எனது சிறுவயது முதல் நண்பர்கள் முத்துவும் கணேசனும். நான்காம் வகுப்பு முதல் பாண்டியும் முருகனும் சேர்ந்து கொண்டனர்.
முத்து, கணேசன் அண்ணன் தம்பிகள். எங்கள் வீட்டிற்கு எதிர்வீடு. எதிர் வீடு என்றாலும் நடுவில் பெரிய காலி இடம் உண்டு. காலிஇடம் வழியாக ஒரு ஒத்தையடி பாதை. பகலில் பயமில்லாமல் போய் வருவேன். கொஞ்சம் இருட்டிவிட்டால் இரண்டு வீட்டுக்கு நடுவில் இருக்கும் பூவரசு மரம் பயமுறுத்தும்.
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை அப்பா தலைமை ஆசிரியராக இருந்த பள்ளி. அதனால் எனக்கு எப்போதும் சூப்பர் பவர் இருந்தது. P. மகாராஜன், கருப்பசாமி, லவக்குமார், M. மகாராஜன் இவர்கள் தான் வகுப்பு நண்பர்கள். இன்று வரை இணைப்பில் இருப்பது P. மகாராஜன் தான்.
இன்றும் அந்த பள்ளியில் பயின்றவர்களுக்கு நான் சுப்பையா சார் பையன். இப்போதும் அதே அன்பு காட்டுவார்கள்.
சின்னக்காவின் ஐந்தாம் வகுப்பு வரை அவளோடு பள்ளிக்கூடம் சென்றேன். அவள் ஆறாம் வகுப்புக்கு மானூர் சென்ற பின் நான் தனியாக பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது.
பள்ளி செல்லும் பாதை வீட்டில் இருந்து வண்டி தடமாக இருக்கும். ஒரு கரை போன்ற மேடு இருக்கும். அந்த மேடு தான் எங்கள் ஊருக்கும் செழியநல்லூர்க்கும் உள்ள எல்லை. மேட்டு பக்கத்தில் ஒரு கிணறு. மழை பெய்தால் தண்ணி கிடக்கும். மேட்டை தாண்டினால் இரு புறமும் புஞ்சை நிலம். மழை பெய்தால் எள்ளோ, உழுந்தோ பயிரிடுவார்கள்.
வண்டி தடம் வளைந்து மீண்டும் நேராக செல்லும். வளையும் இடத்தில் இரட்டை பனைமரங்கள் உண்டு. அதில் பேய் இருப்பதாக கதையும் உண்டு. அந்த வளைவு கருவேல மரங்களால் அடர்ந்து கிடக்கும். வெளிச்சம் குறைவாக இருக்கும்.
வளைவை தாண்டி வண்டித்தடம் உருமாறி வண்டி தடமா ஒத்தையடி தடமா என்று தெரியாமல் இருக்கும். வளைவை தாண்டிய பாதையில் வடக்கும் தெற்கும் கிணறுகள் உண்டு.
அதில் வடக்குப்பக்கம் உள்ள கிணற்றில் முனி இருப்பதாக சொன்னதால் நான் எட்டிக்கூட பார்த்ததில்லை. அதை தாண்டி கொஞ்சம் தூரம் சென்றால் ஓடை வரும். அது மேலோடை, மழைகாலத்தில் தண்ணீர் கிடக்கும். அந்த ஓடையை தாண்டியால் கருவேல மரங்கள் சூழ் ஒத்தையடி பாதை. சில இடங்களில் முள்ளை ஒதுக்கிவிட்டு நடக்க வேண்டும்.
அதை தாண்டினால் அடுத்த ஓடை அது கீழோடை. சின்ன மழைக்கு கூட தண்ணி வரும். கீழோடையை அடுத்து மாடசாமி கோவில், அதற்கடுத்து பள்ளிக்கூடம் தான்.
அப்பா இறந்தபின் அந்த நாற்பது நாட்கள் பள்ளிக்கு செல்ல ரொம்ப பயமாக இருந்தது.
யாராவது சைக்கிளில் வந்தால் ஏற்றிவிடுவார்கள் அது அபூர்வம். ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் இருந்தார். அவர் எந்நேரமும் எதிரில் வரலாம் என்ற பயம் வேறு.
நான்காம் வகுப்பு எங்க ஊர் பள்ளியில் சேர்ந்து விட்டேன். எங்க ஊர் குளக்கரையில் நடந்து செல்வோம். காலையில் அதிகம் முருகாவுடன் தான் செல்வேன். ஒருநாள் முட்டும் ஆட்டுக்குட்டியுடன் மாட்டி படாதபடு பட்டுவிட்டோம் நானும் முருகாவும்.
மாலையில் நான், முருகன், முத்து, கணேசன் என எல்லாரும் சேர்ந்து தான் வருவோம்.
ஒருமுறை ஒரு வெறிநாய் சுற்றியது. அப்போது குளக்கரையில் செல்லாமல் தோட்டங்களில் வழியே சென்றோம். அந்த நாய் தோட்டத்தில் வேலை பார்த்த ஒருவரை கடித்த சேதி காதை எட்டியது. ஊரே திரண்டு விரட்டி அந்த நாயை கொன்ற பின் தான் நிம்மதி.
மாலையில் அய்யர் வீட்டு டியூசனில் தான் நிறைய கற்றுக்கொண்டோம். ஜெயா டீச்சரும் ராஜீ டீச்சரும் நல்லாசிரியர்கள். டியூசனில் டிக்டேசன் (டீச்சர் சொல்லும் வார்த்தையை பிழையில்லாமல் எழுத வேண்டும்) தான் ரொம்ப ஸ்பெஷல்.
டியூசனுக்கு தினமும் நன்றாக படித்தான் என்று கையெழுத்து வாங்கி வர வேண்டும். அப்போது தான் இடது கையால் எழுதினால் தாத்தா கையெழுத்து என்ற யுக்தி உதயமானது. தினமும் திருநீறு வைத்து செல்ல வேண்டும், மறந்து விட்டால் யாராவது நெற்றியில் முட்டி ஒட்டி உதவி புரிவார்கள்.
ஆறாம் வகுப்பு பாளையங்கோட்டை வந்து விட்டேன். வெஸ்டன் ப்ளாக்கில் கடைக்கோடி வகுப்பு தான் ஆறாம் வகுப்பு டி பிரிவு. "நேரம் தவறாமை ரயில்களுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் தான்" என்று போர்டில் எழுதி இருக்கும்.
தனியாக இருந்து சாப்பிட்ட என்னை அருண்குமாரும் ஹரிஹர சுதனும் சேர்ந்து சாப்பிட அழைத்து கொண்டனர்.
பக்கத்தில் இருந்த பரமசிவனை கண்டு முதலில் பயந்தேன். அவன் ஆறாம் வகுப்பு இரண்டாம் ஆண்டு என்பதால். பரமசிவன் இன்று உயிரோடு இல்லை. அதற்கு பிறகு சீனிவாசன், குமார், அய்யம் பெருமாள் என்று பழக்கம் விரிந்தது.
பரமசிவனால் அறிமுகமான கண்ணையா உடனான நட்புறவு இன்றும் பயணிக்கிறது.
சீனி பத்தாம் வகுப்பிற்கு பிறகு பாலிடெக்னிக் சென்றுவிட்டாலும் செல்போன்கள் காலத்தில் மீண்டு வந்ததில் எப்போதாவது பேசி கொள்வோம்.
கண்ணா மற்றும் சீனி எழுதிய கடிதங்கள் வீட்டில் பத்திரமாக இருந்தது. இப்போது இருக்கா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment