Thursday, 6 October 2022

பிளாஸ்டிக் அரக்கன்

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அல்வாவை வாழை இலையில் சுற்றி அதற்கு மேல் செய்தித்தாள் கொண்டு சுற்றி தந்தார்கள்.

பூ விற்பவர்கள் பூவரச இலைகள் பறித்து வைத்து அதில் பொதிந்து பூ கொடுத்தார்கள். ஓட்டலில் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு சென்றோம்.

அப்பாவோ, அம்மாவோ கயத்தாறு  தாண்டி சென்றால் ஓலைப் பெட்டியில் கருப்பட்டி மிட்டாயும் கார சேவும் வாங்கி வருவார்கள்.

மருத்துவமனைகளில் பரிட்சை பேப்பரில் மடித்து மாத்திரை தருவார்கள். யாரோ எழுதிய விடைத்தாள் என பார்ப்போம்.

பாலிதீன் கவர்கள் மிக அரிது. எப்போதாவது தான் வரும். மழை காலத்தில் நாங்கள் பயன்படுத்தும் கவரை கொங்காணி தாள் என்போம்.

எல்லா வீடுகளிலும் இருக்கும் போத்தீஸ் அல்லது ஆர்எம்கேவி கவர்களில் தான் முக்கியமான பேப்பர்கள் இருக்கும். அதுவும் ட்ரெங்க் பெட்டியில் தான் இருக்கும்.

90களின் இறுதியில் தான் பிளாஸ்டிக் கவர் என்ற அரக்கன் ஆட்சியை பிடித்தான். இன்று வேதாளமாக எல்லார் தோள்களிலும் ஏறிவிட்டான். 

2019 இறுதியில் தடை செய்யப்பட்டாலும் இன்றும் அந்த அரக்கனை ஒழிக்க முடியவில்லை. நீர் வழி சாலைகள் அனைத்திலும் நீங்காது நிரம்பியுள்ளான்.

முந்தைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் நல்ல திட்டமாக இருந்தாலும் முழுமையாக செயல்படுத்த விரும்பாத அரசுகள், பிளாஸ்டிக் கவர்கள் தடையை மட்டும் எப்படி செயல்படுத்தும்?

ஒயின் ஷாப் பார்களில் பிளாஸ்டிக் கப் இல்லை என்றால் குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள், அரசின் வருமானம் தடைப்படும்.

அரசினால் மட்டுமே இது சாத்தியம் இல்லை. தனி மனிதனின் பொறுப்புணர்வும் சேர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். 

திரையரங்கில் திரைப்படம் தொடங்கும் முன் போடப்படும் புகையிலை ஒழிப்பு விளம்பரங்கள் போல் பாலிதீன் கவர் ஒழிப்பு விளம்பரங்கள் போடலாம்.

பாலிதீன் கவர்கள்/கப்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு தடை செய்ய முன் வர வேண்டும். அவை விற்கப்படும் கடைகளையும் முடக்க வேண்டும்.

நடக்குமா ?



No comments:

Post a Comment