Tuesday, 30 July 2024

ககக -1

சூரியன் மேற்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய கருக்கல் பொழுது ஆரம்பிக்க தொடங்கியது. கசமாடன் சுளுக்கிய காலை தூக்கி தூக்கி வைத்து வைத்தியர் சிங்கப்பல் சித்தர் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். 

பொழுது சாய தன் ஆட்டுக்குட்டிகளுடன் வீடு திரும்புவார் சிங்கப்பல் சித்தர். காலை முதல் கோட்டைக் காவலில் இருந்தான் கசமாடன். அவசரமாக அமைச்சர் அழைக்க, படிகளில் ஓடியவனின் கால் இடறி சுளுக்கி கொண்டது. வலியுடன் பணியை முடித்து வீடு வந்து விட்டான்.

சிங்கப்பல் சித்தர் தனது குடிசையின் திண்ணையில் அமர்ந்திருந்தார். விந்தி விந்தி நடந்து வந்தவனை விளக்கொளியில் அமரச் சொன்னார் சித்தர்.

தற்போதைய மன்னர், இளவரசர் பட்டம் சூடும் முன் நடந்த சம்பவம். அரசவை சோதிடர் மன்னர் சிங்கப்பல் வைத்த தாயத்து கட்டினால் நல்லது என்றார். ஆனால் மன்னர் வேட்டையில் விருப்பம் இல்லாதவர், குறுநில மன்னர் என்பதால் சிங்கத்திற்கு அடுத்த நாட்டிற்கு செல்ல வேண்டி வரும். 

சிங்கப்பல் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பு பரிசு என்று அறிவித்தார் மன்னர். பலரும் பலவிதமாக யோசித்தனர். சித்தனின் தந்தை சித்தனுக்கு வியூகம் சொல்லி கொடுத்தார். சிங்கம் கூட்டமாக வாழும் மிருகம். உயிரோடு பிடிப்பது வேட்டையாடுவது சிரமம். சிங்கங்கள் சாப்பிட்டு போடும் கறியை சாப்பிட நரிகளும் அதே பகுதியில் நடமாடும்.

முதலில் சிங்கம் நீர் அருந்தும் தடாகத்தை தேர்வு செய்தனர். நரிகளுக்கு பச்சிலை மூலம் மயக்க மருத்து தயார் செய்தனர். தடாகத்தில் சிங்கங்களை மயக்கும் மருந்துகளை கலந்து சிங்கத்தை மயக்கமுற செய்து பல்லை பிடிங்கி கொண்டு வந்தான் சித்தன். அன்று முதல் சிங்கப்பல் சித்தனாகி, வயதின் காரணத்தால் சிங்கப்பல் சித்தரானார். 

அரண்மனை வைத்தியர் பதவி வழங்கப்பட்டது. மகன் மற்றும் மருமகள் சாவிற்கு பின் பேத்தியோடு வாழ்ந்து வருகிறார். அரண்மனை வைத்தியர் பதவியை துறந்துவிட்டார். எல்லா சித்து வேலைகளும் சித்தனுக்கு தெரியும்.

விளக்கெண்ணெய் எடுத்து வருமாறு உள்ளே குரல் கொடுத்தார் சித்தர். கசமாடன் நடந்த சம்பவத்தை விளக்கினான். அரச வேலை பார்ப்பவர் கவனமுடன் வேலை பார்க்க வேண்டும் என கடிந்து கொண்டார் சித்தர்.

எண்ணெய் கொண்டு வந்த அந்த முகம் விளக்கொளியில் ஒளி வீசியது. சித்தருக்கு பேத்தி இருப்பது தெரியும். ஆனால் இவ்வளவு அழகாக இருக்கும் பேத்தி என்று இன்று தான் தெரியும் கசமாடனுக்கு.

அவர் எண்ணெய் மற்றும் ஏதோ பச்சிலையை கையால் நசுக்கி நீவி விட வலியால் 'ஆ' 'ஊ" என கத்தினான். அதைப் பார்த்து சிரித்துக் கொண்டாள் சிங்கப்பல் சித்தரின் பேத்தி பூங்கொடி.

இரண்டு நாளைக்கு ஓடைக் காவல் வாங்கிக்கோ. உப்பு, புளி சேர்க்காதே என்று ஆலோசனை கூறினார் சித்தர்.

அரச வேலையில் ஆறுநாள் பணி, ஒரு நாள் விடுப்பு. அமாவாசை முதல் பௌர்ணமி வரை இரவுப் பணி. பிறகு பகலில் பணி என மாறி மாறி வரும். இரவுப் பணி என்றால் கோட்டை காவல் மற்றும் தீப்பந்த பராமரிப்பு மட்டுமே.

பகல் பணி என்றால் இரு நாட்கள் கோட்டை பணி, இரு நாட்கள் ஓடைகள் காவல், இரு நாட்கள் சத்திரங்களுக்கு தானியம் கொண்டு செல்லுதல்.

கோட்டை காவல் என்றால் கிட்டத்தட்ட 4 மைல் கொண்ட கோட்டை மதில் சுவரில் எட்டு பேர் செய்யும் வேலை. ஒரு மைல் நடந்தால் வரும் கூடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். அடுத்தவர் நடக்க வேண்டும். ஒரு நேரத்தில் நான்கு பேர் உட்கார்ந்து நான்கு பேர் நடந்து கொண்டிருக்கும் வேலை. இரவில் பந்தத்தையும் தூக்கி செல்ல வேண்டும்.

ஓடைகள் காவல் என்பது ஏரியில் இருந்து ஓடையில் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும். அந்த ஓடையில் இருந்து அரச குடும்பத்தினர் குளிக்க தனி வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அந்தத் தண்ணீரில் பூச்சிகள், இலை தழைகள் விழாமல் பார்த்து கொள்ள வேண்டும். சல்லடைகள் இருப்பதால் இலை, தழைகள் வர வாய்ப்பு இல்லை. பணி நேரமும் சில நாழிகைகள் தான். கவனமுடன் செய்தால் போதும் எளிதான பணி.

தானியங்கள் கொண்டு செல்ல, ஒரு வண்டிக்காரர், ஒரு பணியாள் மட்டுமே உண்டு. மேட்டில் ஏறும் போது பணியாளும் சேர்ந்து தள்ள வேண்டும். சத்திரங்களில் தானியங்களை இறக்கி வைக்கும் பொறுப்பும் பணியாள் வசம் தான். சற்று சிரமமான வேலை இது தான்.

மறுநாள் ஓடைக் காவல் பணிக்கு வந்தான் கசமாடன். கையில் கூடையுடன் வந்த பூங்கொடி அவனது கால் வலியை பற்றி விசாரித்து விட்டு புன்னகையை பரிசளித்து போனாள்.



No comments:

Post a Comment