Friday, 20 February 2026

காஃபி வித் கபிலர்

நர்சிம் அண்ணாவின் இந்தப் புத்தகம் குறித்து நிறைய பேர் நிறைய சொல்லி விட்டனர். ஏற்கனவே இணையத்தில் சில கட்டுரைகள் வாசித்து இருந்தேன். புத்தகமாக வாசிக்கும் அனுபவம் தனிதானே.



சங்க இலக்கியங்கள் குறித்து எதிலாவது வாசித்தால், நாமும் சங்க இலக்கியங்களை வாசிக்கலாமே என்று தோன்றும். ஆனால் எப்படி தொடங்குவது. அதற்கான திறவுகோலைத் தந்திருக்கிறது இந்தக் காஃபி வித் கபிலர் புத்தகம். 

பொதுவாக சர்ச்களில் பைபிளின் சில வசனங்களை வாசித்து விட்டு, அதற்கான விளக்கத்தை (பிரசங்கம்) தருவார்கள். அதற்கு நேர் எதிரே உள்ளது இந்தப் புத்தகம் ஒரு விளக்கம் அல்லது சம்பவத்தை சொல்லிவிட்டு அதை ஒரு சங்கப் பாடலோடு இணைத்திருக்கிறார் ஆசிரியர். 

தமிழ் இலக்கிய வளர்ச்சி இது நிச்சயத் தேவை. இதை பார்த்து, வாசித்து இன்னும் நிறைய பேர் இது போன்ற எழுத்துகளை முன்னெடுத்தால் இலக்கிய வளர்ச்சி செழுமையாக இருக்கும். 

சங்கப் பாடல்களின் ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு வரி அவரை கவர அதை வைத்து அய்யனாரை வேண்டும் அக்கா, வியாழக்கிழமை விகடன், டீ குடிக்கும் போதே கலைத்து விட்ட காதல் ஜோடிகள் என எளிதாக எவரையும் ஈர்க்கும் விளக்கங்களால் ஈர்க்கிறார். 

இதின் தொடர்ச்சியான கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது நெல்லிக்காய் தின்ற பின் குடிக்கும் தண்ணீரை போன்றது. (இந்த உவமை அவரிடம் சுட்டது தான்). 

Wednesday, 18 February 2026

தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு நிறைய அரசியல், சர்ச்சைகள் நிலவி வருகிறது. அது குறித்த எனது பார்வை. 

தமிழ்ப் புத்தாண்டு தற்போது ஏப்ரல் மாதத்தில் அதாவது சித்திரை 1ல் இருக்கிறது. ஒரு சாரார் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு இல்லை. தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்கிறார்கள். 

தை 1 அறுவடை திருநாள், சித்திரை 1 புத்தாண்டு என்பது மற்றொரு சாராரின் வாதம். 

சரி தமிழ்ப் புத்தாண்டு எப்போது தான்? சங்க கால நூல்களை முறையாக படித்தவர்கள் சொல்வது. சங்க நூல்களில் புத்தாண்டு குறித்து எந்த தகவல்களும் இல்லை என்பது. 

அதே சமயம் ஆதித்தமிழன் அறிவு வளர்ச்சி பெற்றிருந்தவன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. கீழடியும் அதை நிரூபித்தது. தமிழர்கள் நிச்சயம் அறிவுபூர்வமாக புத்தாண்டை நிர்ணயித்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

உலகில் பிற நாடுகளில் பாரம்பரிய புத்தாண்டுகள் எப்போது என்று பார்க்கலாம். பிப்ரவரியில் புத்தாண்டு வடகிழக்கு ஆசிய நாடுகளில் (சைனீஸ்), இந்தியா, பர்மாவில் ஏப்ரலில், எத்தியோப்பியாவில் செப்டம்பரில், யூதர்களின் புத்தாண்டு செப்டம்பர், அக்டோபரில், ஸ்காட்லாந்து புத்தாண்டு டிசம்பர் 31 - ஜனவரி 1. இதில் சில நாடுகளின் புத்தாண்டுகளை நான் எடுத்துக் கொள்ளவில்லை. 

