வாசு முருகவேல் எழுத்து என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது. அதனால் தான் அவரது அடுத்த நாவலையும் வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
கலாதீபன் லொட்ஜ் நாவலை விட இதில் அவர் தொட்டிருக்கும் களம் வித்தியாசமானது. திருத்தப்பட்ட பதிப்பு தான் எனக்கு கிடைத்தது. இதிலிருந்தே உணரலாம் முதல் பதிப்பு எவ்வளவு உக்கிரமானது என்று.
ஷர்மியில் தொடங்கி புது புது கதாபாத்திரங்களாக விவரிக்கிறார். சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் மனதை கனக்க வைக்கிறார்கள் கொசுனாமணியர், அரை மண்டை போன்றோர்.
சாப்பாடு கொண்டு வரட்டா என்று கேட்பதும் அவர்களை அவமான படுத்துவதும் ஒன்று தான் என்று நினைக்கிறார் அரைமண்டை. நண்பனால் இந்த நிலைக்க வரமுடியுமா? அவருக்கு நேர்கிறது. அவரை எளிதில் கடக்கமுடியாது.
எழுத்து ஆளுமையில் ஈர்க்கிறார் வாசு. "மனமோ, மானமோ, மறதியோ தடுத்திருக்கும்". "ராணுவத்துக்கு தமிழ் சனங்கள் செத்தால் போதும்... குண்டு வீசும் இடம் பள்ளிக்கூடம் என்ன... பள்ளி அறை என்ன...".
தலைப்பு காரணமான ஜெப்னா பேக்கரி ஒன்பதாம் அத்தியாயத்தில் தான் வருகிறது.
எக்சோறாப் பூக்கள் பற்றிய சொல்கிறார் வாசு. தமிழ் நாட்டில் சீர் பிரித்து எழுதுவதில் மட்டும் பயன்பட்ட தேமா பூவின் அழகை விவரிக்கிறார். அது இலங்கையில் நிறைய இருக்கும் போல.
கிழக்கு மாகாணம் அரபு நாடுகளை போல மாறிவருகிறது என்று எழுதியுள்ளார். புலிகளை பற்றியும் எழுதியுள்ளார். உண்மையை அப்படியே எழுதியுள்ள அவர் எத்தனை எதிர்ப்புகளை சந்தித்து இருப்பார்.
சீனியை பதுக்கி வைத்து விற்பது இன்றும் இலங்கையின் நிகழ்வு. பேட்டரியை உயிர்ப்பிக்க பயன்படுத்தும் உக்திகளை சிறப்பாக எழுதியுள்ளார்.
திருலிங்கத்தாரை எழுத்துகளாலேயே மரியாதை கொடுக்க வைக்கிறார். ஷர்மியில் ஆரம்பித்து ஷர்மியிலே முடித்து இருக்கிறார்.
இவர் எழுத்துகளை வாசித்த பின் பிற இலங்கை எழுத்தாளர்களையும் வாசிக்க தோன்றுகிறது.
(எழுத்து பிழைகள் ஆங்காங்கே கண்ணில் தென்பட்டது.)
No comments:
Post a Comment