Sunday, 16 February 2025

6ம் வகுப்பு டி பிரிவு

ஆறாம் வகுப்பிற்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு என்றால் ஐந்தாம் வகுப்பு வரை நான் எங்கள் கிராமத்து பள்ளிகளில் (மூன்றாம் வகுப்பு வரை - செழியநல்லூர், 4& 5 - கீழப்பிள்ளையார்குளம்) படித்தேன். ஆறாம் வகுப்பிற்கு பாளையங்கோட்டை நகருக்கு வந்தேன். பாளையங்கோட்டை என்பது பள்ளிகளின் கோட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிறைய பள்ளிகள் நிறைந்த இடம்.

என்னை சேவியர் பள்ளியில் சேர்ப்பதாக தான் பேச்சு. ஆனால் சேவியர் பள்ளியில் ஏப்ரல் மாதமே சேர்க்கை முடிந்ததால் அடுத்த தேர்வாக ஜான்ஸ் பள்ளி வந்தது. மே 15ம் தேதி டோக்கன் கொடுப்பதாக சொன்னார்கள்.

மே 18ம் தேதி டோக்கன் கொடுத்தார்கள், அதற்குப் பிறகு நுழைவுத் தேர்வு ஆங்கிலம் மற்றும் கணக்கில். ஆங்கிலத் தேர்வில் முதல் கேள்வி வாட் இஸ் யுவர் நேம் - மை நேம் இஸ் பழனி செல்வகுமார் என்று எழுதினேன். அடுத்த கேள்வி வாட் இஸ் யுவர் நேட்டிவ் ப்ளேஸ். - கீழப்பிள்ளையார்குளம் என்று எழுதினேன். அடுத்தடுத்த எட்டு கேள்விகளுக்கும் இதை பதிலை எழுதினேன்.

நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பள்ளியில் நுழைந்தேன். பின்னணியில் மாமாவின் உழைப்பு. அட்மிஷன் முடிந்து விடுதியில் சேர்க்க விடுதியில் வாசல் வரை சென்ற பிறகு அங்கு வார்டன் இல்லை. பெரியம்மா, எங்க வீட்டில் இருந்து ஸ்கூலுக்கு போகட்டும் என்று கேட்டாங்க.

எனக்கு ஓர் இரவு முழுக்க யோசிக்க வீட்டில் டைம் கொடுத்தார்கள். நான் நன்றாக தூங்கி விட்டு பெரியம்மா (சற்றே தூரத்து சொந்தம்) வீட்டில் இருந்து போறேன் என்றேன். அதுவே முடிவானது. ஜூன் 3ம் தேதி ஸ்கூல் தொடங்கியது. முதல் நாள் சுரேஷ் அண்ணன் தான் ஸ்கூலில் கொண்டு போய் விட்டாங்க. 6ஆம் டி பிரிவு தான் எனது வகுப்பு. வெஸ்டர்ன் பிளாக்கில் மாடியில் கடைசியாக இருந்த வகுப்பு தான் டி செக்சன்.

நேரம் தவறாமை ரயில்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் என்று கரும்பலகையில் பெரிதாக எழுதி இருந்தார்கள். முதல் நாள் மதியம் வரை தான் பள்ளி இயங்கும் என்று சொல்லி இருந்தார்கள். மதியம் உணவு இடைவேளையின் போது நல்ல மழை, நான் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டேன். மழை தண்ணியில் டிபன் பாக்ஸ் கழுவிவிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன். என்னை கூப்பிட வீட்டை விட்டு கிளம்பிய சுரேஷ் அண்ணனுக்கு நான் வீட்டை கண்டுபிடித்து வந்தது ஆச்சர்யம்.

இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு முதல் வகுப்பு அறிவியல். மலையப்பன் சார் வந்தார். நேத்து மத்தியானமே ஓடியது யார் என்று விசாரித்தார், என் பக்கத்தில் இருந்த பேச்சி முத்து இவன் இவன் என்று என்னை கோர்த்து விட்டான். திட்டினார். பிறகு நான் தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்ததற்கு திட்டினார். எனக்கு ஏன்னு தெரியல. பேச்சி முத்து தான் சொன்னான், வாத்தியார் பாடம் நடத்தும் போது தண்ணி குடிப்பது மரியாதை குறைவு என்று.

அதற்குப் பிறகு எங்கள் வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேல் வந்த பிறகு உயர அடிப்படையில் உட்கார வைத்தார். எனக்கு கிரவுண்ட் பக்கம் கடைசிக்கு முந்தைய பெஞ்சில் இடம் கிடைத்தது. எனக்கு பக்கத்தில் பரமசிவனும் சீனிவாசனும். பிரின்ஸ்ம் எங்க பெஞ்ச் தான்.