உற்று நோக்கினால் மேற்கூறிய புத்தாண்டுகள் எல்லாமே சூரிய சுழற்சி அடிப்படையில் இருக்கும். 

தை 1 தமிழ்ப் புத்தாண்டாக என்ன காரணம்? பாரதிதாசன் சொல்லி இருக்கிறார். அண்ணா சொல்லி இருக்கிறார் என்பது. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு அதில் சந்தேகமே இல்லை. அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஓரளவு தமிழார்வம் உள்ள ஒருவரிடம் கேளுங்கள் இப்போது என்ன ஆண்டு என்று. விஸ்வாசமா? நேர் கொண்ட பார்வையா? சரியாகத் தெரியவில்லை என பதில் வரும். 

மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என மாறியது, இந்த மாற்றம் அலகாபாத் - பிரயாக்ராஜ் போல சாதாரணமாக மாறிவிடவில்லை. போராடி தான் மாற்றம் வந்தது. தமிழ்நாடு என்று மாறிய போதே தமிழ்ப் புத்தாண்டை ஏன் தைக்கு மாற்றவில்லை என்பது பெரிய கேள்வி. 

தை தமிழ்ப் புத்தாண்டுக்கு காரணமாக சொல்லப்படுவது திருவள்ளுவர் ஆண்டு தமிழறிஞர்களால் தொடங்கப்பட்டது. தமிழுக்கு தனி ஆண்டு வேண்டும் என்பதால் திருவள்ளுவர் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் தினம் தை 1 அல்ல தை 2.

ஆனால் அதுவும் ஜூன் 2ல் இருந்து தை 2க்கு மாற்றப்பட்டது. இப்போது தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 இல்லை என்பது ஒரு குறிப்பிட்ட கட்சினர் ஆர்ய எதிர்ப்பு என்ற பெயரில் செய்வது. அதே சமயம் அவர்களின் சன் டிவி தொடங்கப்பட்டது எப்போது தெரியுமா? சித்திரை 1ல்.

இங்கே திராவிடம் என்ற சொல்லாடலே ஆரிய எதிர்ப்பிற்காக. அதே சமயம் கீழடிக்குப் பிறகு திராவிடம் என்ற சொல்லை முன்னிருத்த வேண்டிய அவசியமில்லை. திராவிட குடும்பத்தில் மற்ற மொழியினர் தங்களது மொழியினை தூக்கி பிடிக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடம் என தூக்கிப்பிடிக்க வேண்டும்?. 


Monday, 9 February 2026

மகளிர் விடியல் பேருந்து

ஊருணியில் இருந்து

தீர்த்தம் எடுத்து வந்தாச்சு. 

வில்லிசை நிறுத்தப்பட்டு

மேளமும் மணியும்

ஒலிக்கிறது. 

சாமி அருள் யாருக்கும்

வரவில்லை. 

மேளத்தின் வேகத்தைக் 

கூட்டச் சொல்கிறார்

ஊர் பெருசு. 

ஊருணி கரையில் 

வேலை செய்யும்

ஜேசிபியை வேடிக்கை

பார்ததபடி இருக்கிறார்

காவல் தெய்வம்!!! 

****

வேலைக்கு செல்லும்

ஜெயந்தி வேக வேகமாக

கிளம்பினாள். 

பேருந்து நிறுத்தத்தை 

நெருங்கும் முன்

பேருந்து நகரத்

தொடங்கிவிட்டது. 

கை காட்டினாள், 

அடுத்த பேருந்தில்

வரச்சொல்லி 

அடுத்த கியரை

மாற்றினார் ஓட்டுனர். 

பேருந்தின் முகப்பில்

மகளிர் விடியல்

பேருந்து!!! 

****

 ஊருக்கு வெளியே

பரந்த இடத்தில் உள்ளது

கால்நடை மருத்துவமனை

மற்றும் ஆராய்ச்சி மையம். 

நிறைய ஆய்வுகள்

நடக்கின்றது. 

ஆனாலும் ஊருக்குள்

இருக்கும் அரசு

மருத்துவமனையில்

மார்கழியை கொண்டாடுகின்றன

தெருநாய்கள்!!! 

