ஒரு மொழியைப் பொறுத்தவரை சூழல் தான் கற்றுக்கொள்ள வைக்கிறது. சென்னை சூழலில் இருப்பவன் த்தா என்பதும், நெல்லை சூழலில் இருப்பவன் ஏல என்பதும் அந்தச் சூழலில் கற்றுக் கொள்வது தானே.
ஆந்திராவில் வேலை செய்ய போனால் தெலுங்கு கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொண்டால் சூழலை சமாளிப்பது எளிது. அதற்க்காக பள்ளிக்கூடத்தில் தெலுங்கு கற்று தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே தான் ஹிந்திக்கும். ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. ஹிந்தி பேசும் மாநிலங்கள் அதிகம் என்பது மட்டுமே உண்மை, அதனால் தேசிய மொழியாகி விடாது.
இருமொழி என்றால் தமிழ்+ ஆங்கிலம் அல்லது ஆங்கிலம்+ இன்னொரு மொழியும் இருக்கலாம். தமிழ் + ஆங்கிலம் இதை எடுத்துக் கொள்வோம். இதில் ஆங்கிலம் எப்படி பயிற்றுவிக்கப்படுகிறது என்பது தான் பிரச்சினை.
எனக்கு பத்தாம் வகுப்பில் தமிழாசிரியர் கற்றுத் தந்த சீர் பிரித்து எழுதுதல் இன்றும் என்னால் செய்ய முடியும். ஆனால் ஆங்கிலத்தில் உள்ள direct speech --> indirect speech இன்றளவிலும் சரியாக தெரியாது. (எதற்கு தெரிய வேண்டும் ஏஐ தொழில் நுட்பம் இருக்கே.)
இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் எனது பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் பட்டப் மேற்படிப்பு தமிழ் மொழி பாடத்தில் கற்றவர். ஆங்கில ஆசிரியர் பட்ட மேற்படிப்பு கணித பாடத்திற்கு படித்தவர். இதுதான் வித்தியாசம்.
பரியேறும் பெருமாள் படத்தில் காட்டி இருப்பார். ஆங்கிலத்தில் இரண்டாவது முயற்சியில் காப்பி அடித்து ஏதேதோ செய்து கதாநாயகன் சட்டக்கல்லூரியில் நுழைவார் என்று. இது கிராமப்புற மாணவர்களின் நிலை என்று எண்ண வேண்டாம். நகர்ப்புற மாணவர்கள் நிலையும் இது தான்.
11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் develop the hints என்று ஒன்று. காகம் - பாட்டி - நாய் - வடை - நரி என்று குறிப்பு இருக்கும். பாட்டி வடை சுட்ட கதையை எழுத வேண்டும். அதற்கு நாங்கள் என்ன செய்வோம் என்றால் முதலில் ரஃப் காப்பி என்று எழுதி அதை அடித்து விட்டு பேர் காப்பி என்று ஒன்று எழுதுவோம்.
பேர் காப்பியின் வடிவம் காகம் of the பாட்டி for the நாய் was the வடை on their நரி என்று. ஆங்கில ஆசிரியர் இதை படித்து பார்ப்பது இல்லை. அடுத்த பக்கத்தில் ஆலிவர் டுவிஸ்ட் எஸ்ஸேவை அச்சு பிரளாமல் எழுதி இருப்போம் (மனப்பாடம் செய்து).
11வது மற்றும் 12வது மொழி பாடத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. மொழிப்பாடம் ஏட்டுச் சுரைக்காய். கணிதமும், இயற்பியலும், வேதியியலும், உயிரியலும் தான் மருத்துவம், பொறியியல் கல்லூரி நுழைவு தேர்வுக்கு உதவும். மொழிப் பாடத்தை வைத்து என்ன செய்ய?
எங்கள் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது தமிழ் பாடத்தில் பாட்டையா என்ற சிறுகதை உண்டு. அதற்கு "பாட்டையா" U Dts " இன்று முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது என்று எழுதும் மாணவர்கள் உண்டு. தமிழாசிரியர் அதை கண்டு கொள்வதும் இல்லை.
இங்கு முன்வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் போய் சிரமப்படுகிறார்கள். சிரமம் என்பது உண்மை தான். அதே சமயம் ஆங்கில வழியில் பயின்றவர்கள் புலமையோடு வருகிறார்கள் என்பது உண்மை அல்ல.
O2 என்றால் ஆக்ஸிஜன் என்பது தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு தெரியும். ஆனால் ஆக்ஸிஜனுக்கு ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் தெரியாது என்பது மட்டுமே பிரச்சினை. பிதாகரஸ் தியரம் (தமிழில் தேற்றம்) பெரும்பாலான கணித ஆசிரியர்கள் விளக்கி சொல்வது இல்லை. அவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய அழுத்தம். கல்லூரி செல்லும் போது தமிழ் வழி மாணவர்கள் அடுத்த பக்கம், எதிர் பக்கத்தை எளிதாக எதிர் கொண்டு விடுவார்கள். அந்த கர்ணம் தான் பிரச்சினை.
மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை முக்கிய பிரச்சினைகள் பாடத்திட்டம், அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பயிற்றுவிக்கும் ஆசிரியர் தகுதி என்பவை. இது தான் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான விசயம்.
No comments:
Post a Comment