சென்னைக்கு வந்த பின் நிறைய இடங்களுக்கு மாநகர் பேருந்தில் பயணித்திருக்கிறேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த வழித்தடத்தை பற்றி சொல்கிறேன்.
ஒரு முறை வல்லக்கோட்டை முருகன் கோவில் செல்வதற்கு காலையிலே 50 ரூபாய் டிக்கெட் (ஒருநாள் பாஸ்) எடுத்து கிளம்பினேன். ஸ்ரீபெரும்புதூர் போய் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் வல்லக்கோட்டை போய் சாமி கும்பிட்டு, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் வந்தேன். வடபழனி பேருந்து நின்றது. வழி வளசரவாக்கம் என்றிருந்தது. ஏறி ஜன்னல் சீட் பார்த்து உட்கார்ந்து கொண்டேன்.
பேருந்து கிளம்பி சென்னையை நோக்கி வராமல் காஞ்சிபுரம் செல்லும் பாதையில் சென்றது. சந்தேகம் வரவே நடத்துநரிடம் வளசரவாக்கம் போகுமா என்றேன். போகும் என்றார்.
பேருந்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து ராஜீவ் காந்தி நினைவகம் தாண்டி இடது பக்கம் திரும்பியது. அது மாநில நெடுஞ்சாலை போல. சாலை நன்றாக இருந்தது. அதிக குடியிருப்புகள் இல்லை. சின்ன சின்ன தொழிற்சாலைகள். இருபுறமுமே பசுமைக்கு பஞ்சமில்லை.
நடுவில் நெடுஞ்சாலையில் சிலர் ஏறினார்கள். பேருந்து நிறுத்தம் என்ற சுவடே இல்லை. நல்லூரில் இருந்து பிரிந்து ஒரு கிராம சாலையில் சென்றது. கிராம பேருந்து வரும் நேரத்தை வைத்து காத்திருக்கும் மக்கள் ஏறி கொண்டனர்.
நல்லூரை கடந்து சோமங்கலம் சென்றது. அங்கு பேருந்து திரும்ப பஸ் ஸ்டான்ட் போல வசதி உள்ளது. சோமங்கலத்தில் இருந்து கிளம்பி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேருந்து பயணித்தது. வனப்பகுதி அடர்ந்து காணப்படவில்லை. அந்த பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தம் பெயர் பூந்தண்டலம்.
பேருந்து மீண்டும் மாநில நெடுஞ்சாலைக்கு வந்தது. நந்தம்பாக்கம், சரஸ்வதி நகர், சிறுகளத்தூர் பகுதிகளை கடந்தது. இந்த பகுதிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் வடிகால் பகுதிகள் என்பதால் வாத்து வளர்ப்பும் விற்பனையும் நடக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை வாத்து கறி வாங்க நிறைய கூட்டம் அலை மோதியது.
பேருந்துக்கு வருவோம். பேருந்து மாதா கல்லூரிக்கு அருகில் வெளிவட்ட சாலையை கடந்து குன்றத்தூர் வந்தது. குன்றத்தூர் வந்ததும் நகர நெரிசல் தொடங்கியது.
போரூர் வரும் போது மாநகர புழுதி, புகை, நெரிசலோடு சேர்ந்து கொண்டது.
ஒரு பேருந்து பயணத்தில் கிராம, நகர, மாநகர பகுதிகளை வேடிக்கை பார்த்தது சிறப்பாக இருந்தது.
No comments:
Post a Comment