****

மாநாட்டிற்கு தலைவர்

வருவதால் சாலையில்

வேகத் தடைகள் இல்லை. 

தலைவரைப் பார்க்க

வேகமாகச் சென்றான்

தொண்டன். 

வழியில் கட்டியிருந்த

வாழை மரத்தைப் பார்த்து

வந்தது மாடு. 

தாமதமாக வந்த

தலைவருக்கு இரங்கல்

சொல்ல நேரமில்லை!!! 

Thursday, 29 January 2026

கடவுள்களின் சந்திப்பு

ரேசனில் மூன்று நேரம்

நின்று பெற்ற மூவாயிரத்தோடு

முருகனைப் பார்கக வந்த

பக்தன் ஆறு மணி நேரம்

வரிசையில் நின்று

வேண்டுதலை வைத்தான். 

முன் இரவில் அந்த பக்தனை

பார்க்க ஆசைப்பட்டு

முருகர் கிளம்பினார். 

தெருவில் நுழையும்போதே

நாய்கள் சுற்றி விட

வேலன் வேலை எடுத்தார். 

பழுதடைந்த சாலையில்

பயணித்து களைப்பான

மயிலோடு சாலையோரம்

ஓய்வெடுத்தார். 

கால்வாய் ஓரத்தில்

கஞ்சா போதையில்

இருந்த ஒருவன்

கல்லெறிய மயில் பறக்க

காயமின்றி தப்பினார்

கந்தன். 

பக்தன் வீட்டினுள் சென்ற

போது ஆழந்த நித்திரையில்

இருந்தான் பக்தன். 

ஆறு மணி நேர காத்திருப்பு

தந்த அசதி என

நினைத்தார் சுப்பிரமணியன். 

பக்தனிடம் இருந்து வந்த

மது வாசனை கந்தனை

காயப்படுத்தியது. 

வந்தது வந்தோம் வள்ளிக்கு

நகை வாங்கி செல்வோம்

எனநகைக்கடைக்கு சென்றார்

மயில் வாகனன். 

தங்கம் விலையை பார்த்து

மயங்கி சரிந்தார் வடிவேலன். 

கடை வளாகத்தில் இருந்த

கணேசரை அழைத்து வந்தது

மயில். 

டேய் தம்பி என்னாச்சு

என ஓடி வந்தார் கணேசன். 

மயிலிடம் 10 ரூபாயை

கொடுத்து தண்ணீர் பாட்டில்

வாங்கி வரச் சொன்னார்

விநாயகன். 

பாட்டிலுக்கு பத்து ரூபாயா? 

என்றார் அரை மயக்கத்தில்

முருகன். 

டேய் தம்பி இது தண்ணி பாட்டில் டா

என்று பதிலுரைத்தார்

யானை முகத்தான். 

ஜிஎஸ்டி குறைஞ்சதுல 

தண்ணீர் பாட்டில் விலை

குறையவில்லையா? 

மீண்டும் முருகன். 

அதற்காக 2 சொட்டு தண்ணீர்

அதிகமாகிட்டாங்க தம்பி. 

தம்பி கண் விழித்ததும்

சகோதரர்கள் இருவரும்

நண்பர் இயேசுவை பார்க்க

கிளம்பினர். 

மாப்ளே, இயேசு என்று

கதவை தட்ட,  உள்ளேயிருந்த

இயேசு, டேய் போதை ஆசாமிகளா

இது சர்ச், பிளாக்ல சரக்கு 

கிடைக்கிற கடை

கடைசில இருக்கு என்றார். 

மீண்டும் கதவு தட்ட

எழுந்து வந்து கதவை திறந்தார்

இயேசு. 

என்னய்யா இவ்வளவு

சீக்கிரமே தூக்கம் என்றார் முருகன். 

தைப்பூசம் வருவதில்லை

என்றார் இயேசு. 

தைப்பூசத்துக்கும் உனக்கும்

என்ன சம்பந்தம்? 

அதான் மாப்ள எனக்கும்

தெரியலை ஆனால்

முழு இரவு ஜெபம்

ஏற்பாடு பண்ணி இருக்கானுக. 

