கல்லூரி நாட்களில் ஒருநாள் முத்து சங்கர் வந்து நேவிக்கு இன்டர்வியூ நடப்பதாய் சொன்னான். ஹாஸ்டலில் இருந்த ஒரு சிலர் கிளம்பி சுங்கான்கடை சேவியர் கல்லூரியில் நடந்த இன்டர்வியூக்கு போனோம். அது ஒரு ஆரம்ப நிலை என்று என்பதால் GK மட்டுமே கேட்டார்கள்.
முக்கியமாய் துணை குடியரசுத்தலைவர் பெயரைக் கேட்டனர். எனக்கு முன்னால் போன முத்து சங்கர் அந்த கேள்வி கேட்கிறார்கள் என்று சொல்லிவிட்டான்.
ஒரு சில நாட்களில் நானும் முத்து சங்கரும் தேர்வு பெற்றதாக அறிவித்தனர். டேஸ் ஸ்காலரில் அஜுவும், சீனிவாசனும் தேர்வு பெற்றனர்.
அடுத்த கட்ட இன்டர்வியூ போபாலில் நடைபெறும் என்று சொன்னார்கள். நோட்டீஸ் போர்டில் எங்கள் பெயர் ஓட்டியதால் பெருமிதத்தோடு அலைந்தோம்.
போபால் செல்ல முத்து சங்கரே டிக்கெட் புக் பண்ணினான். அவன் ஏற்கனவே இதுபோன்ற SSB இன்டர்வியூக்கு போய் இருக்கிறான்.
போபால் செல்ல திருநெல்வேலியிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தோம். எழும்பூர் ரயில் நிலையத்தில் குளித்துவிட்டு எங்களுக்கு project சமயத்தில் ஏற்கனவே பரிச்சயமான அயனாவரம் செல்ல முடிவு செய்தோம். காலையில் அபிராமியில் போக்கிரி படம் பார்த்தோம். அதன்பிறகு அயனாவரம் ராதா தியேட்டரில் ஒரு படம் பார்த்தோம்.
சாயங்காலமே சென்ட்ரலுக்கு வந்து விட்டோம், இரவு 12 மணிக்கு போபால் ரயில். கொஞ்ச நேரம் எங்கள் பக்கத்தில் இருந்த நேபாளியுடன் பேசிக்கொண்டிருந்தோம். 12 மணிக்கு ரயில் ஏறி படுத்து விட்டோம். காலை 6 மணிக்கு ரயில் விஜயவாடா ஆற்று பாலத்தை கடக்கையில் எழுந்து கொண்டோம்.
அரவாணிகள் வந்து காசு கேட்டு செல்கையில் ரொம்ப பயந்து விட்டோம். அடுத்து எப்போ வருவாங்களோ என்று பயமாயிருந்தது. வாரங்கல்லில் அடுத்து வந்து காசு கேட்டார்கள்.
அன்று கிரிக்கெட் போட்டி, நிற்கும் ஸ்டேஷனில் எல்லாம் இறங்கி ஏதாவது டிவி இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றோம்.
மாலை 6 மணிக்கு நாக்பூர் சென்றது. அப்போதுதான் குளிர ஆரம்பித்தது. அது வரையில் அது போன்ற குளிரை இருவரும் பார்த்ததில்லை. பகலில் விதவிதமான மனிதர்கள், விதவிதமான வியாபாரிகள் என வேடிக்கை பார்த்தே கழித்துவிட்டோம். இரவு படற எதைத் தொட்டாலும் குளிர்ந்தது.
12 30 க்கு போபால் போய்விட்டோம். இறங்கி நடக்கும்போது பின்னால் பரிச்சயமான குரல். அஜுவும், சீனியும், அவர்கள்கூட சேவியர் கல்லூரி மாணவர்கள் 2 பேர். அதில் ஒருவனுக்கு கொஞ்சம் இந்தி தெரியும்.
குளிர் தாங்க முடியலடா ஏதாவது லாட்ஜில் தங்கலாம் என்றேன்.அவர்கள் நால்வரும் ஒத்துக்கொள்ளவில்லை. ரயில் நிலைய வெயிட்டிங் ஹாலில் போய் செய்தித்தாள் விரித்துப் படுத்தோம். அரை மணி நேரத்தில் செய்தித்தாள் நனைந்தது போல குளிர்ச்சி.
பின்பு ஒரு வழியாய் லாட்ஜ்க்கு போக சம்மதித்து விட்டார்கள். ஹிந்தி தெரிந்த தற்காலிக நண்பன் ஆட்டோ பேசினான். ஆட்டோகாரன் தஸ் ருப்பியா என்றான்.
பத்து ரூபாய் தான் கேட்கிறான் நம்ம ஊர்ல குறைஞ்சதே இருபது ரூபாய் என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவில் ஏறினோம். ஒரு பாலம் ஏறி தண்டவாளத்தை கடந்து ரயில்வே ஸ்டேஷன் மறு பக்கத்தில் ஒரு லாட்ஜில் நிறுத்தினார்.
10 ரூபாய் கொடுத்த போதே, ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் என்று சண்டை போட்டு பிடுங்கிக் கொண்டான். அதற்குப்பின் யாரைப் பார்த்தாலும் ஏமாற்றுக்காரர் போலவே தெரிந்தது.
