Saturday, 10 August 2024

ககக -3

காலையிலே வெயில் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. கபில் சர்மா அலுவலகம் நோக்கி விரைந்து கொண்டு இருந்தார். கபில் சர்மா ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாட்டில் தான் பணி. சில பதவிகளுக்குப் பிறகு இப்போது கைத்தறி துறையில்.

கபில் சர்மா ஹரியானா மாவட்ட கிராமத்தில் பிறந்தவன். சின்ன வயதில் இருந்தே கிராமங்களை நேசிப்பவன். பள்ளி ஆசிரியர் தான் ஐஏஎஸ் படிப்பை பற்றி விளக்கி சொன்னார். அது முதலே ஐஏஎஸ் மேல் வேட்கை கபிலுக்கு.

களத்தில் நின்று வேலை செய்வது கபில் சர்மாவுக்கு பிடிக்கும். அதனால் எந்தத் துறையில் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் கபிலுக்கு பதவி வந்தது. ஐஏஎஸ் தேர்வானதும் விருப்ப மாநிலமாக கேட்ட தமிழ்நாட்டிலே போஸ்டிங்.

நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இருப்பதால் தமிழ் நன்றாக புரியும், பேசவும் தெரியும். ஆனால் சரளமாக பேசத் தெரியாது கபில் சர்மாவுக்கு. கபில் சர்மா தமிழ்நாட்டை தேர்வு செய்ய காரணம் அவரது நண்பர் பல்விந்தர் சிங். அவரும் ஐஏஎஸ் ஆபிசர் தான்.

கபிலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கல்லூரி காதல் நினைவுகள் இன்னும் மனதில் இருப்பதால் திருமணத்தில் விருப்பம் இல்லை.

கல்லூரி காலத்தில் எப்போது காதல் மலர்ந்தது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. எல்லா பெண்களிடமும் பேசுவது போல் தான் ரஞ்சிதாவிடமும் பேசினான் கபில்.

நாட்கள் செல்லச் செல்ல ரஞ்சிதாவிடம் மட்டும் நெருக்கம் கூடியது. மசாலா சாய் மற்றும் கச்சூரி இருவருக்குமே பிடிக்கும். ஃபனா படமும், ஏஆர் ரஹ்மான் இசையும் கூட. ஒரு மாலையில் மசாலா சாய் குடித்துக் கொண்டிருக்கும் போது தயக்கத்துடன் காதலை சொன்னான் கபில். ரஞ்சிதாவிடமும் காதல் இருந்தது. உடனே சம்மதம் சொல்ல இருவர் ஒருவராகினர்.

இருசக்கர வாகனத்தில் இலக்கில்லாமல் பயணிப்பது தான் அவர்களின் பொழுதுபோக்கு.

ரஞ்சிதாவுடன் இருசக்கர வாகனத்தில் மணாலி சென்றது மறக்க முடியாத நாட்கள் கபிலுக்கு. பானிபட்டில் இருந்து புறப்பட்டு நடுவில் ஓரிடத்தில் அறை எடுத்து தங்கி மீண்டும் காலையில் கிளம்பி மணாலி சென்றனர். இருவருக்கும் பயணம் இனிமையாக அமைந்தது.

அடுத்ததாக சிரபுஞ்சி செல்ல நினைத்த வேளையில் முதல் மன கசப்பு ஏற்பட்டது. அன்று தான் ரஞ்சிதாவின் வீட்டிற்கு வருவதாக சொன்னான் கபில். காலையில் இரு சக்கர வாகனத்தில் கிளம்பியும் விட்டான்.

நெடுஞ்சாலையில் ஒரு விபத்தை பார்த்தான். காயம்பட்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று ரத்தமும் கொடுத்தான். ஆனால் கபில் செய்த ஒரே பிழை, போன் செய்து ரஞ்சிதாவிடம் சொல்லாமல் விட்டது. காத்திருந்த ரஞ்சிதாவின் அப்பா கடுப்பாகி விட்டார்.

அடுத்த முறை ரஞ்சிதா வெளியூர் செல்லும் போது ரயில் நிலையத்திற்கு வருவதாக சொல்லி இருந்தான் கபில். ரஞ்சிதா ரயில் நிலையத்தில் காத்திருக்க, தண்ணீர் பிரச்சினை பேரணியில் இணைந்தவன் மறந்தே விட்டான். ரஞ்சிதா ரயில் மட்டும் ஏறவில்லை. மனதை விட்டே எறிந்து விட்டாள் கபிலை.

பழைய டைரியை புரட்டினார் கபில் சர்மா.

பிரியசகி,

தடதடத்து செல்லும் ரயிலில் 

பயணிக்கிறாய் !

என் மனம் வெடவெடத்து 

போய் இருக்கிறது !

தோழியாய் நீ அருகில் 

நின்றால் என் பிரச்சினைகள் 

விலகிவிடும் !

சமூக பிரச்சினைக்காக

நான் சென்ற நாளில்

நீயே என்னை விட்டு 

விலகி விட்டாய் !

என் மன தோட்டத்தில்

என்றும் வாடா மலர் நீ !!!

கனத்த இதயத்தோடு இருந்த கபிலுக்கு பேக்ஸ் வந்தது. பணி மாற்ற ஆணை. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக கபில் சர்மா நியமனம்.


No comments:

Post a Comment