இருவரும் சிரிக்க

நீங்க ஜாலியா இருக்கீங்க

அப்படி தானே. 

யோவ் நீ வேற நண்பா

முதற்கடவுள்னு தான் பேரு

கடைசியா தான் வந்தார்

விநாயக்னு கலாய்கிறானுக

என்றார் பிள்ளையார்

பரிதாபமாக. 

மூவரும் சேர்ந்து

அடுத்த நண்பர் அல்லாவை

பார்க்க சென்றனர். 

அல்லா மாம்ஸ், அல்லா மாம்ஸ்

என்று கதவை தட்ட

அல்லா எழவில்லை. 

மாம்ஸ வெடி வச்சு

தான் எழுப்பனும் போல

என்று இயேசு சொல்ல

பதறி எழுந்தார் அல்லா. 

என்ன மாம்ஸ் இவ்வளவு

பதட்டம் என பிள்ளையார் கேட்க

எளவு வீட்டுல வெடி வச்சா கூட

என் பேர்ல தான் எழுதுறாங்க

என்றார் அல்லா. 

மற்ற மூவரும் சிரிக்க

முருகன் சொன்னார்

இன்னைய தேதில அல்லா மாம்ஸ்

தான் மாஸ் என்று. 

ஆமா, தேர்தல் வருது

வாங்கு வங்கி இருக்கு

புகழ் மாலை தான் அல்லாவுக்கு

என்றார் பிள்ளையார். 

அது தான் எனக்கும் பயம்

தேர்தல் முடிஞ்சா 

என்னய தெருவுல

விட்டுருவாங்க மாப்ள

என்றார் அல்லா. 

நால்வரும் சிரித்து

நகர்ந்தனர். 




Thursday, 1 January 2026

மறு சந்திப்பு

துள்ளுவதோ இளமை பட கிளைமேக்ஸில் தனுஷ் சொல்லுவாரே, என்னைக்காவது நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணுவோம். அப்போ நடந்ததை எல்லாம் பேசி சிரிக்குவோம் என்று. 

எங்களின் பள்ளி காலமும் அப்படி தான் முடிந்தது. செல்போன்கள் முளைத்திரா காலம், கடிதம் மூலமே தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை. 

பத்தாம் வகுப்பில் என்னோடு நெருக்கமாக இருந்தது. சதீஷ்குமார், விஜயகுமார், ராதாகிருஷ்ணன் & சுரேஷ். இதில் சுரேஷ் எங்கள் பள்ளியில் தான் தொடர்ந்து படித்தான். விஜயகுமாருக்கு மானூர் தான். அவன் மாறி போனதும் பக்கத்தில் இருந்த சேவியர் பள்ளி தான். வடலிவிளை ராதா நாங்கள் +1 படித்த போது 10வது தான் படித்தான். அதற்கு பிறகு தான் சென்றுவிட்டான். 

சதீஷ்குமாரின் ஊர் கீழ ஆம்பூர். அவனை விடுதியில் எல்லாரும் ஐயர் என்றே அழைப்பார்கள். ஆனால் அவன் ஐயர் சாதி கிடையாது. அவன் மீது கிட்டத்தட்ட எல்லாருமே வன்மத்தை கொட்டுவார்கள். பத்தாம் வகுப்பில் நான் விடுதியில் சேர்ந்த பிறகு என்னோடு அவன் நெருக்கமானான். என்னோடு தான் எல்லாவற்றையும் பகிர்வான். நான் கூட அவனுக்கு தவறிழைத்தேன். 

அவன் காதலி (அன்றைய நாள்) பெயரை தமிழன் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்ததால் தமிழனிடம் சொன்னேன். தமிழன், சத்தியத்தை சாம்பார் சாதமாக தின்று ஏப்பம் விட்டு எல்லோரிடமும் சொல்லி விட்டான். அந்த வகையில்சதீஷ்க்கு என் மேல் கோபமே, ஆனாலும் எங்கள் நட்பு சிதையவில்லை. 

