Saturday, 25 December 2021

சரக்கொன்றை

1

கத்தரித் தோட்டத்தில்

புழு வந்ததென்று

வாங்கி வந்தான் மருந்தை 

கடன்காரன் வார்த்தைகள் 

ஜீரணிக்க முடிக்காமல்

மருந்தை உள்வாங்கி 

நுரையை வெளிதள்ளி 

கொண்டான் 

நலிந்த விவசாயி !!!


முதல் வாரம் பள்ளி 

சென்றுவிட்டு 

என்னை உட்கார வைத்து

பாடம் நடத்தினாள் 

என்னை சுற்றி எத்தனையோ 

சிறார்கள் இருப்பதாக 

கற்பனை செய்து 

கொண்டாலும் என்னை 

மட்டும் அடிக்கும் 

மோசமான டீச்சர் 

என் மகள் !!! 


3

கண்ணாடி அறையில் 

மாட்டிக் கொண்ட 

பட்டாம்பூச்சி போல் 

இருக்கும் அலுவலக சூழலை 

மறக்க செய்வது

வீடு சேர்ந்ததும் நீ தரும் 

ஒற்றை புன்னகையும் 

ஒரு கோப்பை தேனீரும் !


4

பழைய டைரியை 

புரட்டிய போது 

கரிந்து கிடந்த 

ரோஜாப்பூ சொல்கிறது 

பசுமையான 

பழைய காதலை ! 


தரிசு நிலத்தில்

வளர்ந்து நிற்கும் மரம் 

நெடுஞ்சாலையில் கடக்கும் 

பெயர் தெரியாத ஊர் 

காட்டில் பூத்து கிடக்கும் 

வாசமில்லா பூ 

ஆற்றுக்குள் நனையாமல் 

இருக்கும் பாறை

ஊரடங்கில் உணரப்பட்ட 

தனிமை !


6

இரண்டு தவணை

தடுப்பூசி 

முகக்கவசம் 

கிருமி நாசினி 

எதனாலும் அழிக்க 

முடியவில்லை 

கொரோனாவால் இறந்துவிட்ட 

நண்பனின் நினைவுகளை ! 


அடை மழையால் 

உயர்ந்து விட்ட 

காய்கறி விலையை 

குறைக்க மனம் 

வரவில்லை வியாபாரிக்கு

விவசாயி அலைந்தான் 

கடன் வாங்கி 

மீண்டும் நடுவதற்கு ! 


8

ரோஜா காதலிக்கு 

மல்லிகை மனைவிக்கு 

சாமந்தி சாமிக்கு 

செவ்வரளி நெடுஞ்சாலைக்கு 

எனக்கு தலைப்பு 

தந்தது சரக்கொன்றை !









5 comments: