மாமா மாயாண்டிக்கும் அது மகிழ்ச்சியே.
சுதந்திரம் கிடைத்து விட்டால், போராட்டம், புரட்சி என்று கந்தமாறன் அலைய மாட்டான் என்ற மகிழ்ச்சி.
வெள்ளைக்காரன் மாளிகைக்குச் சென்ற போது, வெள்ளைக்காரனும் சொன்னான், அவர்கள் தாயகம் திரும்ப போவதாக. கந்தமாறனை லண்டனுக்கு வருகிறாயா என்று கூட கேட்டான் அந்த வெள்ளைக்காரன். சொந்த நாட்டில், சுதந்திர நாட்டில் இருக்கப் போவதாகக் கூறி மறுத்து விட்டான் கந்தமாறன்.
கந்தமாறன் அதிக மகிழ்ச்சியாக இருந்தாலும், அதிக துயரமாக இருந்தாலும் அவன் ஊரான பாளைய நல்லூர் கிராமத்தின் வடக்கே இருக்கும் கசமாடன் மரத்தடிக்கு தான் செல்வான். ஓங்கி உயர்ந்த இரண்டு மரங்கள் இருக்கும் இடம். நல்ல தூக்கத்தைத் தரும்.
பொதுவாக யாரும் அங்கு செல்வதில்லை. ஓடைக் காவலுக்கு நின்ற கசமாடனை ராசா வெட்டிக் கொன்றுவிட்டதாக ஊரில் சொல்வார்கள். அந்த மரத்தின் கிளையையோ, குச்சியையோ யாரும் முறிப்பது கூட கிடையாது. எப்போதாவது யாராவது வந்து சேவல் பலியும், பானகாரமும் படைப்பது வழக்கம். சிலை எதுவும் கிடையாது. மரமே கசமாடன்.
கிருஷ்ணமூர்த்தி, கந்தமாறனிடம் சொன்னார், அந்நிய துணி எரிப்பு போராட்டம் நடைபெறுகிறது. உன்னிடம் துவைக்க வரும் வெள்ளையர்கள் துணியை எரித்து விடு என்று.
எனக்கு சுதந்திர நாடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு என் வேலையும் முக்கியம். என்னிடம் தரப்படும் அழுக்கு துணியைச் சுத்தப்படுத்தி கொடுப்பவன் நான், அதற்கு கூலியும் வாங்கிவிட்டு எரித்தால் என் வேலைக்கு செய்யும் துரோகம் என்று கூறி மறுத்துவிட்டான்.
ஊர் முழுக்க சுதந்திரம் கிடைக்கப் போகிறது என கூவித் திரிந்தான் கந்தமாறன். சுதந்திரம்னா என்ன என்று ஊரில் ஒரு மூதாட்டி கேட்டார். வெள்ளைக்காரன் அவன் ஊருக்கே திரும்பிப் போகப் போறான் என்றான் கந்தமாறன்.
வெள்ளைக்காரன் போய்ட்டான்னா உங்கிட்ட யாரு துணி வெளுக்க போடுவா? என்று கேட்டு சிரித்தார் அந்த மூதாட்டி.
எல்லா ஊர்லயும் மில்லு, கில்லுனு நிறைய கம்பெனி புதுசா கட்டுவாங்க. சட்டை, புல் டவுசர் போட்டு நானும் வேலைக்கு போவேன் என்று பெருமிதமாகக் கூறினான் கந்தமாறன்.
தலைவர், கிருஷ்ணமூர்த்தியைக் கூப்பிட்டு பேசினார். சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நிர்வாகத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. சுதந்திரத்திற்கு பிறகு அனைவரும் சமம். அந்தத் துடிப்பான இளைஞனை தயார் செய்து வை என்றார். தலைவரே, எனக்கு பதவி என்றான் கிருஷ்ணமூர்த்தி. சுதந்திரம் கிடைத்த பிறகும் நாம் களத்தில் இருந்து வேலை செய்தால் தான் முழுப் பலனை அடைய முடியும். அதனால் நமக்கு பதவி ஆசை வரக்கூடாது. நாம் எப்போதும் போல் இருப்போம் என்றார் தலைவர்.
செட்டியார், கந்தமாறனை கூப்பிட்டதாக கேள்விப்பட்டு செட்டியாரைப் போய் பார்த்தான். செட்டியார் சொன்னார், நான் உனக்கு தந்த வளையல்களில் ஒன்றை கிருஷ்ணமூர்த்தி பொண்டாட்டி விற்கக் கொண்டு வந்தாள் என்றார். செட்டியார் ஐயா, கிருஷ்ணமூர்த்தி ஐயா அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்றான் கந்தமாறன்.
கொல் ஆசாரி பக்கத்தில் இருந்து செய்து வாங்கிய எனக்கு தெரியாதா?. நீ பாடுபடுற, அவன் உன்ன பயன்படுத்திக்கிறான். நானே அவன்கிட்ட கேக்குறேன் என்றார் செட்டியார்.
கந்தமாறன் மதுரை சம்பவத்தை நினைத்துப் பார்த்தான். தலைவர் வெளியே எடுத்து நீட்டியது ஒரு வளையலை மட்டும் தான். கிருஷ்ணமூர்த்தி துரோகம் செய்கிறாரா? நம்ப முடியவில்லை கந்தமாறனால்.
மன நிம்மதி வேண்டி கசமாடனிடம் சென்றான். சில நாட்களாக தினமும் சென்றான், அங்கேயே இருந்தான். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவனை, இரண்டு பேர் வந்து மூச்சைப் பிடித்துக் கொன்றனர்.
கந்தமாறனை முனி அடித்துவிட்டது என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி சுதந்திர இந்தியாவில் நிர்வாகப் பொறுப்பில் பதவி ஏற்றுக்கொண்ட கையோடு, கந்தமாறன் இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினான்.
No comments:
Post a Comment