எங்களுக்கு முந்தைய பெஞ்சில் முதல் ரேங்க் எடுக்கும் அய்யம் பெருமாள் இருந்தான். அபுபக்கர் சித்திக்கும் அதே பெஞ்ச் தான். எங்களுக்கு பின் பெஞ்சில் ஐயன்ராஜ், ராஜேஸ்வரன். எனக்கு பரமசிவனை பார்த்தால் சற்றே பயம், அவன் ஆறாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்ததால். பழக இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. இன்று அவன் உயிரோடு இல்லை என்பது நம்ப முடியவில்லை. நல்ல நண்பன், இளம்வயது மாரடைப்பு.

அதே போல் பாபுவை பார்த்தாலும் பயம். அவன் அதை பயன்படுத்தி என்னை மிரட்டுவான். விடுதி மாணவர்களில் கோமதி நாயகம் வீட்டுக்கு போகனும்னு அழுது கொண்டே இருப்பான். தமிழன் வகுப்பு நடக்கும் போது தூங்கி மாட்டிக் கொள்வான். நாக்கில் முட்டை விட்டு திரியும் செந்தில்நாதன் தூங்குவான், மாட்ட மாட்டான்.

ஜான் எட்வர்ஸ் கீ செயினை டவுசர் லூப்பில் மாட்டி சாவியை டவுசர் பாக்கெட்டில் போட்டிருப்பான். மகாலிங்கம், பால விநாயகம், ஆறுமுக குமார், குமார், மணிகண்டன், ராஜா, ரமேஷ், ஆலன் ஜெபக்குமார் ஆகியோர் நினைவில் நிற்கும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்.

நான் வராண்டாவில் உட்கார்ந்து தனியாக தான் சாப்பிடுவேன். ஹரி ஹர சுதன், அருண்குமார் ரெண்டு பேரும் என்னை சேர்ந்து உட்கார கூப்பிட்டு சேர்த்து கொண்டார்கள். எப்போதாவது உணவை பரிமாறி கொள்வோம். அவர்கள் இருவரும் டிபன் பாக்ஸ் கழுவ மாட்டார்கள். பரமசிவனிடம் கேட்டு டேப் எங்கே இருக்கிறது என தெரிந்து கழுவி கொண்டேன். அதுவரை வாட்டர் பாட்டில் தண்ணியில் கழுவினேன்.

ஆறாம் வகுப்பு வாத்தியார் என்றால் செல்வின் சார் தமிழாசிரியர் வந்தாலே சிகரெட் வாடை தூக்கும். வகுப்பாசிரியர் ஞானராஜ் சாமுவேலும் புகைப்படிப்பார். அறிவியல் ஆசிரியர் மலையப்பன் சார் பெரிய பை கொண்டு வருவார். ஆறாம் வகுப்பிற்கே பத்தாம் வகுப்பு போல கடுமையாக படிக்க சொல்வார். பாலசிங் சார் சமூக அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே அவருக்கு குரல் மாறும்.

வி.ஈ வகுப்பிற்கு ஒரு பிடி சார் வந்து பைபிள் கதைகள் சொல்வார். எல்.ஓ.ஈ வகுப்பிற்கு வரும் செல்வராஜ் சார் ஓரமாக உட்கார்ந்து விடுவார். ஏல பேசாதே என்று எப்போதாவது சத்தம் போடுவார். எங்கள் பள்ளியில் வேட்டி கட்டி வரும் ஒரே ஆசிரியர் அவர் தான்.  கிராஃப்ட் சார் அதிசய ராஜ் அழகாக கதை சொல்வார். ஏதாவது கைவினை பொருள்கள் செய்ய சொல்லி தருவார்.

டிராயிங் சார் பிரின்ஸ், அவரை பார்த்தாலே எனக்கு பயம். வியாழக்கிழமை ஐந்தாவது பிரியட் டிராயிங். படம் வரைய சொல்லி திருத்தி டார்ச்சர் செய்வார். ஆண்டு முழுக்க ஒரு மாம்பழம் மட்டுமே வரைய சொல்லி தந்தார். அட்டென்ஸ் எடுக்கும் போது பெயரை பெண் பெயராக வாசித்து கிரிஞ்ச் பண்ணி சிரிப்பார். நாங்களும் அதை முரட்டு காமெடியாக நினைத்து சிரிப்போம். 

ஆறாம் வகுப்பில் முதல் மிட் டெர்ம் தேர்வில் நான் நான்காவது ரேங்க். தேர்வு முடிந்த பிறகு தான் தெரியும். ஆங்கில தேர்வில் டிரான்லேசனுக்கு தமிழில் எழுத வேண்டும் என்பது. ஆனாலும் நாலாவது ரேங்க்கை இறுக பிடித்துக் கொண்டேன். ஒருமுறை ஆறாவது ரேங்க்கை தொட்டு பார்த்தேன்.

காக்கி டவுசர் போட்டு அந்த வெஸ்டர்ன் ப்ளாக்கில் பயத்துடனே நுழைந்து வந்த நாட்கள் பசுமையாக மனதில் உள்ளது.


1 comment:

  1. ஆசிரியரே அப்படியே பாளையங்கோட்டை பள்ளிக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துட்டிங்க அருமை ❤️❤️❤️❤️

    ReplyDelete