Saturday, 3 August 2024

ககக -2

மத்தியானம் 3 மணிக்கே இருட்டிக் கொண்டு வந்தது. கோடை மழை கொட்டி தீர்க்குமே, அதற்குள் காய வைத்த துணிகளை எடுக்க வேண்டும் என நினைத்தவாறு நடையில் வேகத்தை கூட்டினான் கந்தமாறன்.

கிராமத்தை அடைவதற்குள் மழை ஆரம்பித்து விட்டது. மாமா மாயாண்டி துணிகளை நனைவதற்குள் எடுத்து குடிசையில் வைத்திருந்தார்.

கந்தமாறன் சலவைத் தொழிலாளி. அப்பாவிற்கு பிறகு பரம்பரை தொழிலாக அவனுடன் வருகிறது. அப்பாவின் மறைவிற்குப் பிறகு மாமா தான் அவனுக்கு ஒரே சொந்தம்.

பாளைய நல்லூர் அவனது கிராமம். செழிப்பான கிராமம். கிராமத்தில் ஒரே சலவைத் தொழிலாளி அவன் தான். பாளைய நல்லூரில் பெரிய ஏரி உண்டு. எப்போதும் தண்ணீர் இருக்கும். சலவைக்கு கார மண் கிடைக்கும். ஏரிக்கு பக்கத்தில் சிறிய சிறிய பாறைகள், அதில் வசதியாக துணிகளை காய வைத்து கொள்வான்.

ஏரிக்கு வடக்கே பரந்து விரிந்த இரண்டு மரங்கள் உண்டு. மரத்தடி ஓய்வு எடுக்க சிறப்பான இடம். ஒரு மரத்தில் கிழக்கு நோக்கி மாடன் இருப்பதாகவும் இன்னொரு மரத்தில் வடக்கு நோக்கி அம்மன் இருப்பதாகவும் சொல்வார்கள்.

ஊர்காரர்கள் யாராவது, எப்பவாவது வந்து சேவல் பலியிட்டு செல்வார்கள்.

கிராமத்தில் அவனுக்கு பெரிய வேலை கிடையாது. கல்யாணம், சடங்கு என்றால் சேலை துவைக்கும் வேலை வரும். 

இறப்பு சடங்குகளில் கந்தமாறனின் பங்கு முக்கியமானது. பழைய சேலைகளை கொண்டு சென்று சுற்றி வைப்பது. மலர் அலங்காரம் செய்வது என்பது அவனது வேலை.

நகரத்தில் இருப்பவர்கள் சலவைக்கு இவனிடம் தான் தருவார்கள். குறிப்பாக வெள்ளைக்காரர்கள், வெள்ளைக்காரர்களிடம் வேலை பார்ப்பவர்கள். அதற்காக 20 மைல் நடந்து சென்று துணி வாங்கி வந்து துவைத்து, வெள்ளாவியில் வைத்து வெளுத்து கொடுப்பான்.

கந்தமாறனுக்கு சலவைத் தொழில் பகுதி நேர தொழில் என்றே சொல்லலாம். அவன் முழுமூச்சாக ஈடுபடுவது சுதந்திர போரட்டத்தில். படிக்க தெரியாது. பத்திரிகைகளை யாரையாவது வாசிக்க சொல்லி கேட்டுக் கொள்வான்.

வெள்ளைகாரர்களுக்கு துணி துவைத்து கொடுத்தாலும் வெள்ளைக்காரர்களை பிடிக்காது. ஆனால் அவர்களுக்கு இவனை பிடித்து இருந்தது. காரணம் அவன் தொழில் நேர்த்தி. வெள்ளைக்காரர்கள் தரும் பணத்தை நகரத்து செட்டியாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளான்.

சுதந்திர போராட்ட கூட்டம், நாடகம் என எங்கு நடந்தாலும் சென்று விடுவான். எங்கு நடக்கிறது என்ற அறிவிப்பை ஊர் ஊராக கொண்டு செல்பவனே கந்தமாறன் தான். தடை செய்யப்பட்ட பத்திரிகைகளை கூட எல்லா ஊர்களுக்கு கொண்டு சேர்ப்பவன்.

