Tuesday, 26 April 2022

சித்திரை அண்ணன்

ஊரில் பலரும் அவனை சித்திரை அண்ணன் என்று தான் அழைப்பார்கள். வயதானவர்களுக்கு சித்திரை.
அவன் நிஜ பெயர் சித்திரை அல்ல. சித்திரை மாதத்தில் பிறந்தவன். சிறு வயதில் சுழிச் சேட்டை செய்ததால் அவங்க அம்மா சித்திரை சுழியன் என்று அழைக்க, அதுவே விரிவடைந்து எல்லாரும் சித்திரை என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிறுவயதில் தேன் கூடு எங்கே இருந்தாலும் அதை எடுக்கப் போய் கண் இமையில் குழவி கடி வாங்கி இமை வீங்கியே அலைவான். கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சிறுவர்களை கூட்டி சென்று தேன் கூட்டை கலைத்து விட்டு சாரத்தால் முகத்தை மூடி தப்பித்து கொள்வான்.

அவன் அடிக்கடி செய்த இன்னொரு சேட்டை, ஜட்டி போட்டு குளிப்பவர்களின் பின்னால் சத்தமில்லாமல் சென்று அதை இறக்கி விடுவது.

கொஞ்சம் வளர்ந்த பின் சேட்டைகளை குறைத்து கொண்டான் என்று சொல்லலாம். மூன்று அண்ணன்களோடு பிறந்தவன். அப்பா, அண்ணன்கள் என நால்வரிடமும் அடி வாங்குவான்.

ஊரில் பல காதலர்களுக்கு சித்திரை அண்ணன் தான் தூதுவன். அதற்கு கமிசன் பெற்றுக் கொள்வான். 

18 - 20 வயதிருக்கும் போது அப்பா அடித்ததற்காக கோவித்து கொண்டு பாம்பே போய்விட்டான். போய் லட்டர் கூட போடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவங்க அம்மா இறந்துவிட ஊருக்கு வந்தான். 

அம்மாவின் மரணத்திற்கு பிறகு ஆளே மாறிவிட்டான். தினமும் மரம் வெட்ட, விவசாய வேலை, கல் உடைக்க, கட்டிட வேலை என்று ஏதாவது ஒரு வேலைக்கு போவான். வெட்டியாக இருக்க மாட்டான். 

ஊரில் தாய்குலங்களுக்கு உதவி செய்வான். விறகு உடைப்பது, பால் கறப்பது என. அதற்கு அவன் பெரும் கூலி, ஒரு டம்ளர் காப்பி. காப்பிக்காக எந்த வேலையும் செய்வான். காப்பியின் அடிமை என்றே சொல்லலாம்.

சித்திரை அண்ணனின் அண்ணன்களே காப்பி குடிப்பதற்கும் வேலை செய்வதற்கும் திட்டினர். சித்திரை அண்ணனுக்கு திருமணம் நடந்தது. வெளியூர் பெண்.

ஆனால் அந்தப் பெண் ஆறு மாதத்தில் பிரிந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் வைத்து பஞ்சாயத்து நடந்தது. நான் லேசா ரெண்டு தட்டு தட்டினதுக்கு போலீஸ் அடி பின்னிடாங்க என்று சிரித்து கொண்டே சொன்னான் டீக்கடையில் வைத்து.

அதற்கு பின் அவன் அப்பாவும் தவறிவிட, அவனே சமைத்து சாப்பிட தொடங்கினான். ஒரு போதும் அண்ணன் வீடுகளில் சாப்பிடுவது இல்லை. நன்றாக சமைப்பான், மீன் குழம்பு தான் சித்திரை அண்ணன் ஸ்பெஷல்.

ஆண்டுதோறும் ஆண்கள் குற்றாலத்திற்கு செல்லும் வைபவம் நடக்கும். இந்த குற்றால பயணத்திற்கு எப்போதும் சித்திரை அண்ணன் தான் சமைப்பான். கோழி கறி குழம்பும், கூட்டாஞ்சோறும்.

அருவியை கண்டதும் ஓ வென கத்திக்கொண்டே போய் குளிப்பான். இவனுக்கு கவலையே இருக்காதா என தோன்றும். எல்லாரும் மனைவி, குழந்தைகளுக்கு கடைகளில் ஏதாவது வாங்கும் போது அவன் மட்டும் டீக்கடையில் காப்பி குடித்து கொண்டிருப்பது மனதை ரணமாக்கும்.

சித்திரை அண்ணனுக்கு வயது நாற்பதை கடந்து விட்டது. தலை நரைத்து தாடி மீசையிலும் நரைமுடி வந்து விட்டது. அவனுக்கு நல்லது நினைக்கும் பலரும் சித்திரை ஒரு கல்யாணம் பண்ணிக்கோ, நாளைக்கு உனக்கு கஞ்சி ஊத்த ஒரு ஆள் வேணாமா என்று நச்சரிக்க தொடங்கிய காலம்.

பிப்ரவரி மாதம், சித்திரை அண்ணனை காணவில்லை. யாரிடமும் சொல்லாமல் எங்கோ போய்விட்டான். ஊர் பெரிசுகள் பாம்பேக்கு போயிருப்பான் என்று புழுக ஆரம்பித்தனர். அவன் அப்படி செய்யமாட்டான் என்று நம்பிக்கை இருந்தது. 

ஒரு வாரம் கழித்து, ஒரு ஆறு வயது பெண் குழந்தையோடு பேருந்தில் வந்து இறங்கினான். சுனாமியில் தாய், தந்தையை இழந்த அந்த குழந்தையை அதிகார பூர்வமாக தத்து எடுத்து கூட்டி வந்திருந்தான்.

ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் மகளை பேர் சேர்த்தான். ஊரில் யாரும் செய்யாத புதுமையாக.
சித்திரை அண்ணனின் மகள் பெயர் "சுகன்யா கிருஷ்ணமூர்த்தி".

No comments:

Post a Comment