சரவணன் சார்.
சரவணன் சார் எங்கள் கல்லூரியின் பேராசிரியர். நாங்கள் முதல் முறையாக மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கட்டிடத்தில் முதல் வகுப்பை தொடங்கிய 3வது செமஸ்டரில் ப்ளூயிட் மெக்கானிக்ஸ் பாடத்தை எடுத்தார்.
அன்று படித்த பாடம் இன்று வரை எனது வேலையின் நிமித்தம் கூட வருவது குறிப்பிடத்தக்கது. சரவணன் சார், எல்லாரும் ஆர்கே பன்சால் எழுதிய புத்தகத்தை வாங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். விலை அதிகம் என்பதால் நானும் தர்மாவும் ஒரு புத்தகம் வாங்கி பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம். அதை தெரிந்து ஒருநாள் ஜாலியாக திட்டினார்.
சரவணன் சார் ஸ்பெஷல் என்பது எப்போதும் வெள்ளை சட்டை அணிந்திருப்பார். போர்ட்டில் எழுதும் எழுத்து அழகாக இருக்கும். அதுவே நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடும்.
ஆனால் மிகவும் கண்டிப்பானவர். எரிந்து எரிந்து விழும் லேப் அசிஸ்டெண்ட் அழகிய பத்மனாபன் கூட சரவணன் சார் லேப் என்றால் அடக்கி வாசிப்பார்.
எங்கள் ஊரில் காட்டு (காண்பி) என்பதை காமி என்று சொல்வோம். நாஞ்சில் வட்டார வழக்கில் அது கானி. சரவணன் சார் அடிக்கடி சொல்வதால் அந்த வார்த்தை பழகி விட்டது. முதலில் சிரிப்பை வரவழைத்தது.
மீண்டும் 7வது செமஸ்டரில் பிராசஸ் பிளானிங் & காஸ்ட் எஸ்டிமேஸன் பாடம் நடத்த வந்தார் சரவணன் சார். 7வது செமஸ்டர் என்றாலும் அவர் வகுப்பில் சேட்டை செய்ய முடியாது.
நாங்கள் கல்லூரி முடித்த பிறகு சரவணன் சார் அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று விட்டார். எல்லாரும் மரியாதை வைத்திருக்கும் ஆசிரியர்களில் ஒருவர் சரவணன் சார் என்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்பில் நடக்கும் புராஜெக்ட் வைவாவிற்கு எங்கள் புராஜெக்ட் விளக்கத்தின் போது சரவணன் சாரே வந்தார். நாங்கள் ஒரு குறுக்கு வழியை கண்டுபிடித்தோம். சரவணன் சார் ஒவ்வொரு பெஞ்சில் இருந்தும் ஒருவர் புராஜெக்ட் குறித்து கேள்வி கேட்க வேண்டும் என்பார். நாங்கள் கிட்டத்தட்ட எல்லா பெஞ்ச்க்கும் ஒவ்வொரு கேள்வி (எங்களுக்கு பதில் தெரிந்த) கொடுத்து விட்டோம்.
நானும் தர்மாவும் முன்னே விளக்க சென்றதால் எங்கள் பெஞ்சில் மிஞ்சி இருக்கும் டேனி மற்றும் சாகுலுக்கு கேள்வி சொல்லவில்லை. சரவணன் சார் டேனியிடம் கேள்வி கேட்கச் சொன்னார். டேனி பதில் தெரியாத கேள்வி கேட்பானே என்று பயந்த நேரத்தில் டேனி புராஜெக்ட்க்கு எவ்வளவு செலவு ஆகும் என்றான்.
கார்த்தி, எந்த யோசனையும் இல்லாமல் 75000 - 1 லட்சம் ஆகும் என்றான். அடுத்து சரவணன் சார் ஏன்டா, இவ்வளவு ஹீட் வேஸ்ட் பண்றாங்களா? என்று கேட்க தர்மா ஆமா சார் பெரிய பர்ன்ஸ் சார் என்று பதில் சொல்ல சரவணன் சார் சிரித்து விட்டார். அதற்குள் அந்த வகுப்பு முடிய நானும் தப்பித்துக் கொண்டேன்.
தற்போது சரவணன் சார் பேஸ்புக்கில் களமாடுவதால் அவர் குறித்த தகவல்கள் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
No comments:
Post a Comment