திருநெல்வேலி நகரில் முக்கிய இடம் சந்திப்பு பேருந்து நிலையம். திருநெல்வேலி காரர்களுக்கு ஜங்ஷன். ஜங்ஷன் என்பது பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே இருக்கும் இடம். அது போக நிறைய புத்தகக் கடைகள், சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி லாலா கடை, இளங்கோ, ருசி புரோட்டா கடை, சாமானியர்களுக்கான பாரதி, வசந்த பவன், அசோகா ஓட்டல்கள். உயர்தர பரணி, ஜானகிராம், ஆர்யாஸ் ஓட்டல்கள், பாரதி, செயின்ட் மேரிஸ் மெடிக்கல்கள் என சகலமும் நிறைந்த இடம். இது ஒரு காலத்தில்.
பேருந்து நிலையத்தை இடித்து மறு கட்டமைப்பு செய்ய போகிறார்கள் என்றதும் மக்கள் நினைத்தது ஆறு மாதத்தில் முடித்து விடுவார்கள் என்று. தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் பொருட்காட்சி திடல் மற்றும் வண்ணார்பேட்டையில் உதயமானது. அதிக பேருந்துகளை கையாண்ட வண்ணார்பேட்டையில் கழிவறை வசதி இல்லை.
பெரிய கஷ்டத்திற்கு உள்ளானது தச்சநல்லூர், தாழையூத்து செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் மக்கள். மாலையில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த பேருந்துகளை நிறுத்த வேண்டி இருந்ததால் ஆம்னி பஸ்களின் அராஜகம் அதிகமாக இருந்தது.
சரி பேருந்து நிலைய கட்டிடத்திற்கு வருவோம். புதிய கட்டிடத்திற்கு தோண்டிய போது அள்ள அள்ள ஆற்று மணல் மற்றும் கனிமங்கள். கட்சி பாராது அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி அள்ளினார்கள் பணத்தை. ஆறு ஆண்டுகளுக்கு பிறகே பேருந்து நிலையம் தயாரானது, பொறியியல் கல்லூரிகளுக்கு உரித்தான கட்டட அமைப்புடன். நிறைய கடைகள், குறைவாக பேருந்து நிறுத்தும் இடம் என்ற அடிப்படையில்.
மக்களே ஜங்ஷனை பயன்படுத்த மறந்த பிறகு ஜங்ஷன் பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் பாளையங்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்த இட வசதி இருந்தாலும், மானூர், தாழையூத்து, பேட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தி செல்ல போதுமான இடவசதி இல்லை. ஆனாலும் சில சேரன்மகாதேவி பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையமான வண்ணார்பேட்டை வரை செல்கின்றன.
பாளையங்கோட்டையில் ஒரு பேருந்து நிலையம் இருந்தது. பேருந்து நிறுத்தம் போல செயல்படும் இந்த நிலையத்தில் ஆற்றுமணல் இல்லை என்றாலும் வேறு ஏதாவது கிடைக்கும் என்று அரசும் அந்தப் பேருந்து நிலையத்தை உடைத்தது.
பொதுவாக அதிக பேருந்துகள் இயக்கப்படும் இடம் அரசு மருத்துவமனைக்கு. அதில் மார்க்கெட் வழி, பாளை பஸ் ஸ்டான்ட் வழி என பேருந்துகள் செல்லும். பாளை பஸ் ஸ்டான்டை உடைத்ததும் அனைத்து பேருந்துகளும் மார்க்கெட் வழி இயக்கப்பட்டன. சவேரியார் கல்லூரிக்கு பேருந்தே இல்லை என்ற நிலை. பாளை பேருந்து நிலையம் திறக்கப்பட்டது, ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகள் நிற்கும் வசதி கொண்ட பேருந்து நிலையம், ஒரே ஒரு பேருந்து நிற்கும் வசதியுடன், புதுப்பொலிவுடன்.
ஆனாலும் அரசு மருத்துவமனைக்கு பாளை பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் மாற்றப்படவில்லை. யாரும் கண்டுகொள்ளவுமில்லை. தனியார் பேருந்துகளுக்கு சமாதானபுரம் ஒரு முக்கிய நிறுத்தம், தூத்துக்குடி, திருச்செந்தூர் பேருந்துகளில் வருபவர்கள் நகரத்துக்குள் செல்ல சமாதானபுரம் முக்கிய இடம். அதனால் அவர்கள் பாளை பஸ் ஸ்டான்ட் வழிக்கு மாறவே இல்லை.
தனியார் பேருந்துகள் இன்னொரு மாற்றமும் செய்துள்ளனர். அது என்னவென்றால் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 10 ரூபாய், யாராவது விளக்கம் கேட்டால் 8 ரூபாய். அரசு நிர்ணயித்த 6 ரூபாய் கட்டணம் கிடையாது.
அரசு போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா? ஜங்ஷன் பேருந்து நிலையம் இயங்கவில்லை என்றதும் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள் மட்டுமே. பாளை பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள்.
நிறைய கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் காலியாக சென்றன. இதில் மகளிர் இலவசமும் சேர்ந்ததில் திக்குமுக்காடியது போக்குவரத்து கழகம். புதிதாக ஒரு வியூகம் செய்தது. அனைத்து பேருந்துகளின் தடம் எண்ணும் மாற்றப்பட்டது (2-o, 1-i போன்ற தடம் எண்கள் யார் சிந்தனையில் உதயமானது என்று தெரியவில்லை). டிஜிட்டல் பெயர் பலகை வந்தது. ஒரு பேருந்து ஒருமுறை ஒரு கிராமத்திற்கு சென்று வந்த பின் வேறு இடத்திற்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டது. கிராமங்களுக்கு வேறு வேறு பேருந்துகள் செல்லும் எத்தனை முறை என்பதில் தான் டுவிஸ்ட். 5 முறை இருந்த பேருந்துகள் 3-4 என்று ஆனது.
இதில் முக்கியப் பிரச்சினை எல்லா பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டனர். ஸ்டிக்கர் வேறு பெயர் பலகை வேறு என்பதில் பெரும் குழப்பம். நெல்லை சந்திப்பு - முத்தாலங்குறிச்சி என்று ஸ்டிக்கர் இருக்கும் பேருந்து எஸ்டிசி கல்லூரி செல்லும்.
நகரும் எழுத்துகள் இருப்பதால் குறுகிய நேரத்தில் பெயர்ப்பலகையை படிப்பது சிரமம். மகளிர்க்கு பிரச்சினை இல்லை அடுத்த நிறுத்தி இறங்கி கொள்ளலாம். இலவச பேருந்து தானே. ஆண்கள் நிலைமை பாவம்.
திருநெல்வேலி நகரில் முக்கிய இடமாக இருந்த ஜங்ஷனும், பாளை பஸ் ஸ்டான்ட்டும் போய் முக்கிய இடமாக வண்ணார்பேட்டையும், சமாதானபுரமும் மாறிவிட்டது.
இருசக்கர நான்கு சக்கர வாகன பெருக்கத்தால் பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. அதற்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வியூகத்தை மாற்றியுளனர்.
No comments:
Post a Comment