Saturday, 21 May 2022

ஓய்வறியா உழைப்பாளி



நாவல் பழ நிறத்துகாரர்

கோவணமும் துண்டும்

முழு நேர உடை

வேட்டி பகுதி நேர ஆடை !


ஊரே பயிர்செய்ய

ஆறை நம்பி இருந்த போது

கிணறை வெட்டி விவசாயம்

செய்தவர் !


ஆடும், மாடும் அவரது

அணிகலன்கள் !

மகனை ஆசிரியராக்கிய

பின்பும் ஆட்டாம்புழுக்கை

வாசத்தில் தொழுவத்தில்

தூங்குவது அவரது வழக்கம் !


விவசாயத்திலும் கால்நடை துறையிலும்

முனைவர் பட்டம் வாங்கும்

முனைப்பு உண்டு

படிப்பில்லா முதியவருக்கு !


காசநோய் தாக்கத்தால்

அரசு மருத்துவமனையில்

இருந்த நாளில்

வயலில்லா வாழ்க்கை,

ஓய்வறியா உழைப்பாளியின்

மனதை பாதித்தது!


மரணத்தருவாயில்

'மாட்டை பிடித்து கட்டு' 

'கடலைச்செடி வாடி கிடக்கு' என

மருவிய அந்தக் கிழவன்

"மாடசாமி"

எங்கள் தாத்தா !!!

No comments:

Post a Comment