Thursday, 1 January 2026

மறு சந்திப்பு

துள்ளுவதோ இளமை பட கிளைமேக்ஸில் தனுஷ் சொல்லுவாரே, என்னைக்காவது நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் மீட் பண்ணுவோம். அப்போ நடந்ததை எல்லாம் பேசி சிரிக்குவோம் என்று. 

எங்களின் பள்ளி காலமும் அப்படி தான் முடிந்தது. செல்போன்கள் முளைத்திரா காலம், கடிதம் மூலமே தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை. 

பத்தாம் வகுப்பில் என்னோடு நெருக்கமாக இருந்தது. சதீஷ்குமார், விஜயகுமார், ராதாகிருஷ்ணன் & சுரேஷ். இதில் சுரேஷ் எங்கள் பள்ளியில் தான் தொடர்ந்து படித்தான். விஜயகுமாருக்கு மானூர் தான். அவன் மாறி போனதும் பக்கத்தில் இருந்த சேவியர் பள்ளி தான். வடலிவிளை ராதா நாங்கள் +1 படித்த போது 10வது தான் படித்தான். அதற்கு பிறகு தான் சென்றுவிட்டான். 

சதீஷ்குமாரின் ஊர் கீழ ஆம்பூர். அவனை விடுதியில் எல்லாரும் ஐயர் என்றே அழைப்பார்கள். ஆனால் அவன் ஐயர் சாதி கிடையாது. அவன் மீது கிட்டத்தட்ட எல்லாருமே வன்மத்தை கொட்டுவார்கள். பத்தாம் வகுப்பில் நான் விடுதியில் சேர்ந்த பிறகு என்னோடு அவன் நெருக்கமானான். என்னோடு தான் எல்லாவற்றையும் பகிர்வான். நான் கூட அவனுக்கு தவறிழைத்தேன். 

அவன் காதலி (அன்றைய நாள்) பெயரை தமிழன் யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்ததால் தமிழனிடம் சொன்னேன். தமிழன், சத்தியத்தை சாம்பார் சாதமாக தின்று ஏப்பம் விட்டு எல்லோரிடமும் சொல்லி விட்டான். அந்த வகையில்சதீஷ்க்கு என் மேல் கோபமே, ஆனாலும் எங்கள் நட்பு சிதையவில்லை. 

சதீஷ், தீனா படத்தை வரி வரியாக விளக்கி விவரித்த தொனியில் தான் நான் இன்றும் அஜித் ரசிகன். சதீஷ், வெள்ளி மலரே பாட்டை நன்றாக பாடுவான், எனக்கும் எழுதித் தந்து பாட வைத்தான்.

பத்தாம் வகுப்பிற்குப் பிறகு வேறு பள்ளி சென்றுவிட்ட சதீஷை, கல்லூரி சென்ற பிறகு கெட்வெல் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் செம்மீன் ஹோட்டல் அருகில் சந்தித்தேன். ஏதோ கொரியர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொன்னான். கல்லூரி விடுதி தொடர்பு எண்ணை கொடுத்தேன். அவனை தொடர்பு கொள்ள எண் இல்லை. ஒருமுறை போன் செய்து பேசினான். அதற்குப் பிறகு நினைவில் மட்டும் இருக்கிறான், தொடர்பில் இல்லை. 

பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நிறைய பேர் பர்ஸ்ட் க்ரூப் எடுத்ததால் அனைவரும் ஒரே வகுப்பு. அது போக வேறு வகுப்பில் படித்த சங்கர், செல்வின், இன்பராஜ், லட்சுமணன், வரதராஜ் இன்னும் பலருடன் நட்பு உண்டு. 

மகேந்திர சிங் (பின்னாளில் தோனி பெயரும், தோனியும் எனது மனதுக்கு நெருக்கமாக காரணமானவன்) டோனாவூரில் இருந்து வந்தவன், இவனும் கம்யூட்டர் சயின்ஸ் என்பதால் நெருக்கம். பதினொன்றாம் வகுப்பில் நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே தான் இருந்தோம். பன்னிரண்டாம் வகுப்பில் மாறிவிட்டான். நான், மகேந்திர சிங், பிரசாத் மூவரும் சேர்ந்து தான் கம்யூட்டர் டியூசன் செல்வோம். 