சதீஷ், தீனா படத்தை வரி வரியாக விளக்கி விவரித்த தொனியில் தான் நான் இன்றும் அஜித் ரசிகன். சதீஷ், வெள்ளி மலரே பாட்டை நன்றாக பாடுவான், எனக்கும் எழுதித் தந்து பாட வைத்தான்.

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு வேறு பள்ளி சென்றுவிட்ட சதீஷை, கல்லூரி சென்ற பிறகு கெட்வெல் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் செம்மீன் ஹோட்டல் அருகில் சந்தித்தேன். ஏதோ கொரியர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னான். கல்லூரி விடுதி தொடர்பு எண்ணை கொடுத்தேன். அவனை தொடர்பு கொள்ள எண் இல்லை. ஒருமுறை போன் செய்து பேசினான். அதற்குப் பிறகு நினைவில் மட்டும் இருக்கிறான், தொடர்பில் இல்லை. 

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நிறைய பேர் பர்ஸ்ட் க்ரூப் எடுத்ததால் அனைவரும் ஒரே வகுப்பு. அது போக வேறு வகுப்பில் படித்த சங்கர், செல்வின், இன்பராஜ், லட்சுமணன், வரதராஜ் இன்னும் பலருடன் நட்பு உண்டு. 

மகேந்திர சிங் (பின்னாளில் தோனி பெயரும், தோனியும் எனது மனதுக்கு நெருக்கமாக காரணமானவன்) டோனாவூரில் இருந்து வந்தவன், இவனும் கம்யூட்டர் சயின்ஸ் என்பதால் நெருக்கம். பதினொன்றாம் வகுப்பில் நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே தான் இருந்தோம். பன்னிரண்டாம் வகுப்பில் மாறிவிட்டான். நான், மகேந்திர சிங், பிரசாத் மூவரும் சேர்ந்து தான் கம்யூட்டர் டியூசன் செல்வோம். 

மகேந்திர சிங், 12வது விடுமுறையில் அவனது அப்பா வசிக்கும் மும்பைக்கு செல்வதாக சொன்னான். மும்பை போனானா என்ன ஆனான் என்று தெரியவில்லை. பிரசாத்துக்கு சங்கரன்கோவில், அவனது பத்தாவது மார்க் ஷீட் தொலைந்து விட எங்க ஊருக்கு (இன்று வரை கூகுள் மேப்பில் அப்டேட் ஆகாத ஊர்) விசாரித்து வந்தவன். ஆனால் பத்தாம் வகுப்பில் அவன் எனது செக்சனே கிடையாது. சென்னைக்கு வந்த பிறகு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் சந்தித்தேன். வழுக்கை தலையோடு நின்றிருந்தவன் பிரசாத் தானா என்று அடையாளம் காணவே வெகு நேரம் தேவைப்பட்டது. 

பதினாறாம் வகுப்பில் நெருங்கிய நண்பன் வேல்முருகன். வேல் முருகனுக்கு எங்க ஊர் பக்கத்து ஊர் இத்திகுளம் தான். குடும்ப பிரச்சினையல் சிக்கி அவன் பன்னிரண்டாம் வகுப்பு சரியான முறையில் படிக்கவில்லை. ஒருமுறை மதுரை செல்லும் பஸ்ஸில் அவன் ஏறினான். அவன் மும்பையில் ஹோட்டல் நடத்துவதாக கேள்வி பட்டிருந்தேன். அப்போது பேசும் போது பாஸ்ட் புட் கடை வைத்திருப்பதாக சொன்னான். அவன் செல்போன் எண் தொலைந்துவிட்டது. அவனும் தொடர்பு எல்லையில் இல்லை. அவனது புகைப்படம் எனது பர்ஸில் இன்னும் இருக்கிறது. 

மருத்துவராகிவிட்ட மகாராஜன் ஆரம்பித்த வாட்சப் குழுவில் இன்பா, லெட்சு, எஸ் எஸ், பிரேம், கிங்ஸ்லி என பலரும் இணைந்துவிட்டனர். மருத்துவர் தான் கோபப்பட்டு சென்றுவிட்டார். எங்களின் அதிக கிண்டலுக்கு ஆளான தொழுதூர் பாலசுப்பிரமணியம் இப்போது பல் மருத்துவர். 

