எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்று தெரியாத சுவாரசியம் சைதை மேன்சன்.
சைதாப்பேட்டையில் பனகல் மாளிகைக்கு பின்னால் ராஜ் தியேட்டர் பக்கத்து தெருவில் (விநாயகம் பேட்டை தெரு) இருக்கிறது எங்கள் மேன்ஷன்.
மேன்ஷனை எனக்கு அறிமுகப்படுத்தியது சங்கர் தான். சங்கருக்கு அறிமுகப்படுத்தியது அருண். அருண் தான் சீனியர்.
நான், ரிஸ்வான், ஜனா மூணு பேரும் ரூம் எடுத்து தங்குவதாய் பிளான். ஜனா கடைசி நேரத்தில் கழண்டு கொள்ள தினேஷ் வந்து சேர்ந்து கொண்டான்.
அதற்குப்பின் சன் குமார் வந்தான். குரு, வரதன், ஜாஹிர் ( தினேஷ்) மாப்பிள்ளை மார்த்தாண்டன், ராஜ்குமார், தாஸ் ப்ரொபசர் பாலு, ராஜ பார்த்திபன், பகவான், சின்ன பகவான், அம்பத்தி ராயுடு என சகலரும் புழங்கிய இடம். கார்த்தி மட்டும் வேடந்தாங்கல் பறவை போல் வாரக்கடைசியில் வந்து செல்வான்.
சாப்பிட நானும் தினேஷ் அதிகம் விரும்புவது பிளாட்பார கடை பிரியாணி. நானும் ராஜ்குமாரும் கூட்டணி என்றால் ராயல் பிரியாணி. அருண், ஜாகிர்,மாப்பிள மார்த்தாண்டம் என எல்லாரும் சேர்ந்து சென்றால் ராவுத்தர் தலப்பாக்கட்டு அல்லது மாமிஸ்.
காலை உணவு பொதுவாக மேன்ஷனுக்கு கீழிருக்கும் மரண விலாஸ் ஹோட்டலில் தான். நினைத்த நேரத்தில் படம் பார்க்க சைதை ராஜ் எனக்கு பக்கத்தில்.
நான் ஒருநாள் விரக்தியில இருந்த சமயத்தில் தான் ராஜ்குமார் என்னிடம் வந்து பேசி பழகினான். எனக்கும் ஆறுதலாய் இருந்தது. அன்று அவனும் விரக்தியில் இருந்தான். அவன் விரக்திக்கு காரணம் அவன் ரூம் மேட் பகவான் ஒரு பாக்கெட் டேட்ஸ் (பேரிச்சை) வாங்கி ராஜ்க்கு கொடுக்காமல் சாப்பிட்டது தான். ராஜ் டேட்ஸ் வாங்கி மொட்டை மாடிக்கு வந்து என்னிடம் மனம்விட்டு பேசினான்.
அடுத்ததாய் அம்பத்தி ராயுடு கதைக்கு வருவோம். மேன்ஷனில் எங்கள் ரூமுக்கு பின்பக்க ரூமில் இருந்தான் அணிமேஷ். அனிமேஷின் தாடியிலும் நரை முடிகள் வந்து விட்டதால் தினமும் காலையில் சவரம் செய்து கொள்வான். மேன்ஷன் காமன் பாத்ரூம்ல் இரண்டில் ஒன்றை பிடித்துக் கொள்வான். அனிமேஷ் ஒரு வட இந்தியன் கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுவான்.
ஒருநாள் சன் குமார் என்னிடம் யாருனல அவன் டெய்லி காலையில உயிர வாங்குறான். அவன் பேரு என்ன என்றான் அனிமேஷை காட்டி. அந்த நாளில் எனக்கும் அவன் பெயர் தெரியாது. ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாய் நடந்த சமயம் என் வாயில் வந்த பெயரான அம்பத்தி ராயுடுவை அவன் பெயர் என்றேன். அம்பதி ராயுடு பாப்புலராக காலம் என்பதால் சன்குமாரும் நம்பி விட்டான்.
அதற்குப்பின்னால் அனிமேஷை எங்கு பார்த்தாலும் அம்பத்தி ராயுடு என்று கூப்பிட்டான். அவன் அந்தப் பெயரை தமிழில் கொச்சையான பெயர் என்று நினைத்துக்கொண்டான்.
கொஞ்ச நாள் கழித்து நண்பர்கள் குழாமோடு சேர்ந்து அம்பத்தி ராயுடு பீர் அடித்தான். அரை பீரில் போதையான ராயுடு சன் குமாரை நோக்கி வந்து "இப்போ சொல்லுடா அம்பதி ராயுடு சொல்லு, அம்பத்தி ராயுடு சொல்லு" என்றான்.
எனக்கும் தினேஷ்க்கும் மட்டும் விவரம் தெரிய விழுந்து விழுந்து சிரித்து அம்பத்தி ராயுடுவை சமாதானம் செய்து துணி துவைக்க அனுப்பிவைத்தோம்.
இரவு 11மணிக்கு அம்பத்தி ராயுடு பனியனை விட்டுவிட்டு தரையில் சோப்பு தோய்தான் .போதையில் அன்று சிரித்து வயிறு வலித்து விட்டது.
மார்க்கெட் பக்கத்தில் மேன்ஷன் இருந்தாலும் மார்க்கெட்டுக்கு அதிகம் யாரும் போனதில்லை.
வ குவாட்டர் கட்டிங் பட சூட்டிங் நடந்தது கூட காலையில் தான் எங்களுக்குத் தெரியும்.
