Saturday, 25 January 2025

பத்மபூசனுக்கு

அமராவதியில் ஆரம்பம்

குட் பேட் அக்லி வரை

கலைத்துறையில் நீ படைத்த

வரலாறுக்கு உன்னைத்தேடி

வந்துள்ளது பத்மபூசன்.

விருது பெற இருக்கும்

ஆசை நாயகன் அஜித்ஜிக்கு 

விஸ்வாசம் மிக்க ரசிகனின் கடிதம்!

ராஜாவின் பார்வையிலே பட்டுவிட

கல்லூரி வாசலில் 

வான்மதி, பவித்ரா என 

ரெட்டை ஜடை வயசு பெண்களை

காத்திருக்க வைத்த

மைனர் மாப்பிள்ளை நீ !

காதல் கோட்டையில் 

காதல் மன்னாக பிரேம புஸ்தகம் 

படித்தவன் நீ !

அவள் வருவாளா 

என்னை தாலாட்ட வருவாளா,

என்று காத்திருந்த உன்னிடம் 

ஷாலினி சொன்னது,

உன்னைக் கொடு என்னைத் தருவேன் என்று 

உனது பதில்

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று

அன்று முதல் ஷாலினி வீட்டு 

தோட்டத்தில் பூவெல்லாம் உன் வாசம்,

என் வீடு என் கணவர் என்று

பெருமிதம் கொண்ட ஷாலினி

வாழ்வெல்லாம் ஆனந்த பூங்காற்றே !

உனது பகைவன்கள், வில்லன்கள்

உன்னை பழித்த ஊடகங்களுக்கு

ஆஞ்சநேயாவாக வலிமையை

காட்டியது உன் துணிவு !

தெரிந்த கதையை வைத்தே

மாஸ் காட்டியது பில்லா

ராஜா, ஜனா, தீனா, அசோகா, வாலி

பரமசிவன், ஆழ்வார், திருப்பதி

என்ற அடைமொழியுடன் 

திரியும் ரசிகர்களின்

மனதில் நீங்கா இடம் பெற்றது 

பில்லா II !

தொழிலாளர் நலனில்

நீ காட்டுவது நேர்கொண்ட பார்வை

தீங்கான விளம்பரங்களுக்கு

நீ காட்டியது ரெட் கார்டு !

அட்டகாசமாக அமர்க்களமாக 

சென்ற நேசம் மிகுந்த

உன் வாழ்வில் உயிரோடு உயிராக 

பிறந்த அசல் வாரிசுகள் 

அனோஷ்கா & ஆத்விக் !

மற்றவர்கள் உல்லாசமாக 

மங்காத்தா விளையாட

நீ தேர்வு செய்து சாதித்தது

துப்பாக்கி சுடும் போட்டியில் !

நீ வருவாய் என 

நிறைய தயாரிப்பாளர்கள் 

காத்திருக்க உன் சிறுவயது

கனவான ரேஸ்

வேதாளமாய் உன் தோளில் 

களத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்றாய்

விடாமுயற்சியால் 53 வயதில்

வென்றாய்

இந்திய சிட்டிசனாய்

பெருமை சேர்த்தாய் !

ஏகன் இறைவன் ஆசியால்

இந்த ஆண்டு உனக்கு

ராசியான ஆண்டு 

இங்கிலீஷ் விங்கிலீஷ் நாடுகளில் 

இன்னும் பல கிரீடம் சூட போகிறாய் !

என்னை அறிந்தால் உன்

குடும்பத்தை முதலில் கவனி

அதுவே வீரமான விவேகம் என்றாய் !

அதற்காகவே இந்த 

பாசமலர்களின் அன்பு 

என்றும் தொடரும் !!!





Monday, 13 January 2025

சொந்தங்கள்

அடிக்கடி கோபப்பட்டு 

வீட்டை விட்டு செல்லும் தம்பி 

ஒசூரிலோ, திருப்பூரிலோ

மும்பையிலோ சென்று

கஷ்டப்பட கூடாதென்று 

சாமி உண்டியலில் காசு 

போட்டு வைத்திருப்பார்

சித்தப்பா !!!

****

கையில் காசு இல்லை 

என்றாலும் கடன் சொல்லி 

தங்கச்சி மகனுக்கு 

காப்பியோ, கலரோ வாங்கித்

தர முற்படுகிறார் 

தாய் மாமா !!!

