நிறைய தயாரிப்பாளர்கள் 

காத்திருக்க உன் சிறுவயது

கனவான ரேஸ்

வேதாளமாய் உன் தோளில் 

களத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்றாய்

விடாமுயற்சியால் 53 வயதில்

வென்றாய்

இந்திய சிட்டிசனாய்

பெருமை சேர்த்தாய் !

ஏகன் இறைவன் ஆசியால்

இந்த ஆண்டு உனக்கு

ராசியான ஆண்டு 

இங்கிலீஷ் விங்கிலீஷ் நாடுகளில் 

இன்னும் பல கிரீடம் சூட போகிறாய் !

என்னை அறிந்தால் உன்

குடும்பத்தை முதலில் கவனி

அதுவே வீரமான விவேகம் என்றாய் !

அதற்காகவே இந்த 

பாசமலர்களின் அன்பு 

என்றும் தொடரும் !!!





Monday, 13 January 2025

சொந்தங்கள்

அடிக்கடி கோபப்பட்டு 

வீட்டை விட்டு செல்லும் தம்பி 

ஒசூரிலோ, திருப்பூரிலோ

மும்பையிலோ சென்று

கஷ்டப்பட கூடாதென்று 

சாமி உண்டியலில் காசு 

போட்டு வைத்திருப்பார்

சித்தப்பா !!!

****

கையில் காசு இல்லை 

என்றாலும் கடன் சொல்லி 

தங்கச்சி மகனுக்கு 

காப்பியோ, கலரோ வாங்கித்

தர முற்படுகிறார் 

தாய் மாமா !!!

****

என்ன கேட்டாலும் 

அப்பா வாங்கி தருவார் 

என்ற நம்பிக்கையில் 

பாராசுட் கேட்கிறாள் 

மகள் !

எங்கள் இளவரசிக்கு 

சிறகு முளைக்க 

தொடங்கிவிட்டது !!!

****

புத்தகங்கள் வாசிக்கும் போது 

நம் மனைவியும் பெண்

எவ்வளவு கஷ்டங்களை 

தாங்கிக் கொள்கிறாள்

என்று சஞ்சலப்படும் மனசு,

பாலை காய்ச்சி தரச்

சொல்லும் போது 

புத்தகத்தை தூக்கி எறிகிறது !!!

****

விருப்பு, வெறுப்புகள் 

வேறுபட்டாலும் ஏதோ ஒரு 

புள்ளி இணைக்கிறது.

சாதி, அரசியல், மதம், கிரிக்கெட், சினிமா

என சண்டையிட சரியான

களம் தான் சந்து !

நேரில் பார்த்திராவிட்டாலும் 

அண்ணனாய், நண்பனாய்

நினைத்து மகிழ்ச்சி தருகிறார்கள் 

சந்து வாழ் சொந்தங்கள் !!!

****