ஒரு நண்பர்கள் தின இரவில் தினேஷும் பழனி சங்கரும் மார்க்கெட் சப்வே பக்கத்தில் போய் போலீசிடம் அடிவாங்கி திரும்பி வந்தனர். காரணம் தினேஷ் போலீஸிடம் சொன்ன வாக்கிங் வந்தோம் என்ற பொய்.
மற்றொரு நாள் இரவில் நான், மார்த்தாண்டம், தினேஷ் மற்றும் ஜாகிர் ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்ய போனது சுவாரஸ்ய சம்பவம்.
வாராவாரம் கிரிக்கெட் விளையாட ஏர்போர்ட் எதிரில் உள்ள மைதானத்துக்கு சென்று வருவது ஆனந்தம். மேன்ஷனில் தான் கிரிக்கெட்டை மிகவும் நேசித்தோம். 2011 உலக கோப்பை போட்டிகளை கொண்டாடினோம்.
குறிப்பாக இறுதிப் போட்டி முடிந்து கூத்தாடி விட்டு இரவு உணவுக்காக அலைந்து இரவு ஒரு மணிக்கு உணவு கிடைத்ததை விட இந்திய ஜெயிச்சது தான் சந்தோஷம்.
காலையில் நந்தனம் செல்ல 23c காக அண்ணா ஆர்ச் பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பது ஒரு தனி சுகம்.
சேத்துப்பட்டு அலுவலகத்துக்கு ரயிலில் சென்று வந்தது இன்னும் இன்பம். விடுமுறை நாட்களில் இரவுகள் மட்டும் நீண்டு கொண்டே இருக்கும்.
வியாழக்கிழமை ஆனந்த விகடன் எனக்காக எடுத்து வைக்கும் பெட்டி கடைகாரர், காலையில் நாங்கள் சென்றால் மூணு இட்லி வடை வைத்து நீட்டும் மரண விலாஸ் 2 ஓனர், மற்றவர்களுக்கு மதிய புளி சாதத்தை ப்ரைடு ரைஸில் கலந்தாலும் எங்களுக்கு கலக்காத மரண விலாஸ் 1 ஓனர், காலையில் எத்தனை பேர் காத்திருந்தாலும் முதலில் எனக்கு டீ தரும் டீக்கடைகாரர், விளையாடிவிட்டு வரும் போது வாஞ்சையாக லெமன் சோடா போட்டு தரும் பாட்டி மறக்க முடியாதவர்கள்.
விடுமுறை நாட்களில் பகலில் பேப்பர் பந்தில் வியர்க்க விறுவிறுக்க விளையாடுவது/ சண்டை போடுவது வழக்கம். மாப்பிள்ளை மார்த்தாண்டம் வந்த பின் வாக்குவாதங்களளே அதிகம் நடக்கும்.
தினேஷ் இருக்கும் வரை ரூமில் அதிகம் ஹிந்தி படங்களை கம்ப்யூட்டரில் ஓடும். குறிப்பாய் 3 இடியட்ஸ் லகான் தாரே ஜமீன் பர்.
மேன்ஷனில் ஒரு வெறிநாய் திரிந்த போது கிரிக்கெட் பேட்டுகள் மற்றும் ஸ்டம்புகளே எங்களை காப்பாற்றியவை.
அருண் விசாகப்பட்டினத்தில் இருந்த மூன்று மாதம் அருண் ரூமுக்கு நானும் ரிஸ்வானும் தான் ஓனர். ஆண்டு அனுபவித்தோம். அருண் தான் வாடகையும் கேபிள் பில்லும் கட்டியது.
மேன்ஷனில் ஓனரை வருத்தி எடுப்பது இன்னொரு பொழுதுபோக்கு. அதில் தினேஷ் கைதேர்ந்தவன், 'ராஜா அவன் காசு கேட்டால் சிரிக்கிறான் ராஜா' என்பார் ஓனர்.
சைதை மேன்ஷனில் துணி துவைப்பது தவிர மற்ற எல்லா விஷயங்களும் சந்தோசத்தை கொடுத்தது.
மேன்ஷனை சுற்றி என்னவெல்லாம் மாறினாலும் மேன்ஷன் மாறவே இல்லை. மொட்டை மாடி ரூம் ரொம்ப வசதி.
விடுமுறை நாட்களில் காலையில் காக்காகளுக்கு நடுவே நண்பர்கள் குழாமில் யாராவது மொட்டை மாடியில் படுத்து இருப்பர் போதையில்.
ரிஸ்வானின் சங்கீத மேகம், சங்கரின் தூளியிலே ஆட வந்த பாடலில் விழித்த காலைகள், தினேஷ் வந்தபின் ஏதாவது ஒரு எஸ்பிபி பாடலில் தான் விடிந்தது. என் செல்போன் மூங்கில் காடுகளே பாடலை இசைக்க மறந்த அன்று களவு போய் இருந்தது.
அந்த செல்போன் திருடனை கடைசி நாள் வரை தேடினேன் கையில் சிக்கவில்லை.
குடியும் குடித்தனமுமாக இருந்த மேன்ஷனில் குடியாதவர்களும் குடிகாரனின் உடல் மொழியை கற்றுக் கொண்டோம்.
நதிக்கரையில்தான் நாகரிகங்களின் தோன்றுகின்றன. அடையாறு நதிக்கரையில் இருந்த மேன்சன் தான் சந்தோஷமான நினைவுகளை தந்தது.
No comments:
Post a Comment