சிறு வயதில் முத்தக்கா ராணியில் வந்த சிறுவர் தொடர்கதையான புதையல் வேட்டையை வாசித்து காட்டுவாள். அதில் வரும் சின்ன ஓவியம் கதையை காட்சியாக விரிக்கும். அதற்கு பிறகு நானே ராணியை வாசிக்க துவங்கினேன்.
காலில் அடிபட்டு மருத்துவமனையில் நாலு நாட்கள் இருந்த போது ராணியை வாசித்ததை பார்த்து ஜெயா டீச்சர் வாசிக்க தந்தது மீராபாய் பற்றிய புத்தகம்.
அதற்கு பிறகு ஆனந்த விகடன், குமுதம், ராணிமுத்து, மாலைமதி என எது கிடைத்தாலும் வாசித்தேன். ராணி காமிக்ஸ் தான் வாசிக்க தூண்டும். பாண்டி, முருகன், கார்த்தி அண்ணன் என யாராவது கொண்டு வருவார்கள். யார் வாங்குவார்கள் என்பது தெரியாது. ஒருமுறை பாலமித்ரா கிடைத்தது, வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம் அதில் இருந்த தொடர்கதையை கூட வாசித்தோம்.
ஆறாம் வகுப்புக்கு பாளையங்கோட்டை வந்த பின் அங்கு சுரேஷ் அண்ணன் வாங்கும் இந்தியா டுடே, தி வீக் என ஆங்கில இதழ்கள் தான் இருக்கும். படம் பார்ப்பதோடு சரி. சுரேஷ் அண்ணன் வாங்கிய ஹெல்த் அவ்வளவு சுவாரஸ்யம் தருவதில்லை. என்றாவது சுரேஷ் அண்ணன் முத்தாரம் வாங்கி வருவதுண்டு. அது போல் குறைவான விலையில் சிறப்பான மாணவர்களுக்கான வார இதழ் வேறெதுவும் கிடையாது. பிறகு விஸ்டம் ஆங்கில இதழை எழுத்து கூட்டி வாசிக்க பழகினேன்.
கிரிக்கெட் ஆர்வம் வந்தபின் என் கண்ணில் பட்டது சாம்பியன் வார இதழ். விளையாட்டு இதழ் என்றாலும் கிரிக்கெட்டுக்கே அதிக பக்கங்கள். குறிப்பாக வர்ணனைகள் தரமாக இருக்கும். காசு இருந்தால் அந்த வாரம் வாங்கி விடுவேன். 2.75 ரூபாயில் இருந்து 3 ரூபாய் ஆகி 3.50 ரூபாய் ஆகி 4 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு பின் பிரசுரிக்கப்படவில்லை.
அதை மையப்படுத்தி நானும் ஒரு பத்திரிகை பிடிஎப் வடிவில் ஆரம்பிக்க நினைத்தேன். ஒரு முயற்சியும் செய்தேன். கடந்த மாதத்தில் நடந்த சர்வதேச போட்டிகளின் முடிவு. ஆட்டநாயகன் விபரம். அடுத்த மாதம் நடைபெற உள்ள போட்டிகளின் பட்டியல்.
அதிகம் பிரபலமாகாத இந்திய வீரர் பற்றிய தகவல் (முதல் மாதத்திற்கு எம்எஸ்கே பிரசாத்). அதிகம் பிரபலமாகாத வெளிநாட்டு வீரர் பற்றிய விபரங்கள் (முதல் மாதத்திற்கு ஹாமில்டன் மாசகாட்சா). இது தான் எனது பிடிஎப் இதழின் சாராம்சம்.
கல்லூரியில் ஆனந்த விகடன் வாரம் தவறாமல் கிடைக்கும். செல்வநாதன் தான் ஆனந்த விகடன புழக்கத்தில் விடுபவன். சேகர் வாசிக்க நிறைய புத்தகங்கள் கொண்டு வருபவன், பொன்னியின் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தியவன். ஆறு தொகுதியும் அவன் வாசித்த பின் எனக்கு வந்து சேர்ந்தது.
சேகர் தான் துணை எழுத்து, கதாவிலாசம் வாசிக்க நல்லா இருக்கும் என்று சொன்னவன். சென்னைக்கு வந்த பின் சைதாப்பேட்டையில் வாரம் தவறாமல் விகடன் வாங்கிவிடுவேன். விகடனின் தரம் குறைந்த இந்நாட்களில் தான் வாங்குவதில்லை. மறக்கவே நினைக்கிறேன் கடைசியாக விகடனால் ஈர்த்தது.
திடீரென இலக்கிய இதழ்கள் மீது ஆர்வம் வர தொடங்கியது காரணம் விகடன் குழும தடம் இதழ். தடம் இதழுக்கு ஆண்டு சந்தா கட்டி வாங்கி வந்தேன். ஊருக்கு செல்லும் போது எழும்பூரில் கிடைக்கும் காலச்சுவடு வாங்குவேன். தடம் நிறுத்தப்பட்டது எனக்கு பேரிழப்பு.
விவசாய இதழான மண்வாசனைக்கு நான் அடிமை. அதுவும் கொரோனாவுக்கு பிறகு வாங்குவதில்லை.
வாய்ப்பு கிடைத்தால் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன். அது பொங்கல் விடுமுறையில் அமைவது பெரும் சிரமம், பொங்கலுக்கு ஊருக்கு செல்வதால்.
பிடிஎப் வடிவில் வாசிக்க எனக்கு பிடிக்கவில்லை. வாசித்தது லா.ச.ரா வின் அபிதா மட்டுமே.
நூலுலகம், பனுவல், காமன் போக்ஸ், அமேசான் தளங்களில் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது தான் இப்போதைய நிகழ்வு. மனைவி எனது பிறந்த நாளுக்கு புத்தகம் வாங்கி தருவதுண்டு.
No comments:
Post a Comment