நீண்ட காலத்திற்குப் பிறகு, எஸ் எஸ் முருகன் போன் பண்ணினான். என்ன பேசவானோ என்று நினைத்த போதே மாப்ள எப்படி இருக்க என்று கேட்டு பால்யத்தின் நினைவுகளுக்கு அழைத்து சென்றான்.

வேலை கிடைத்து சென்னை சென்ற பிறகு, திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டில் டேய் பழனி என்ற குரல் திரும்பி பார்த்தால் பிளசிங். 12வது முடித்த பிறகு கடிதம் எழுதி இருந்தான். சில பிரச்சனைகள் காரணமாக வேறு இடத்திற்கு குடும்பத்தோடு செல்வதாக எழுதி இருந்தான். அதற்கு பிறகு புது பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு. அவன் மெடிக்கல் ரெப் ஆகி விட்டதால் மருத்துவம் குறித்து சந்தேகத்திற்கு போன் பேசிக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் தோறும் கேக் வந்து தந்து செல்கிறான். 

வளசரவாக்கத்தில் வழக்கமான சேட்டு கடையில் பொருள் வாங்கும் போது பழனி என்ற குரல், யார்னு தெரியுதா என்றான். எனக்கு தெரியல. டேய் நான் சங்கர் என்றான், அப்போதும் தெரியவில்லை. விடுதியில் 5ம் அறையில் இருந்தவர்களின் அவனும் ஒருவன். சங்கன் என்று நாங்கள் அழைக்கும் சங்கர், அந்த சங்கர் முகத்தை இந்த சால்ட் அன்ட் பெப்பர் முகத்தோடு இணைத்து ஒரு வழியாக அடையாள படுத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு வளசரவாக்கம் வீதிகளில் சாரம் கட்டி திரியும் இன்னொரு நபராக அடையாளத்தில் இருந்தான் சங்கர். 

வரதராஜ், பள்ளியில் படிக்கும் போது சொன்னது போல இப்போது பக்தி மணம் கமழும் பாதிரியார் ஆகிவிட்டான். பன்னீர்செல்வம், ஜெயக்குமார், ஜேம்ஸ், செல்வின் குறித்து தகவல்கள் இல்லை. எங்கள் வகுப்பில் நன்றாக விசில் அடிக்க தெரிந்த பூவாணி ராஜாமணி பற்றியும் தெரியவில்லை. 

என்றாவது ஒருநாள் சந்திப்போம். 


 


Tuesday, 9 December 2025

பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு படிக்கும் போதே +1ல் கம்பியூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். அதற்கு காரணம். அப்போது கம்பியூட்டர் சயின்ஸ் படித்த தன கார்த்திக் அண்ணன் தான். தன கார்த்திக் அண்ணனோடு நான் பேசி இருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அவனது நடவடிக்கை மூலமாக கம்பியூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்தேன். 



11 பி பிரிவு தான் பர்ஸ்ட் க்ரூப் தமிழ் மீடியம் கிளாஸ். முதல் முறையாக 110 பேர் இருந்த வகுப்பில் நானும். 10வதில் ஒன்றாக திரிந்த எங்கள் குழுவில் விஜயகுமார் மற்றும் சதீஷ்குமார் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். சுரேஷ் அக்கவுடன்சி & ஆடிட்டிங் க்ரூப் எடுத்தான். 

விடுதியில் ஏற்கனவே பழக்கமான எஸ் எஸ் முருகன், பிரபு பிளசிங், வேல் முருகன், கிங்ஸ்லீ, சுடலை முத்து, பிரசாத், ஆனந்த ராஜ், ஜோதி ராஜ், 
ஆகியோர் ஒரே வகுப்பில். இதில் பிரசாத் மட்டுமே கம்பியூட்டர் சயின்ஸ். இது போக புதிதாக விடுதிக்கு வந்தவர்கள் மகாராஜன், பன்னீர்செல்வம், பிரேம் குமார், ராபின் ஸ்டீபன், பாலசுப்பிரமணியன், யாசிர் அரபாத், மகேந்திர சிங், ஜெயக்குமார், ஜேம்ஸ் ஆகியோர். 