****

என்ன கேட்டாலும் 

அப்பா வாங்கி தருவார் 

என்ற நம்பிக்கையில் 

பாராசுட் கேட்கிறாள் 

மகள் !

எங்கள் இளவரசிக்கு 

சிறகு முளைக்க 

தொடங்கிவிட்டது !!!

****

புத்தகங்கள் வாசிக்கும் போது 

நம் மனைவியும் பெண்

எவ்வளவு கஷ்டங்களை 

தாங்கிக் கொள்கிறாள்

என்று சஞ்சலப்படும் மனசு,

பாலை காய்ச்சி தரச்

சொல்லும் போது 

புத்தகத்தை தூக்கி எறிகிறது !!!

****

விருப்பு, வெறுப்புகள் 

வேறுபட்டாலும் ஏதோ ஒரு 

புள்ளி இணைக்கிறது.

சாதி, அரசியல், மதம், கிரிக்கெட், சினிமா

என சண்டையிட சரியான

களம் தான் சந்து !

நேரில் பார்த்திராவிட்டாலும் 

அண்ணனாய், நண்பனாய்

நினைத்து மகிழ்ச்சி தருகிறார்கள் 

சந்து வாழ் சொந்தங்கள் !!!

****



Tuesday, 7 January 2025

மாறிப் போன திருநெல்வேலி

திருநெல்வேலி நகரில் முக்கிய இடம் சந்திப்பு பேருந்து நிலையம். திருநெல்வேலி காரர்களுக்கு ஜங்ஷன். ஜங்ஷன் என்பது பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே இருக்கும் இடம். அது போக நிறைய புத்தகக் கடைகள், சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி லாலா கடை, இளங்கோ, ருசி புரோட்டா கடை, சாமானியர்களுக்கான பாரதி, வசந்த பவன், அசோகா ஓட்டல்கள். உயர்தர பரணி, ஜானகிராம், ஆர்யாஸ் ஓட்டல்கள், பாரதி, செயின்ட் மேரிஸ் மெடிக்கல்கள் என சகலமும் நிறைந்த இடம். இது ஒரு காலத்தில்.

பேருந்து நிலையத்தை இடித்து மறு கட்டமைப்பு செய்ய போகிறார்கள் என்றதும் மக்கள் நினைத்தது ஆறு மாதத்தில் முடித்து விடுவார்கள் என்று. தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் பொருட்காட்சி திடல் மற்றும் வண்ணார்பேட்டையில் உதயமானது. அதிக பேருந்துகளை கையாண்ட வண்ணார்பேட்டையில் கழிவறை வசதி இல்லை. 

பெரிய கஷ்டத்திற்கு உள்ளானது தச்சநல்லூர், தாழையூத்து செல்லும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் மக்கள். மாலையில் சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்தில் இந்த பேருந்துகளை நிறுத்த வேண்டி இருந்ததால் ஆம்னி பஸ்களின் அராஜகம் அதிகமாக இருந்தது.

சரி பேருந்து நிலைய கட்டிடத்திற்கு வருவோம். புதிய கட்டிடத்திற்கு தோண்டிய போது அள்ள அள்ள ஆற்று மணல் மற்றும் கனிமங்கள். கட்சி பாராது அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி அள்ளினார்கள் பணத்தை. ஆறு ஆண்டுகளுக்கு பிறகே பேருந்து நிலையம் தயாரானது, பொறியியல் கல்லூரிகளுக்கு உரித்தான கட்டட அமைப்புடன். நிறைய கடைகள், குறைவாக பேருந்து நிறுத்தும் இடம் என்ற அடிப்படையில்.

மக்களே ஜங்ஷனை பயன்படுத்த மறந்த பிறகு ஜங்ஷன் பேருந்து நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் பாளையங்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்த இட வசதி இருந்தாலும், மானூர், தாழையூத்து,  பேட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிறுத்தி செல்ல போதுமான இடவசதி இல்லை. ஆனாலும் சில சேரன்மகாதேவி பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையமான வண்ணார்பேட்டை வரை செல்கின்றன.

பாளையங்கோட்டையில் ஒரு பேருந்து நிலையம் இருந்தது. பேருந்து நிறுத்தம் போல செயல்படும் இந்த நிலையத்தில் ஆற்றுமணல் இல்லை என்றாலும் வேறு ஏதாவது கிடைக்கும் என்று அரசும் அந்தப் பேருந்து நிலையத்தை உடைத்தது. 

