பூங்கொடி சிரிப்பில் காதலில் விழுந்த கசமாடன், அவள் தேடி வந்து தந்த புன்னகையில் காதலில் புதைந்தே விட்டான். அவள் பின்னால் அலைய ஆரம்பித்தான். அவளையும் காதல் கைப்பற்றிக் கொண்டது.
சிங்கப்பல் சித்தருக்கு தெரியாமல் இவர்களின் காதல் பித்தம் ஏறிக் கொண்டு இருந்தது ஏரிக்கரையில்.
ஒருநாள் கூடையில் ஏதோ ஒரு செடியை மறைத்து சென்றவள், கசமாடன் கூப்பிடுவது கூட கேட்காத மாதிரி சென்றுவிட்டாள். கசமாடன் மனமுடைந்து விட்டான். அவளை மீண்டும் சந்திக்கும் போது ஆர்வமாக விசாரித்தான்.
மருந்துக்கு செடி பறித்து செல்லும் போது எங்கேயும் நிற்கக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது, அதை மீறி தவறு நடந்தால் மருந்தின் பலம் முறிந்துவிடும் என்றாள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த வைத்தியத்தை வேறு யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பது தான் காரணம். பரம்பரை பரம்பரையாக தொடர வேண்டும் என்பது தான் இலக்கு என்றான் கசமாடன். நீ பேரனாக இருந்தால் உனக்கு சொல்லி இருப்பார் என்றான்.
இந்த விசயத்தை பூங்கொடியால் நம்ப முடியவில்லை. தாத்தாவைப் பற்றி தவறாக சொல்கிறான் என்றே நினைத்துக் கொண்டாள். காதலில் விரிசல் எதுவும் விழவில்லை.
சில வாரங்களில் பாறாங்கல் விழுந்தது. இவர்கள் காதல் விவகாரம் சிங்கப்பல் சித்தரின் காதுகளை எட்டியது.
சிங்கப்பல் சித்தர் நேரடியாக கசமாடனை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினார். இளைஞனான கசமாடனால் பூங்கொடியை பிரிந்து இருக்க முடியவில்லை. அவள் தாத்தா மிரட்டியதைப் பற்றி எதுவும் அவளிடம் சொல்லாமல் காதல் வளர்த்தான்.
சிங்கப்பல் சித்தரின் கோபம் உச்சமடைந்து, சதி வேலையில் இறங்கினார். கசமாடன் ஓடைக்காவலில் இருந்தான். அவனுடன் பணிபுரியும் ஒருவன் கொடுக்காபுளி கொண்டு வந்து கொடுத்தான்.
கொடுக்காபுளி என்றால் கசமாடனுக்கு ரொம்ப பிடிக்கும். சாப்பிட்ட சற்று நேரத்தில் கண்கள் விழித்த நிலையில் நினைவிழந்து போனான்.
சிங்கப்பல் சித்தர் செயலில் இறங்கினார். கொஞ்சம் இலைகளோடு நிறையப் புழுக்களை ஓடை நீரில் விட்டார். சல்லடையை தாண்டிப் போக செய்தார்.
குளிக்க வந்த மன்னருக்கு இலை மிதப்பது ஆச்சரியமாக பட்டாலும் குளத்தில் இறங்கினார். ஆனந்த குளியல் போட்டு நிமிரும் போது அவரது தோளில் ஒரு புழு ஏறியது. தண்ணீரில் தப்ப நினைந்த புழு மன்னரின் மூக்கின் மீது நின்றது.
உதறிவிட்டு படித்துறையில் ஏறிக் கத்தினார் மன்னர். நிறைய வீரர்கள் கூடினர், தளபதியும். நிலைமையை உணர்ந்த தளபதி, ஓடைக்காவலில் இருந்தவனை என்ன செய்ய மன்னா என்றார்.
மன்னர் ஏதாவது செய்து தொலை என்று கையை மட்டும் அசைத்து கோபமாக உள்ளே சென்றார்.
கசமாடனுக்கு நினைவு திரும்பிய போது தளபதியுடன் பத்து பதினைந்து வீரர்கள் அவன் முன்னே நின்றனர். என்ன நடந்தது என யோசிக்கும் முன், கசமாடன் தலை மட்டும் தரை தொட்டது.
சிறியதாக நின்ற மரக்கன்றில் ரத்தம் தெறித்தது. கசமாடன், மரணம் பூங்கொடியை பாதித்தது. பித்து பிடித்தவள் போல் இருந்தாள். கசமாடன் மரணத்திற்கு தான் தாத்தா காரணம் என்று தெரிந்து கொண்ட பூங்குழலி தாத்தாவைக் கொல்ல சாப்பாட்டில் நஞ்சு கலந்தாள்.
வாசனையில் தெரிந்து கொண்ட சிங்கப்பல் சித்தர், நீ வளர்ந்து விட்டாய், உனக்கு கல்யாணம் முடிக்க ஏற்பாடு செய்கிறேன் என சிரித்து கொண்டே கண்டித்தார்.
தாத்தாவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த பூங்கொடி நஞ்சை அவளே சாப்பிட்டு கசமாடன் ரத்தம் தெரிந்திருந்த மரக்கன்றின் பக்கத்தில் உயிரைக் துறந்தாள்.
No comments:
Post a Comment