Friday, 3 June 2022

பார்த்தீனியம்

பார்த்தீனியம் ஒரு நச்சு செடி, அது வளர்ந்தால் மற்ற செடிகளை வளரவிடாது என்பதால் இந்த தலைப்பை தேர்வு செய்துள்ளார் தமிழ்நதி.

இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்கள், அராஜகங்கள், சொந்த நாட்டில் அகதி வாழ்க்கை, ஏழ்மை, காதல் என அழகாக பயணிக்கிறது நாவல்.

பெண் எழுத்தாளர் நாவலை வாசிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை. தேர்வு செய்தது பார்த்தீனியத்தை. விலை சற்றே அதிகம் என்பதால் தாமதமாகிவிட்டது.

அள்ளி பருகும் தெளிந்த நீரோடை போல் உள்ளது எழுத்தாளரின் தமிழ். அவரது பெயரே தமிழ்நதி என்பதாலோ என்னவோ.

500 பக்க நாவலில் எந்த இடத்திலும் விரசமோ, கெட்ட வார்த்தைகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கதை மாந்தர்கள் கெட்ட வார்த்தை பேசாதவர்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முடிந்த அளவு ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கிறார் தமிழ்நதி. புகையிரதம், பகடிவதை, உழவியந்திரம் என அழகான தமிழ் சொற்கள் மனதை ஈர்க்கிறது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா கிளம்புவதாக தொடங்கும் நாவல் அதே போல் முடிவதும் சிறப்பு.

தெரியாத இலங்கை பகுதிகள் என்றாலும் வாசித்து முடித்த பின் வவுனியா, யாழ்ப்பாணம், மாதகல், சல்லி, பாவற்குளம், நல்லூர் என கூகுள் மேப்பில் போய் பார்க்க வைக்கிறது.

பயிற்சி நடக்கும் களங்களை விவரிக்கிறார் எழுத்தாளர், அவர் நேரில் சென்று பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் விவரணைகள் அபாரம்.

ராஜீவ் கொலைக்கு முன்னதாக இலங்கை தமிழர்கள் பட்ட பாடுகளை வார்த்தைகளாய் பார்க்கும் போதே மனது பதறுகிறது. 

பரணி - வானதி காதலை அழகாக சொல்லி உள்ளார். அதே  சமயம் தனஞ்செயனின் ஒரு தலை காதலையும் சொல்லி உள்ளார். கீதபொன்கலனின் கடிதம் மனதை வருத்துகிறது.

இன்னும் பல விசயங்கள் பொதிந்துள்ள நாவல். வாசிக்க சிறந்தது. மறுவாசிப்பிற்கும் சிறந்தது.

இந்த படைப்பிற்காக தமிழ்நதி சகோதரியை வாழ்த்துகிறேன் !!!

No comments:

Post a Comment