இதில் மகேந்திர சிங், ஜெயக்குமார், ஜேம்ஸ் ஆகியோர் கம்பியூட்டர் சயின்ஸ். மகேந்திர சிங் தான் எனக்கு ரொம்ப நெருக்கம். 11த்ல் அதிகம் சண்டை போட்ட நாங்கள் 12த் விட்டு கொடுத்து போக ஆரம்பித்தோம். 

முதல் நாளில் எல்லாரும் சுய அறிமுகம் செய்த போது நான் எதிர்பார்த்த ஒரு பெயர் சக்தி பரமேஸ். அவன் விஜயகுமாருக்கு ப்ரெண்ட் என்பதால் ஏற்கனவே தெரியும். ஆனால் பார்த்தது இல்லை. அவனும் என்னை எதிர்பார்த்து இருப்பான். 

பத்தாவது படிக்கும் போதே 11வது நன்றாக விளையாட தோதாதனது என்று நாங்கள் எல்லாருமே முடிவு செய்தது தான். அதனால் 11வது யாரும் பெரிய அளவில் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. தமிழாசிரியர் வருவார் போவார் நாங்கள் வகுப்பில் பேசிக்கொண்டே இருப்போம். ஆங்கில ஆசிரியர் கொஞ்சம் கண்டிப்பு, சிகரட் பிடிப்பது போல சாக்பீஸை பிடிப்பது அவரது ஸ்டைல். 

கணக்கு ஆசிரியர் பண்டாரம் சார் நன்றாக நடத்துவார் (இது 12ம் வகுப்பில் வேறு ஆசிரியர் வந்த போது தான் எங்களுக்குத் தெரியும்). ஆனால் அவர் முகத்தில் சிரிப்பு என்பதே வராது. இயற்பியல் ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன் அருமையாக பாடம் நடத்துவார், எல்லாருக்கும் புரியும் படியாக. 

வேதியியல் ஆசிரியர் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் ஆசிரியர் (கோரோனாவில் காலமாகிவிட்டார்) நடத்தியது எதுவும் புரிந்தது இல்லை. 

நாங்கள் முதலில் NSSல் (நாட்டு நலப்பணித் திட்டம்) சேர்ந்தோம். NSS சார் ஸ்டீபன் அசரியா எங்காவது கூட்டிப் போய் வேலை செய்ய சொல்வார். அதிக வேலை என்றால் டீ, வடை கிடைக்கும். எங்கள் பள்ளியில் தண்ணீர் தேங்கி இருக்கும் வழிபாட்டு மைதானத்தை நாங்கள் மண் நிரப்பி ரோலர் வைத்து சமப்படுத்தி சீர் அமைத்தது. அதற்குப் பிறகு அதில் பால் பேட்மிட்டன் விளையாட ஆரம்பித்தார்கள். 

NSS கேம்ப் மல்லக் குளத்தில் 10 நாட்கள் நடந்தது. எங்கள் பள்ளியும், சங்கர் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய முகாம். மல்லக்குளம் கிராமத்தைப் பொறுத்தவரை மொத்தமே இரண்டு தெருக்கள் தான் இருந்தது. ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு சர்ச் இருந்தது. 

அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் காலியாக இருக்க அதில் தங்கினோம். காலை 5.30க்கு எழுந்து கொள்வோம், ஊர் விழிக்கும் முன்பாக எங்காவது காலைக்கடன் முடிக்க வேண்டும். ஊரில் ஒரு அடி பம்ப் இருந்தது. நாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு பின்னால் ஒரு கிணறு உண்டு. இதில் எதிலாவது குளியல். 

8.30 மணிக்கு சாலை சீரமைப்பு பணி. மல்லக்குளம் - புதுக்குளம் வரை நாங்கள் தான் சீரமைத்தோம். மாலையில் ஏதாவது நிகழ்ச்சி நடக்கும் அல்லது பஞ்சாயத்து டிவியில் படம் போடுவார்கள். ஒருநாள் வானொலி நிலையத்தில் இருந்து பிச்சுமணி வந்து சொற்பொழிவு ஆற்றினார். சமுத்திரம் படம் ஒருநாள் போட்டார்கள். 

