Wednesday, 16 June 2021

கார்த்திக்

 கார்த்திக் என்ற பெயரில் எத்தனையோ பேர் பழகி கடந்து சென்றவர்கள் உண்டு.

அண்ணனின் பெயர் கார்த்திகேயன் அங்கு தான் ஆரம்பிக்கிறது கார்த்திக். பள்ளியில் கார்த்தீசன் என்று ஒரு நண்பன் இருந்தான்.

கல்லூரி வகுப்புத் தோழன், ப்ராஜெக்ட் மேட் என்றொரு கார்த்திகேயன். கூடவே சுத்திய ஜூனியர் கார்த்தியும் உண்டு.

சென்னைக்கு வந்த பின் பக்கத்து அறையில் ஆக்சிஸ் பேங்கில் வேலை பார்த்த கார்த்திக் உண்டு. அவரோடு நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.

தூசான் அலுவலகத்தில் ஒரு ஆல் இன் ஆல் கார்த்திக் உண்டு ஆர் ஆர் கார்த்திக். ட்ரீம் 11ல் கூட வெற்றிகளை பெற்றவர்.

பத்து மாதங்கள் பழகினாலும் நண்பனாக, ஆசானாக வழி நடத்திய யுஎஸ். கார்த்திகேயன் தான் கடைசி கார்த்திக்.

எத்தனையோ கார்த்திக் இருந்தாலும் என் பிறந்த நாளில் ஓராண்டு முன்பு பிறந்த கார்த்திக் கொஞ்சம் ஸ்பெஷல்.

கல்லூரியில் முதல் இரண்டு ஆண்டுகளில் பழக்கம் இல்லை. மூன்றாம் ஆண்டும் இறுதி ஆண்டும் நல்ல பழக்கம்.

சீனியர்கள் பேர்வெல் பார்ட்டியில் தீர்ந்து போன சரக்கு பாட்டிலை கழுவி தண்ணீர் குடிக்க உபயோகிக்கலாம் என்று நினைத்து, எங்கள் அறை கட்டிலுக்கு அடியில் வைத்து எங்களை மாட்டி விட்ட உத்தமன்.

இறுதி ஆண்டில் அவன்‌ போட்டோவை வைத்து போஸ்டர் அடித்து அதகளம் செய்தோம். பிறந்த நாளன்று கேக் வெட்டி முட்டையை தலையில் அடிப்பது வழக்கம். நம் பிறந்த நாளில் மற்றவர்களுக்கும் நாம் முட்டை அடிப்போம் என்று பத்து முட்டை வாங்கி ஒளித்து வைக்க நினைத்த இடங்களில் ஏற்கனவே முட்டைகள் இருந்தன.

அன்று கேக் வெட்டியது தான் நான் வெட்டிய முதல் கேக். கடைசி முட்டை உடைக்கப்பட்டு குளித்து முடிக்கையில் மணி இரண்டரை.

கடைசி செமஸ்டரில் விடுதியை காலி செய்து விட்டு தக்கலையில் வீடு எடுத்து தங்கிய போது அவனும் கூட வந்தான். அந்த வீட்டு பக்கத்தில் இருக்கும் குளத்திற்கு குளிக்க எப்போதாவது தான் வருவான்.

என் அலைபேசியில் அவன் எண்ணை கார்த்திக் என்று பதிவு செய்ததில்லை. அவன் எண் மனப்பாடமாக தெரியும் 99***28*** என்று.

எளங்காத்து வீசுதே அவனுக்கு பிடித்த பாட்டு. எப்போது கேட்டாலும் அவன் நினைவில் வந்து போவான்.

சென்னைக்கு வந்த பின் போன் பண்ணுவான். குஜராத்தில் இருக்கிறேன். உபியில் இருக்கிறேன். சத்திஸ்கரில் இருக்கிறேன் என்று. சுத்தி கொண்டே இருந்தவன் கல்பாக்கத்தில் கொஞ்ச நாள் நிலை கொண்டான்.

கல்பாக்கத்தில் இருந்து வாரந்தோறும் சைதாப்பேட்டை மேன்சனுக்கு வருவான். ஒருநாள் காலையில் மீன், நண்டு வாங்கி வந்தான். ரூமிலிருந்த மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ரெடி செய்தோம். மண்ணெண்ணெய் வாங்க அடையாற்று கரையோர குடிசை பகுதிக்குள் சென்றோம். அன்று தான் சைதாப்பேட்டையின் இன்னொரு பக்கத்தை பார்த்தோம். நண்டு குழம்பு மீன் பொறியல் என்று அந்த நாள் சுவையான நாள்.

நானும் தினேஷ்ம் தடா சென்று, கார்த்திக் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். அடுத்த நாளே பிரியாணியோடு தடா சென்று அருவியில் குளித்து களித்து வந்தோம்.

திருமணத்துக்கு பிறகு மூவரும் சந்தித்த நாளில் தினேஷ் காரில் தி.நகர் சென்றோம். நீண்ட நாள்களுக்கு பிறகு கல்லூரி நண்பர்களோடு மகிழ்ந்த தினம். அன்று தினேஷ் சாப்ட்வேர் இன்ஜினியர், நான் பைப்பிங் இன்ஜினியர், கார்த்திக் குவைத்தில் டெஸ்டிங் இன்ஜினியர். கல்லூரியில் நாங்கள் நினைத்து கூட பார்க்காத நாள். கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்த நாள்.

வழுக்கை விழுந்து வயோதிகம் வந்த நாளில் நாங்கள் சந்தித்து கொண்டால் அன்று வாலிபர்கள் ஆகிவிடுவோம்.



No comments:

Post a Comment