மாயாண்டிக்கு, கந்தமாறனை மிகவும் பிடிக்கும். அவனது தொழில் நேர்த்தி, உழைப்பு எல்லாம் அவருக்கு பிடிக்கும். சுதந்திர போராட்ட செயல்கள் மட்டுமே அவருக்கு பிடிக்காது. அவரது மகளை கந்தமாறனுக்கு மணமுடிக்க தடையாக இருப்பதும் அது தான்.

வெளுத்த துணிகளை எடுத்துக் கொண்டு டவுனுக்கு சென்றான். வெள்ளையர்கள் மாளிகையில் அவர்களது துணிகளை ஒப்படைத்தான். அப்போது ஒரு வெள்ளையன், வேலைகாரனிடம் கந்தமாறனை சாப்பிடுகிறானா என கேட்க சொன்னான். 

கந்தமாறனும் காலையில் சாப்பிடவில்லை ஓரமாக உட்கார்ந்தான். இட்லியா ரொட்டியா எனக் கேட்டார்கள். இட்லி என்றான். இட்லி சாப்பிட தந்தார்கள். சாப்பிடும் போது தூரத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த வெள்ளையனை பார்த்து மனதுக்குள் சொல்லி கொண்டான். உங்களை எல்லாம் நாட்டை விட்டு துரத்தி சுதந்திர காற்றை சுவாசிப்போம் என.

அழுக்கு துணிகளை வாங்கி கிளம்பினான். செட்டியாரை போய் பார்த்தேன். அவன் கொடுத்து வைத்த காசில் இரண்டு தங்க வளையல்கள் தயாரித்து இருப்பதாக சொன்னார். இன்னொரு நாள் வாங்கி கொள்வதாக சொன்னான்.

அடுத்ததாக கந்தமாறன் சென்றது, கிருஷ்ணமூர்த்தியை பார்க்க. கிருஷ்ணமூர்த்தி 40 வயதை தாண்டிய சுதந்திர போராட்டக்காரர். கந்தமாறன் போன்ற இளைஞர்களை திரட்டுபவர். மதுரையில் சுதேசி கப்பல் விடுவதற்கு வ.உ.சி நிதி திரட்டும் கூட்டம் நடத்துவதாக சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. அதற்கான நோட்டீஸ்களை கொடுத்து விநியோகிக்க சொன்னார். அதை வாங்கி கொண்டான் கந்தமாறன்.

மதிய வேளையில் இந்திய அதிகாரி ஒருவர் வீட்டிற்கு துணி எடுக்க சென்றான். அதிகாரி மனைவி சாப்பிட கூப்பிட்டாள். புறக்கடையில் உட்கார சொல்லி பிஞ்ச இலையில் பழைய சோறை கொட்டினாள். புளித்தது, கந்தமாறனுக்கு புதியது அல்ல.

செட்டியாரிடம் வளையலை வாங்கினான். மஞ்சள் பையில் வைத்து கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தியிடம் வளையலை கொடுத்து சுதேசி இயக்கத்திற்கு எனது பங்கு என்றான். நான் வைத்திருக்கிறேன். நீ மதுரை கூட்டத்திற்கு வந்து தலைவரிடம் கொடு என்றார் கிருஷ்ணமூர்த்தி. திருநெல்வேலியில் இருந்து பலரும் மதுரைக்கு ரயிலில் செல்வோம் என்றார். தலையசைத்து கிளம்பினான்.

மதுரை கூட்ட மேடையில், நிகழ்ச்சி தலைவர் ஒரு கையில் கந்த மாறனையும் இன்னொரு கையில் தங்க வளையலை தூக்கி காட்டினார். மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது கந்தமாறனுக்கு.

மதுரையில் இருந்து வந்தவன் மாமாவை பார்க்க சென்றான். மாமா மகளிடம் சொன்னான் உனக்கு வாங்கிய வளையலை சுதந்திர போரட்டத்திற்கு கொடுத்து விட்டேன் என்று.

அவளும் புன்முறுவல் பூத்தாள். நீ தாம்மா இவனை கல்யாணம் பண்ணி திருத்தனும் என்றார் மாயாண்டி. மாமா, கூடிய விரைவில் சுதந்திர நாடு என்றான் கந்தமாறன்.


No comments:

Post a Comment