மகேந்திர சிங், 12வது விடுமுறையில் அவனது அப்பா வசிக்கும் மும்பைக்கு செல்வதாக சொன்னான். மும்பை போனானா என்ன ஆனான் என்று தெரியவில்லை. பிரசாத்துக்கு சங்கரன்கோவில், அவனது பத்தாவது மார்க் ஷீட் தொலைந்து விட எங்க ஊருக்கு (இன்று வரை கூகுள் மேப்பில் அப்டேட் ஆகாத ஊர்) விசாரித்து வந்தவன். ஆனால் பத்தாம் வகுப்பில் அவன் எனது செக்சனே கிடையாது. சென்னைக்கு வந்த பிறகு சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் சந்தித்தேன். வழுக்கை தலையோடு நின்றிருந்தவன் பிரசாத் தானா என்று அடையாளம் காணவே வெகு நேரம் தேவைப்பட்டது. 

பதினாறாம் வகுப்பில் நெருங்கிய நண்பன் வேல்முருகன். வேல் முருகனுக்கு எங்க ஊர் பக்கத்து ஊர் இத்திகுளம் தான். குடும்ப பிரச்சினையல் சிக்கி அவன் பன்னிரண்டாம் வகுப்பு சரியான முறையில் படிக்கவில்லை. ஒருமுறை மதுரை செல்லும் பஸ்ஸில் அவன் ஏறினான். அவன் மும்பையில் ஹோட்டல் நடத்துவதாக கேள்வி பட்டிருந்தேன். அப்போது பேசும் போது பாஸ்ட் புட் கடை வைத்திருப்பதாக சொன்னான். அவன் செல்போன் எண் தொலைந்துவிட்டது. அவனும் தொடர்பு எல்லையில் இல்லை. அவனது புகைப்படம் எனது பர்ஸில் இன்னும் இருக்கிறது. 

மருத்துவராகிவிட்ட மகாராஜன் ஆரம்பித்த வாட்சப் குழுவில் இன்பா, லெட்சு, எஸ் எஸ், பிரேம், கிங்ஸ்லி என பலரும் இணைந்துவிட்டனர். மருத்துவர் தான் கோபப்பட்டு சென்றுவிட்டார். எங்களின் அதிக கிண்டலுக்கு ஆளான தொழுதூர் பாலசுப்பிரமணியம் இப்போது பல் மருத்துவர். 

நீண்ட காலத்திற்குப் பிறகு, எஸ் எஸ் முருகன் போன் பண்ணினான். என்ன பேசவானோ என்று நினைத்த போதே மாப்ள எப்படி இருக்க என்று கேட்டு பால்யத்தின் நினைவுகளுக்கு அழைத்து சென்றான்.

வேலை கிடைத்து சென்னை சென்ற பிறகு, திருநெல்வேலி புது பஸ் ஸ்டாண்டில் டேய் பழனி என்ற குரல் திரும்பி பார்த்தால் பிளசிங். 12வது முடித்த பிறகு கடிதம் எழுதி இருந்தான். சில பிரச்சனைகள் காரணமாக வேறு இடத்திற்கு குடும்பத்தோடு செல்வதாக எழுதி இருந்தான். அதற்கு பிறகு புது பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு. அவன் மெடிக்கல் ரெப் ஆகி விட்டதால் மருத்துவம் குறித்து சந்தேகத்திற்கு போன் பேசிக் கொள்கிறேன். கிறிஸ்துமஸ் தோறும் கேக் வந்து தந்து செல்கிறான். 

வளசரவாக்கத்தில் வழக்கமான சேட்டு கடையில் பொருள் வாங்கும் போது பழனி என்ற குரல், யார்னு தெரியுதா என்றான். எனக்கு தெரியல. டேய் நான் சங்கர் என்றான், அப்போதும் தெரியவில்லை. விடுதியில் 5ம் அறையில் இருந்தவர்களின் அவனும் ஒருவன். சங்கன் என்று நாங்கள் அழைக்கும் சங்கர், அந்த சங்கர் முகத்தை இந்த சால்ட் அன்ட் பெப்பர் முகத்தோடு இணைத்து ஒரு வழியாக அடையாள படுத்திக்கொண்டேன். அதற்குப் பிறகு வளசரவாக்கம் வீதிகளில் சாரம் கட்டி திரியும் இன்னொரு நபராக அடையாளத்தில் இருந்தான் சங்கர். 

வரதராஜ், பள்ளியில் படிக்கும் போது சொன்னது போல இப்போது பக்தி மணம் கமழும் பாதிரியார் ஆகிவிட்டான். பன்னீர்செல்வம், ஜெயக்குமார், ஜேம்ஸ், செல்வின் குறித்து தகவல்கள் இல்லை. எங்கள் வகுப்பில் நன்றாக விசில் அடிக்க தெரிந்த பூவாணி ராஜாமணி பற்றியும் தெரியவில்லை. 

என்றாவது ஒருநாள் சந்திப்போம். 


 


No comments:

Post a Comment