சனிக்கிழமை விடுமுறை என்றாலும் அலுவலகத்திற்கு வர சொன்னார்கள். காலையில் போன் செய்த மேனேஜர் நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.
அதற்கு பிறகு தான் போன் வந்தது. சித்தப்பா இறந்துவிட்டார் என்று தகவலை சுமந்து. சித்தப்பா தான் எங்கள் குடும்பத்தில் மூத்தவராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 70ஐ தாண்டி விட்டார். இன்னும் பத்தாண்டாவது இருந்திருக்கலாம் என்பது எங்கள் ஆசை. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.
இன்னொரு சித்தப்பாவின் மகனான சுரேஷிடம் இருந்து அடுத்த போன். அண்ணன், நான் கார்ல போறேன் நீயும் வா என்று. தினேஷ் மச்சானும் வராரு என்றான்.
தினேஷ் வேறு யாருமில்லை எனக்கு நெருங்கிய நண்பன். மாமா மகன். நான் அவனை பேர் சொல்லி அழைப்பேன். அவன் என்னை மாப்ளே என்றே அழைப்பான்.
மேனேஜருக்கு போன் பண்ணிவிட்டு கிளம்ப தயாரானேன்.
அடுத்த சில மணி நேரங்களில் தினேஷ்ன் கார் வந்தது. தினேஷ்ம் சுரேஷ்ம் முட்ட குடித்திருத்திருந்ததால் எங்கள் வீட்டிற்குள்ளே வரவில்லை. நான் காரில் டிரைவர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.
ஏன்டா, காலையிலே குடிச்சீங்க என்றேன். டிராவல்ல என்ஜாய் பண்ணதான் என்றான் தினேஷ். டிரைவரிடம் நீங்க குடிச்சீங்களா என்றேன்.
இது என் தொழில் சார், ஸ்டீரிங் தொடுற நேரத்தில் நான் தண்ணீ சாப்பிடுவதில்லை என்றார். அவரது வசனமே சொன்னது குறைந்த அளவில் குடித்துள்ளார் என்பதை.
கொஞ்ச நாளாகவே அலுவலக அழுத்தம் காரணமாக எங்காவது பயணிக்க வேண்டும் என்று தோன்றி கொண்டு இருந்தது.
வேலையை விட்டு விடலாம், வேறு வேலையை தேடிக் கொள்ளலாம் என்று கூட தோன்றுகிறது.
பெருங்களத்தூரை தாண்டியதும் சித்தப்பாவின் நினைவுகள் வந்தது.
சித்தப்பா, தாத்தா, அப்பா போல் நல்ல கருப்பு. வெளியே செல்லும் போது வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. வீட்டில் இருந்தால் சாரம். இப்போது கொஞ்ச நாளாக கலர் கலராக டீசர்ட் அணிந்தார். பிடித்திருக்கும் போல.
நல்ல கதை சொல்லி, பேச்சில் கிராமத்துக்கே உரித்தான எள்ளலும் நக்கலும் இருக்கும். தெனாலிராமன் கதைகள் எங்களுக்கு சொன்னது சித்தப்பா தான்.
என்னை மாதிரி படிக்காம இருந்துறாதீங்க. நல்லா படிங்க என்பார். அவருக்கு பேப்பர் வாசிக்க தெரியும். கணக்கு பார்க்க தெரியும். விவசாயமும் வியாபாரமும் தெரியும்.
முப்பாட்டன் காலத்தில் இருந்தே வந்துள்ள மூக்கு பொடி பழக்கத்தின் கடைசி வாரிசு அவர் தான். மூக்கு பொடிக்கென தனி டப்பாவெல்லாம் வைத்திருக்க மாட்டார். ப்ளாஸ்டிக் கவரில் வைத்திருப்பார். ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலால் எடுப்பார். விரலிடுக்கு போக மீதி ஒட்டி இருப்பதை உதறிவிடுவார். அது அடுத்தவன் கண்ணில் விழுந்தாலும் கவலைப்படமாட்டார்.
சூப்பர் சிங்கர் போல கண்களை மூடிக்கொண்டு இரண்டு மூக்கிலும் தேய்த்துவிட்டு வேட்டியில் துடைத்து கொள்வார்.
