குட்டி மாமா என்றதும் வயதில் சின்னவர் என்று நினைக்க வேண்டாம். அவர் பெயர் குட்டித்துரை.
காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிப்பதில் வல்லவர் குட்டிமாமா.
சங்கு தாத்தாவின் யானைப்பல் மோதிரத்தை ஆற்றுக்குள் தேடி கண்டுபிடித்ததை ஊரே வேடிக்கை பார்த்தது. அன்று முதல் நாங்கள் அவரின் ரசிகர்கள்.
கிணற்றில் தவறி விழுந்த மாட்டை சின்ன சிராய்ப்புகளோடு தூக்க யோசனை சொன்னது மாமா தான்.
ஆற்றோரத்தில் மேய சென்ற ஆட்டுக்குட்டி திரும்பி வரவில்லை. ஆத்தோடு போயிருக்கலாம் அல்லது யாராவது திருடி இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆட்டுக்காரர், வந்த பிறகு மாமா பாறை இடுக்கில் சிக்கி இருந்த குட்டியை மீட்டு வந்தார்.
ஊர் பெரிசுகள், அவன் அனுமார் மாதிரி மலய கூட தூக்கியாந்திருவான் என்பார்கள். ஆனால் மாமாவின் தேடல் எதுவும் அத்தைக்கு பிடிப்பது இல்லை.
ஊரில் ஒரு வீட்டில் நகை காணாமல் போனது. ஊர் கூடி சாணி உருண்டை நடத்த தீர்மானம் ஆனது. யோசனை குழுவில் மாமாவும் இருந்தார். கோவில் முன் வைத்திருக்கும் அண்டாவில் எல்லாரும் ஒரு சாணி உருண்டை போட வேண்டும். திருடியவர் திருந்தி யாருக்கும் தெரியாமல் சாணிக்குள் வைத்து போட ஒரு வாய்ப்பு.
கெடு முடிந்து அண்டாவை கலக்கி கொட்டியதில் நகை வரவில்லை. அன்று மாமா முகம் சுண்டிப் போனது.
சில வருடங்கள் கழிதது, அத்தைக்கு கொள்ளி வைத்து விட்டு, ஆற்றில் தலை முழுகி எழுந்த மாமா அழுது கொண்டே சொன்னார். அத்தை விதை நெல் வைத்திருக்கும் அடுக்கு பானையில் அந்த நகையை வைத்திருந்ததை அன்றிரவே, தேடாமலே தெரிந்து கொண்டதாக.
No comments:
Post a Comment