தமிழ்ப் புத்தாண்டு நிறைய அரசியல், சர்ச்சைகள் நிலவி வருகிறது. அது குறித்த எனது பார்வை.
தமிழ்ப் புத்தாண்டு தற்போது ஏப்ரல் மாதத்தில் அதாவது சித்திரை 1ல் இருக்கிறது. ஒரு சாரார் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு இல்லை. தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்கிறார்கள்.
தை 1 அறுவடை திருநாள், சித்திரை 1 புத்தாண்டு என்பது மற்றொரு சாராரின் வாதம்.
சரி தமிழ்ப் புத்தாண்டு எப்போது தான்? சங்க கால நூல்களை முறையாக படித்தவர்கள் சொல்வது. சங்க நூல்களில் புத்தாண்டு குறித்து எந்த தகவல்களும் இல்லை என்பது.
அதே சமயம் ஆதித்தமிழன் அறிவு வளர்ச்சி பெற்றிருந்தவன் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. கீழடியும் அதை நிரூபித்தது. தமிழர்கள் நிச்சயம் அறிவுபூர்வமாக புத்தாண்டை நிர்ணயித்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
உலகில் பிற நாடுகளில் பாரம்பரிய புத்தாண்டுகள் எப்போது என்று பார்க்கலாம். பிப்ரவரியில் புத்தாண்டு வடகிழக்கு ஆசிய நாடுகளில் (சைனீஸ்), இந்தியா, பர்மாவில் ஏப்ரலில், எத்தியோப்பியாவில் செப்டம்பரில், யூதர்களின் புத்தாண்டு செப்டம்பர், அக்டோபரில், ஸ்காட்லாந்து புத்தாண்டு டிசம்பர் 31 - ஜனவரி 1. இதில் சில நாடுகளின் புத்தாண்டுகளை நான் எடுத்துக் கொள்ளவில்லை.
உற்று நோக்கினால் மேற்கூறிய புத்தாண்டுகள் எல்லாமே சூரிய சுழற்சி அடிப்படையில் இருக்கும்.
தை 1 தமிழ்ப் புத்தாண்டாக என்ன காரணம்? பாரதிதாசன் சொல்லி இருக்கிறார். அண்ணா சொல்லி இருக்கிறார் என்பது. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு. 60 ஆண்டுகள் என்பது ஆரியத்திணிப்பு அதில் சந்தேகமே இல்லை. அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஓரளவு தமிழார்வம் உள்ள ஒருவரிடம் கேளுங்கள் இப்போது என்ன ஆண்டு என்று. விஸ்வாசமா? நேர் கொண்ட பார்வையா? சரியாகத் தெரியவில்லை என பதில் வரும்.
மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என மாறியது, இந்த மாற்றம் அலகாபாத் - பிரயாக்ராஜ் போல சாதாரணமாக மாறிவிடவில்லை. போராடி தான் மாற்றம் வந்தது. தமிழ்நாடு என்று மாறிய போதே தமிழ்ப் புத்தாண்டை ஏன் தைக்கு மாற்றவில்லை என்பது பெரிய கேள்வி.
தை தமிழ்ப் புத்தாண்டுக்கு காரணமாக சொல்லப்படுவது திருவள்ளுவர் ஆண்டு தமிழறிஞர்களால் தொடங்கப்பட்டது. தமிழுக்கு தனி ஆண்டு வேண்டும் என்பதால் திருவள்ளுவர் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவள்ளுவர் தினம் தை 1 அல்ல தை 2.
ஆனால் அதுவும் ஜூன் 2ல் இருந்து தை 2க்கு மாற்றப்பட்டது. இப்போது தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 இல்லை என்பது ஒரு குறிப்பிட்ட கட்சினர் ஆர்ய எதிர்ப்பு என்ற பெயரில் செய்வது. அதே சமயம் அவர்களின் சன் டிவி தொடங்கப்பட்டது எப்போது தெரியுமா? சித்திரை 1ல்.
இங்கே திராவிடம் என்ற சொல்லாடலே ஆரிய எதிர்ப்பிற்காக. அதே சமயம் கீழடிக்குப் பிறகு திராவிடம் என்ற சொல்லை முன்னிருத்த வேண்டிய அவசியமில்லை. திராவிட குடும்பத்தில் மற்ற மொழியினர் தங்களது மொழியினை தூக்கி பிடிக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடம் என தூக்கிப்பிடிக்க வேண்டும்?.