பொதுவாக அதிக பேருந்துகள் இயக்கப்படும் இடம் அரசு மருத்துவமனைக்கு. அதில் மார்க்கெட் வழி, பாளை பஸ் ஸ்டான்ட் வழி என பேருந்துகள் செல்லும். பாளை பஸ் ஸ்டான்டை உடைத்ததும் அனைத்து பேருந்துகளும் மார்க்கெட் வழி இயக்கப்பட்டன. சவேரியார் கல்லூரிக்கு பேருந்தே இல்லை என்ற நிலை. பாளை பேருந்து நிலையம் திறக்கப்பட்டது, ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகள் நிற்கும் வசதி கொண்ட பேருந்து நிலையம், ஒரே ஒரு பேருந்து நிற்கும் வசதியுடன், புதுப்பொலிவுடன்.

ஆனாலும் அரசு மருத்துவமனைக்கு பாளை பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் மாற்றப்படவில்லை. யாரும் கண்டுகொள்ளவுமில்லை. தனியார் பேருந்துகளுக்கு சமாதானபுரம் ஒரு முக்கிய நிறுத்தம், தூத்துக்குடி, திருச்செந்தூர் பேருந்துகளில் வருபவர்கள் நகரத்துக்குள் செல்ல சமாதானபுரம் முக்கிய இடம். அதனால் அவர்கள் பாளை பஸ் ஸ்டான்ட் வழிக்கு மாறவே இல்லை.

தனியார் பேருந்துகள் இன்னொரு மாற்றமும் செய்துள்ளனர். அது என்னவென்றால் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 10 ரூபாய், யாராவது விளக்கம் கேட்டால் 8 ரூபாய். அரசு நிர்ணயித்த 6 ரூபாய் கட்டணம் கிடையாது.

அரசு போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா? ஜங்ஷன் பேருந்து நிலையம் இயங்கவில்லை என்றதும் ரயில் நிலையத்திற்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள் மட்டுமே. பாளை பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன, அதுவும் கூடுதல் கட்டண பேருந்துகள்.

நிறைய கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் காலியாக சென்றன. இதில் மகளிர் இலவசமும் சேர்ந்ததில் திக்குமுக்காடியது போக்குவரத்து கழகம். புதிதாக ஒரு வியூகம் செய்தது. அனைத்து பேருந்துகளின் தடம் எண்ணும் மாற்றப்பட்டது (2-o, 1-i போன்ற தடம் எண்கள் யார் சிந்தனையில் உதயமானது என்று தெரியவில்லை). டிஜிட்டல் பெயர் பலகை வந்தது. ஒரு பேருந்து ஒருமுறை ஒரு கிராமத்திற்கு சென்று வந்த பின் வேறு இடத்திற்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டது. கிராமங்களுக்கு வேறு வேறு பேருந்துகள் செல்லும் எத்தனை முறை என்பதில் தான் டுவிஸ்ட். 5 முறை இருந்த பேருந்துகள் 3-4 என்று ஆனது.

இதில் முக்கியப் பிரச்சினை எல்லா பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டனர். ஸ்டிக்கர் வேறு பெயர் பலகை வேறு என்பதில் பெரும் குழப்பம். நெல்லை சந்திப்பு - முத்தாலங்குறிச்சி என்று ஸ்டிக்கர் இருக்கும் பேருந்து எஸ்டிசி கல்லூரி செல்லும். 

நகரும் எழுத்துகள் இருப்பதால் குறுகிய நேரத்தில் பெயர்ப்பலகையை படிப்பது சிரமம். மகளிர்க்கு பிரச்சினை இல்லை அடுத்த நிறுத்தி இறங்கி கொள்ளலாம். இலவச பேருந்து தானே. ஆண்கள் நிலைமை பாவம்.

திருநெல்வேலி நகரில் முக்கிய இடமாக இருந்த ஜங்ஷனும், பாளை பஸ் ஸ்டான்ட்டும் போய் முக்கிய இடமாக வண்ணார்பேட்டையும், சமாதானபுரமும் மாறிவிட்டது.

இருசக்கர நான்கு சக்கர வாகன பெருக்கத்தால் பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. அதற்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வியூகத்தை மாற்றியுளனர்.