விடிய விடிய... பாடலை கார்த்திக் ராஜா மாத்தி பாட,  அதை சங்கர் ஸ்கூல் ஆசிரியர் கேட்க, மறுநாள் எங்களுக்கு கடும் வேலை. சாஸ்தா கோயில் எதிரில் சரிந்திருந்த சாலையை சரி செய்தோம். 

முகாம் நேரத்தில் பண்டாரம் சார் வகை நுண் கணிதம் நடத்தி முடித்து விட்டார். எங்களுக்கு எதுவும் தெரியாது. அதற்குப் பிறகு 10 நாட்கள் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. 

12ம் வகுப்பு வந்ததும் வாலை சுருட்டி படிக்க ஆரம்பித்தோம். பதினொன்றாம் வகுப்பில் கடைசிக்கு முந்தைய பெஞ்சில் இருந்த நான், முதல் பெஞ்சிற்கு மாறிவிட்டேன். வேதியியல், கம்யூட்டர் இரண்டிற்கும் டியூசன் சேர்ந்தேன். மகேந்திர சிங் வெறித்தனமாக படிப்பான். பல நாட்கள் விடுதிக்குள் வராமல் ஸ்டடி வகுப்பறையில் இருந்து விடுவான். 

கணக்கு தான் எங்களுக்கு பெரிய பிரச்சினை புதிய ஆசிரியர் டேனியல் பெரிய அளவில் சொல்லி தருவதில்லை. அதில் மாட்டிக் கொண்டோம். நான், சிங், பிரசாத் மூவரும் தெற்கு பஜாரில் ஒரு கம்யூட்டர் சென்டரில் டியூசன் படித்தோம். விடுதியில் சிறப்பு அனுமதி என்பதால் ஜாலியாக போய் வந்தோம். 

எங்களுக்கு பொது தேர்வு ஆரம்பிக்க உலகக் கோப்பையும் ஆரம்பித்தது. இதில் நாங்கள் நுழைவு தேர்வுக்கு வேறு படிக்க வேண்டும். குறைவான கட்டணத்தில் பயிற்சி அளித்த சேவியர் பள்ளியில் சேர்ந்தோம் நுழைவு தேர்வு வகுப்பு. 

நுழைவு தேர்வுக்கு எல்லாருக்கும் ஒரே தேர்வு மையம் வேண்டுமென்று எட்டு பேர் மொத்தமாக போய் விண்ணப்பித்தோம். எல்லாருக்கும் வேறு வேறு மையங்கள் வந்தது. எனக்கும் பிரேம்க்கும் நடக்கும் தூரத்தில் இருந்த சதக் அப்துல்லா கல்லூரி. 

டிசி வாங்கிய பிறகு பள்ளிப் பக்கம் போகவே இல்லை. செல்போன் நுழைந்திராத காலம் அது. நான் மகேந்திர சிங்கிற்கு சில கடிதம் எழுதினேன். பதிலில்லை. பிளசிங் எனக்கு சில கடிதங்கள் எழுதினான். பிறகு அவனுக்கும் சூழல் சரியில்லை. 



கல்லூரியில் சேர்ந்த பிறகு புது பஸ் ஸ்டான்டில் டேய் பழனி என்று யாரோ கூப்பிட திரும்பி பார்த்தேன் பிளசிங் நின்றான். 





Wednesday, 26 November 2025

நாட்டு நடப்பு

மோசமாக இருந்த
நகரச் சாலைகள் மழையால்
படுமோசமாகிவிட்டது! 

சென்டர் பீஸு கொடி ஏற்றுகிறது
இங்கே பெரிய பீஸு
பிறந்த நாள் வாழ்த்து
சின்ன பீஸு
ரௌடி டைம்! 

பழைய பீஸுக்கு 
பஸ் ஏறினா தான்
உயிர் வரும்! 

புதுசா வந்த காமெடி பீஸ்
இரண்டு பக்க
அறிக்கையில்!

மக்கள் துயரம் 
தொடருகிறது!!!