பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் யாராவது வரவில்லை என்றால் ஏதாவது பேசிக்கொண்டு இருப்போம். சினிமா, விளையாட்டு எனப் பேச ஏதாவது இருக்கும். அந்த நேரங்களில் வகுப்பு லீடர் பேசியவர்கள் பெயரை கரும்பலகையில் எழுதுவது உண்டு. சில நேரங்களில் உளவு பார்த்து பெயரைப் பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் தருபவர்களும் உண்டு.
விடுதியில் சேர்ந்த பிறகு, வார்டன் சுற்றி வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பேசிக்கொண்டே இருப்போம். ரசிக சண்டை, பாம்புக் கதை, ஊர்க் கதை, கிரிக்கெட் என நீண்டு கொண்டே இருக்கும்.
கல்லூரி விடுதியில் ஏதாவது பேச ஆரம்பித்தால் அப்படியே நீண்டு போகும். வகுப்பில் நடக்கும் கலாட்டாக்கள், கிரிக்கெட், அரசியல், தேர்வு, ரிசல்ட் என நீளும். ஓர் இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேய் கதை சொல்ல, அந்த இரவில் பயத்துடனே தூங்கினோம்.
ஊரில் இருட்டிய பிறகு எங்கள் வீட்டு திரணையில் (திண்ணையில்) நிறைய பேர் உட்கார்ந்து பேசுவது வழக்கம். நாங்கள் கோமுத் தாத்தாவிடம் கதை கேட்போம். சில நேரங்களில் பேச்சு சுவாரஸ்யங்களில் தாத்தாக்கள் மூழ்கி இருக்க நாங்கள் நழுவி தூங்கச் செல்வோம். அவர்கள் விடியவிடியக் கூட பேசிக்கொண்டு இருப்பார்கள் என அம்மா சொல்வது வழக்கம்.
வேலையில் சேர்ந்த பிறகு நந்தனத்தில் 6 மணிக்கு வெளியே வந்து டீக்கடையில் டீ சொல்லிவிட்டு பேசிக் கொண்டே இருப்போம். டீ வர 6.30 ஆகும். டீ கொண்டு வரும் வின்சென்ட்க்கு தெரியும். எங்களுக்கு எப்போது டீ கொண்டு வருவது என்று.
ஊருக்கு வந்தால் அக்காக்களோடு பேச நேரம் போதாது. அவ்வளவு பேசுவோம். பேச வேண்டியவை அவ்வளவு இருக்கும்.
இந்தப் பேச்சுகளில் சுவாரஸ்யம் இருந்தன. 100% உண்மை தான் இருக்கும் என்று சொல்ல முடியாது, என்றாலும் அந்த பொய்யும் புனைவும் கலந்த பேச்சுகள் அழகானவை.
இந்த ஆண்ட்ராய்டு போன்களின் எழுச்சி, வீடியோக்களின் வளர்ச்சிக்குப் பிறகு மனிதருக்கு மனிதன் பேசிக் கொள்வது எவ்வளவு குறைந்துவிட்டன.
ரயிலில் முன்பதிவில்லா பயணித்தில் சக பயணிகளிடம் தூக்கம் வரும் வரை பேசி செல்வோம். தூக்கம் எங்களை அறியாமல் வரும். ரிசர்வ் பெட்டிகளில் கூட சக பயணிகள் தாம்பரமா? எழும்பூரா? என்று விசாரிப்பது உண்டு. ஆனால் இன்றோ ஆளாளுக்கு ஒரு போனில் மூழ்கி திளைக்கிறோம்.
காத்திருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் கையில் போனை எடுத்துக் கொள்கிறோம். அந்த இடத்தின் புற அழகியலை உற்று நோக்கும் வாய்ப்பை தவறவிட்டு வீடியோக்களில் மூழ்கி இருக்கிறோம். ரயிலோ, பஸ்ஸோ பயணத்தில் ஒரு படத்தை பார்த்துவிடுவோம் என்று திட்டமிட்டு வருபவர்கள் ஏராளம்.
ரயிலில் டீ விற்பவரின் ராகம், வெள்ளரிக்காய் விற்பவரின் ஹைபிட்ச் குரல் இவற்றை எல்லாம் கவனிக்கத் தவறி விட்டோம்.
90ஸ் கிட்ஸ்களின் மனதில் இன்றும் பேசும் அந்த வேட்கை மீதமிருக்கிறது. கிடைக்கும் போது மணிக்கணக்கில் யாரிடமாவது பேசிக் கொள்கிறார்கள். ஆனால் வயோதிகர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். அவர்கள் இந்த தலைமுறையோடு பேசினால் கிரிஞ்ச் என்று விமர்சனம் வைக்கிறார்கள். சரி அவர்களது வயது ஒத்தவர்களோடு பேச கிராமத்தில் ஆள் கிடைப்பார்கள் நகரத்தில்? அவர்களும் போனில் தான் மூழ்கி கிடக்கிறார்கள்.
ஆண்ட்ராய்டு போன்கள் என்ன தான் டெக்னாலஜியை கையில் தந்தாலும் மனித மனங்களை வெகு தூரமாக்கிவிட்டது. இதன் தாக்கத்தால் பேசுவது மறந்து சண்டையிடுவது வாடிக்கையாக மாறி வருகிறது.
No comments:
Post a Comment