கார் டிரைவர் மதிய உணவுக்கு நிறுத்தவா என்று கேட்டார். பின்னாடி திரும்பி பார்த்தேன் இருவரும் தூங்கி கொண்டு இருந்தனர். எனக்கு பசியில்ல, அவனுக எந்திரிக்க மாட்டானுக. நீங்க சாப்பிடனும்னா சொல்லுங்க என்றேன். எனக்கும் பசியில்ல ஒரேயடியாக சாயங்காலம் டீ குடிக்க நிறுத்தலாம் என்றார் டிரைவர்.
காரின் வேகம் 100க்கு குறையாமல் இருந்தது, விவேகம் அவரது அனுபவத்தை காட்டியது.
மீண்டும் சித்தப்பா, அப்பாவோடு சண்டை போட்டு கொண்டாலும் பாசக்கார அண்ணன் தம்பிகள் இருவரும்.
சித்தப்பா அடிக்கடி பிடிக்காமல் எந்த விசயத்தையும் செய்யாதே என்று சொல்வார். பிடிச்சு செய்யும் வேலையில் நட்டம் வந்தாலும் பரவாயில்லை என்பார்.
என்னை விடுதியில் சேர்க்கும் போது இதை தான் சொன்னார். புடிக்கலைன்னா பத்தாவது நாளே வந்திரு, பார்த்துக்கலாம் என்றார்.
அதே போல் அழுது வடிந்து வெளிநாடு செல்ல இருந்த அண்ணனிடமும் (அவரது மகன்) சொன்னார். புடிக்கலைன்னா ஒரு மாசத்துல வந்துரு. ஊர்ல ஏதாவது பார்த்துக்கலாம் என்று.
புடிச்சதை செய்ய சொன்னதாலோ என்னவோ அண்ணன் விரும்பி குடிக்க ஆரம்பித்தான்.
மணி நாலரை தாண்டி, என் மனது மாலை தேநீரை எதிர்பார்த்தது. டிரைவரும் அதே மனநிலையில். வண்டியை டீக்கடையில் நிறுத்தினார். சுரேஷ் முகம் கழுவி சிகரட் பற்ற வைத்து டீ குடித்து கொண்டான். தினேஷ்க்கு மோர் தேவைப்பட்டது. லெமன் ஜீஸ் தான் கிடைத்தது.
சுரேஷ், நீ பின்னாடி உட்கார்ந்து கொஞ்ச நேரம் தூங்குன்னே என்று முன்னாடி ஏறிக்கொண்டான்.
ஊரில் இருந்து பக்கத்து வீட்டு சித்திரை அண்ணன் போன் பண்ணினான். ஸ்பீக்கரில் பேசினோம். ஆஸ்பத்திரியில் இருந்ததால இன்னைக்கே தூக்க போறோம் என்றான்.
சனிக்கிழமை என்று இழுத்தான் தினேஷ்.
ஒரு கோழி அடிச்சு பாடையில் கட்டிருவோம் என்று பரபரப்பாக பேசிவிட்டு வைத்தான் சித்திரை அண்ணன்.
இரவு எட்டு மணிக்கு ஒரு ஒயின்ஷாப்பில் நிறுத்தி மறுநாளுக்கான சரக்கை வாங்கி கொண்டனர்.
9.30க்கு ஊருக்கு போனோம். சித்தி சுரேஷை கட்டிபிடித்து அழுதாங்க. நான் சின்ன அண்ணனின் கைகளை பற்றி இருந்தேன். தினேஷ் பெரிய அண்ணனின் கைகளை பிடித்து இருந்தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தினேஷ் வீட்டு மொட்டை மாடியில் நான், தினேஷ், டிரைவர் மூன்று பேரும் தூங்கினோம்.
மறுநாள் ஆத்துக்கு போய்விட்டு கிணற்றில் குளித்தோம். பல ஆண்டுகளுக்கு பிறகு கிணற்று குளியல்.
மாலையில் டீ குடித்து விட்டு சென்னைக்கு கிளம்பினோம்.
திங்கட்கிழமை காலையில் அலுவலகத்திற்கு சென்று முதல் வேலையாக ரிசைன் லெட்டர் டைப் செய்தேன்.
No comments:
Post a Comment