லாட்ஜில் வேலை செய்த பெரியவர் ஒருவர், காலை எழுந்தவுடன் டீ வாங்கி வரட்டுமா என்று கேட்டார். டீ எவ்வளவு என்று வியப்பாய் கேட்டோம். டீ ரெண்டு ரூபா, 2.50 குடுத்தா நாலு பேரு டீ காசுல நான் ஒரு டீ குடிப்பேன் என்றார் இந்தியில். அவர் அப்பாவி தான்.
காலை 10 மணிக்குத்தான் குளிர் விலகியது. மதியம் 2 மணிக்கு பஸ்ஸில் வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள்.
போன இடத்தில் முந்தின நாளே வந்த பசங்க எங்களை (என்னையும் முத்து சங்கரையும்) ராகிங் செய்வது போல் மிரட்டினார்கள். நாங்கள் ஹிந்தி தெரியாது என்று சொன்னபோது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுவிட்டு எங்கள் பதிலைக் கேட்டு ஹிந்தியில் அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டனர். நான் கொஞ்சம் கோபப்பட்டேன். முத்து சங்கர் ரொம்பவே கோபப்பட்டான். கோபம், பயம், ஆத்திரம் ஒருசேர இருந்தது.
மாலையில் வெரிஃபிகேஷன்க்கு கூப்பிட்டார்கள், பெயரைச் சொல்லி (சத்தமாக) இனிஷியலை சொல்லி 'எஸ்' என்றும் சொல்ல சொன்னார்கள். எனக்கு இனிஷியலும் 'எஸ்' என்பதால் இரண்டு எஸ்க்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டேன். என்னை திட்டி விட்டார் அந்த அதிகாரி. ஹிந்தி தெரியாதவர்களை கடிந்து கொண்டார்கள். ஹிந்தி தெரியாமல் கப்பல் படையில் வேலை பார்க்க இயலாது என்று முன்பே சொல்லியிருந்தால், நான் போபால் வரை போக வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இரவு சீனியர்கள் (ஒருநாள் சீனியர்) ராகிங் பண்ணுவார்கள் என்ற பயம் வேறு, அப்போதே ஊருக்கு கிளம்பலாம் என்று நினைக்க வைத்தது.
இரவு சீனியர்கள் இல்லாத வேறு அறைக்கு சென்று விட்டோம். மறுநாள் காலையில் முதல் கட்ட இன்டர்வியூ குரூப் டிஸ்கஷன். எனது குரூப்பில் இரண்டு பேரைத் தவிர 18 பேரும் தமிழர்கள் சந்தோசமாய் இருந்தது. இரண்டு கர்நாடக பையன்கள் அழகாய் படித்துவிட்டு வந்து இருந்தார்கள்.
நானும் ஆங்கிலத்தில் படம் பார்த்தும் கதை சொன்னேன். ஒரு வழியாக தேர்வாகவில்லை. தேர்வாகதவர்கள் ரயில் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பலாம் என்ற போது முத்து சங்கரும் நண்பேண்டா என்று சேர்ந்து கொண்டான்.
ரயில் நிலையத்திற்கு சென்றால் இரவு கேரளா எக்ஸ்பிரஸ்ஸில் RAC 1 டிக்கெட் மட்டுமே இருந்தது. நாங்கள் ஆறு பேர் தமிழ் பசங்க இருந்தோம்.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டோடு ரயில் ஏறினோம், இரவு ஒரு மணிக்கு. மற்ற நாலு பேரும் எங்களுக்கு ஒத்துப் போனார்கள். நீங்க நாலு பேரு நேற்று என்கூட இருந்தா அந்த இந்திகாரனுகள அழவிட்டிருக்கலாம் என்றேன்.
ரயிலேறி டிடிஆர் இடம் கெஞ்சி, காலை 6 மணிக்கு நாக்பூரில் சீட் கிடைத்தது. அப்புறம் அரட்டையை ஆரம்பித்தோம்.
அவர்களில் 2 பேர் நாகர்கோயில், ஒருவன் சேலம், மற்றொருவன் கோயம்புத்தூர். வட இந்திய பயணம் இரண்டு நாட்களில் இட்லி தோசை மேல் காதல் கொள்ள வைத்தது.
இரவு உணவுக்காக ரேணிகுண்டாவில் தோசை வாங்கி ஆறு பேரும் அவசர அவசரமாய் ரயிலேறி சுவைத்தால் தோசையில் ஒரே சுவை புளிப்பு சுவை. தோசை தூக்கிப் போட்டுவிட்டு பிஸ்கட் சாப்பிட்டு தூங்கினோம்.
சேலம், கோயம்புத்தூர் நண்பர்கள் இறங்கிவிட காலையில் கேரளாவில் முத்து சங்கர் டிபன் வாங்கி வைத்திருந்தான்.
எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் அறிவிப்பு ரயில் 'நிக்கினு' என்று சொன்னதைக் கேட்டு முத்து சங்கர் விழுந்து விழுந்து சிரித்தான்.
திருவனந்தபுரத்தில் இறங்கி பஸ் பிடித்து கல்லூரி வரும்போது நானும் முத்து சங்கரும் பேசிக்கொண்டோம்.
இன்டர்வியூ நல்ல படியா போச்சு, மே மாசத்துல ரிசல்ட் சொல்வார்கள் என்று எல்லோரிடமும் சொல்லி விடுவது என்று.
அஜுவும் ஸ்ரீனிவாசனும் போபாலில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து.
No comments:
Post a Comment